பத்தாம்-திருமுறை

5ம் தந்திரம் - 17. சத்திநிபாதம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இருட்டறை மூலை யிருந்த கிழவி

குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்

குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி

மருட்டி யவனை மணம்புரிந் தாளே.  1 

 

 

தீம்புல னான திசையது சிந்திக்கில்

ஆம்புல னாயறிவார்க்கமு தாய்நிற்குந்

தேம்புல னான தெளிவறி வார்கட்குக்

கோம்புல னாடிய கொல்லையு மாமே.  2 

 

 

இருள்நீக்கி எண்ணில் பிறவி கடத்தி

அருள்நீங்கா வண்ணமே யாதியருளும்

மருள்நீங்கா வானவர் கோனொடுங் கூடிப்

பொருள்நீங்கா இன்பம் புலம்பயின் றானே.  3 

 

 

இருள்சூ ழறையில் இருந்தது நாடிற்

பொருள்சூழ் விளக்கது புக்கெரிந் தாற்போன்

மருள்சூழ் மயக்கத்து மாமலர் நந்தி

அருள்சூழ் இறைவனும் அம்மையு மாமே.  4 

 

 

மருட்டிப் புணர்ந்து மயக்கமும் நீக்கி

வெருட்டி வினையறுத் தின்பம் விளைத்துக்

குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி

அருட்டிகழ் ஞான மதுபுரிந் தானே.  5 

 

 

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்

கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்

கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்

பின்னைப் பிறவி பிறிதில்லை தானே.  6 

 

 

செய்யன் கரியன் வெளியன் நற் பச்சையன்

எய்த வுணர்ந்தவர் எய்வர் இறைவனை

மைவென் றகன்ற பகடுரி போர்த்தவெங்

கைய னிவனென்று காதல்செய் வீரே.  7 

 

 

எய்திய காலங்கள் எத்தனை யாயினுந்

தையலுந் தானுந் தனிநா யகமென்பர்

வைகலுந் தன்னை வணங்கு மவர்கட்குக்

கையிற் கருமஞ்செய் காட்டது வாமே.  8 

 

 

கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி

பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்

வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்

நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே.  9 

 

 

அண்ணிக்கும் பெண்பிள்ளை அப்பனார் தோட்டத்தில்

எண்ணிக்கும் ஏழேழ் பிறவி யுணர்விக்கும்

உண்ணிற்ப தெல்லாம் ஒழிய முதல்வனைக்

கண்ணுற்று நின்ற கனியது வாகுமே.  10 

 

 

பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்

மறப்பை யறுக்கும் வழிபட வைக்குங்

குறப்பெண் குவிமுலை கோமள வல்லி

சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.  11 

 

 

தாங்குமின் எட்டுத் திசைக்குந் தலைமகன்

பூங்கமழ் கோதைப் புரிகுழ லாளொடும்

ஆங்கது சேரும் அறிவுடை யார்கட்குத்

தூங்கொளி நீலந் தொடர்தலு மாமே.  12 

 

 

நணுகினு ஞானக் கொழுந்தொன்று நல்கும்

பணிகிலும் பன்மலர் தூவிப் பணிவன்

அணுகிய தொன்றறி யாத வொருவன்

அணுகும் உலகெங்கு மாவியு மாமே.  13 

 

 

இருவினை நேரொப்பில் இன்னருட் சத்தி

குருவென வந்து குணம்பல நீக்கித்

தருமெனு ஞானத்தால் தன்செய லற்றால்

திரிமலந் தீர்ந்து சிவனவ னாமே.  14 

 

 

இரவும் பகலும் இலாத இடத்தே

குரவஞ் செய்கின்ற குழலியை உன்னி

அரவஞ்செய் யாமல் அவளுடன் சேரப்

பரிவொன்றி லாளும் பராபரை தானே.  15 

 

 

மாலை விளக்கும் மதியமும் ஞாயிறுஞ்

சாலை விளக்குந் தனிச்சுடர் அண்ணலுள்

ஞானம் விளக்கிய நாதன்என் உள்புகுந்(து)

ஊனை விளக்கி யுடனிருந் தானே.  16 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்
View Details
அகப்பேய்ச் சித்தர்
View Details
கழறிற்றறிவார் நாயனார்
View Details