பத்தாம்-திருமுறை

6ம் தந்திரம் - 06. தவ நிந்தை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

ஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்

காதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்

சாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்

போதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே.  1 

 

 

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்

சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்

சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்

சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே.  2 

 

 

விளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்

விளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்

விளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்

விளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே.  3 

 

 

கூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்

தேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி

வாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்

தூடிற் பலவுல கோரெத் தவரே.  4 

 

 

மனத்துறை மாகடல் ஏழுங் கைநீந்தித்

தவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்

பவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்

முகத்திடை நந்தியை முந்தலு மாமே.  5 

 

 

மனத்திடை நின்ற மதிவாள் உருவி

இனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்

புனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்

தவத்திடை யாறொளி தன்னொளி யாமே.  6 

 

 

ஒத்து மிகவு நின்றானை யுரைப்பது

பத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ

முத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்

சத்தான செய்வது தான்தவந் தானே.  7 

 

 

இலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி

மலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்

தலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்

தலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே.  8 

 

 

படர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்

கிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்

இடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்

உடரடை செய்வ தொருமனத் தாமே.  9 

 

 

ஆற்றிற் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்

ஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்

நோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்

சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே.  10 

 

 

பழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்

குழக்கன்று துள்ளியக் கோணியைப் புல்காக்

குழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்

இழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே.  11 

 

 

சித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்

சித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்

சித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்

சித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே.  12 

 

திருச்சிற்றம்பலம்