பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 14. பக்குவன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தொழுதறி வாளர் கருதிகண் ணாகப்

பழுதறியாத பரம குருவை

வழியறி வார்நல் வழியறி வாளர்

அழிவறி வார்மற்றை யல்லா தவரே.  1 

 

 

பதைதொழிந் தேன்பர மாவுனை நாடி

யதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்

சிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர

உதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே.  2 

 

 

பதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை

விதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்

சிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி

இசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே.  3 

 

 

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக

எள்ளத் தனையும் இடைவிடா தேநின்று

தெள்ளி யறியச் சிவபதந் தானே.  4 

 

 

சோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு

ஓதிய நாளே உணர்வது தானென்று

நீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லது

ஆதியும் ஏதும் அறியகி லானே.  5 

 

 

தொழிலார மாமணித் தூய்தான சிந்தை

எழிலால் இறைவன் இடங்கொண்ட போதே

விழலார் விறலாம் வினையது போகக்

கழலார் திருவடி கண்டரு ளாமே.  6 

 

 

சாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி

ஆத்திக பேத நெறிதோற்ற மாகியே

ஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி

சாத்தவல் லானவன் சற்சீட னாமே.  7 

 

 

சத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்

சித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்

பத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்

சத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே.  8 

 

 

அடிவைத் தருளுதி யாசானின் றுன்னா

அடிவைத்த மாமுடி மாயப் பிறவி

அடிவைத்த காய அருட்சத்தி யாலே

அடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே.  9 

 

 

சீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல

வாராத காதல் குருபரன் பாலாகச்

சாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்

ஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே.  10 

 

 

உணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி

இணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்

குணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்

டுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே.  11 

 

 

இறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்

குறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்

சிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ

டறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே.  12 

 

 

வேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்

வாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து

வேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே

தாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே.  13 

 

 

சற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை

சற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே

சிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்

அற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14

 

திருச்சிற்றம்பலம்