பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 11. சாம்பவி மண்டலச் சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சாம்பவி மண்டலச் சக்கரஞ் சொல்லிடில்

ஆம்பதம் எட்டாக விட்டிடின் மேல்தாங்

காண்பதந் தத்துவ நாலுள் நயனமும்

நாம்பதங் கண்டபின் நாடறிந் தோமே.  1 

 

 

நாடறி மண்டலம் நல்லவிக் குண்டத்துக்

கோடற வீதியுங் கொணர்ந்துள் இரண்டழி

பாடறி பத்துடன் ஆறு நடுவீதி

எடற நாலைந் திடவகை யாமே.  2 

 

 

நாலைந் திடவகை யுள்ளதோர் மண்டலம்

நாலுநல் வீதியுள் நல்ல இலிங்கமாய்

நாலுநற் கோணமும் நந்நா லிலிங்கமாய்

நாலுநற் பூநடு நண்ணலவ் வாறே.  3 

 

 

ஆறிரு பத்துநா லஞ்செழுத் தஞ்சையும்

வேறுரு வாக விளைந்து கிடந்தது

தேறி நிருமல சிவாய நமவென்று

கூறுமின் கூறிற் குறைகளும் இல்லையே.  4 

 

 

குறைவதும் இல்லை குரைகழற் கூடு

மறைவது மாரண மவ்வெழுத் தாகித்

திறமது வாகத் தெளியவல் லார்க்கு

இறவில்லை என்றென் றியம்பினர் காணே.  5 

 

 

காணும் பொருளுங் கருதிய தெய்வமும்

பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்

ஊணும் உணர்வும் உறக்கமுந் தானாகக்

காணுங் கனகமுங் காரிகை யாமே.  6 

 

 

ஆமே எழுத்தஞ்சு மாம்வழி யேயாகப்

போமே யதுதானும் போம்வழி யேபோனால்

நாமே நினைத்தன செய்யலு மாகும்

பார்மேல் ஒருவர் பகையில்லை தானே.  7 

 

 

பகையில்லை என்றும் பணிந்தவர் தம்பால்

நகையில்லை நாணாளும் நண்மைக ளாகும்

வினையில்லை என்றும் விருத்தமும் இல்லை

தகையில்லை தானுஞ் சலமது வாமே.  8 

 

 

ஆரும் உரைசெய்ய லாமஞ் செழுத்தாலே

யாரும் அறியாத ஆனந்த ரூபமாம்

பாரும் விசும்பும் பகலும் மதியதி

ஊனும் உயிரும் உணர்வது வாமே.  9 

 

 

உணர்ந்தெழு மந்திரம் ஓமெனும் உள்ளே

அணைந்தெழு மாங்கத னாதிய தாகுங்

குணர்ந்தெழு சூதனுஞ் சூதியங் கூடிக்

கணந் தெழுங் காணுமக் காமுகை யாலே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர்
View Details
தண்டியடிகள் நாயனார்
View Details
ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர்
View Details