பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 05. சத்தி பேதம் - திரிபுரை சக்கரம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

மாமாயை மாயை வயிந்தவம் வைகரி

ஓமாயை உள்ளொளி ஓராறு கோடியில்

தாமான மந்திரம் சத்திதன் மூர்த்திகள்

ஆமாய் அலவாந் திரிபுரை யாங்கே.  1 

 

 

திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்

பரிபுரை நாரணி யாம்பல வன்னத்தி

இருள்புரை ஈசி மனோன்மனி என்ன

வருபல வாய்நிற்கும் மாமது தானே.  2 

 

 

தானா அமைந்தஅம் முப்புரம் தன்னிடைத்

தானான மூவுரு ஓருருத் தன்மையள்

தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்கல்வி

தானான போகமும் முத்தியும் நல்குமே.  3 

 

 

நல்குந் திரிபுரை நாதநா தாந்தங்கள்

பல்கும் பரவிந்து பாரண்ட மானவை

நல்கும் பரைஅபி ராமி அகோசரி

புல்கும் அருளும்அப் போதந்தந் தாளுமே.  4 

 

 

தாளணி நூபுரம் செம்பட்டுத் தானுடை

வாரணி கொங்கை மலர்க்கன்னல் வாளிவில்

ஏரணி அங்குச பாசம் எழில்முடி

காரணி மாமணிக் குண்டலக் காதிக்கே.  5 

 

 

குண்டலக் காதி கொலைவிற் புருவத்தள்

கொண்ட அரத்த நிறமன்னு கோலத்தள்

கண்டிகை ஆரம் கதிர் முடி மாமதிச்

சண்டிகை நாற்றிசை தாங்கிநின் றாளே.  6 

 

 

நின்ற திரிபுரை நீளும் புராதனி

குன்றலில் மோகினி மாதிருக் கும்சிகை

நன்றறி கண்டிகை நாற்கால் கரீடணி

துன்றிய நற்சுத்த தாமரைச் சுத்தையே.  7 

 

 

சுத்தவம் பாரத் தனத்தி சுகோதயள்

வத்துவம் ஆய்ஆ ளும்மாசத்தி மாபரை

அத்தகை யாவும் அணோரணி தானுமாய்

வைத்தஅக் கோல மதியவள் ஆகுமே.  8 

 

 

அவளை அறியா அமரரும் இல்லை

அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை

அவளன்றி ஐவரால் ஆவதொன்று இல்லை

அவளன்றி ஊர்புகு மாறறி யேனே.  9 

 

 

அறிவார் பராசத்தி ஆனந்தம் என்பர்

அறிவா ரருவுரு வாம்அவள் என்பர்

அறிவார் கருமம் அவள்இச்சை என்பர்

அறிவார் பரனும் அவளிடத் தானே.  10 

 

 

தான்எங்கு உளன்அங்கு உளதையன் மாதேவி

ஊன்எங் குள அங்கு உள்ளுயிர்க் காலவன்

வான் எங் குளஅங் குளேவந்தும் அப்பாலாம்

கோன் எங்கும் நின்ற குறிபல பாரே.  11 

 

 

பராசத்தி மாசத்தி பல்வகை யாலும்

தராசத்தி யாய்நின்ற தன்மை யுணராய்

உராசத்தி ஊழிகள் தோறும் உடனே

பராசத்தி புண்ணிய மாகிய போகமே.  12 

 

 

போகஞ்செய் சத்தி புரிகுழ லாளொடும்

பாகஞ்செய்து ஆங்கே பராசத்தி யாய்நிற்கும்

ஆகஞ்செய்து ஆங்கே அடியவர் நாள்தொறும்

பாகஞ்செய் ஞானம் படர்கின்ற கொம்பே.  13 

 

 

கொம்புஅனை யாளைக் குவிமுலை மங்கையை

வம்பவிழ் கோதையை வானவிர் நாடியைச்

செம்பவ ளத்திரு மேனிச் சிறுமியை

நம்பி என் உள்ளே நயந்துவைத் தேனே.  14 

 

 

வைத்த பொருளும் மருவுயிர்ப் பன்மையும்

பத்து முகமும் பரையும் பராபரைச்

சித்தக் கரணச் செயல்களும் செய்திடும்

சத்தியும் வித்தைத் தலையவ ளாமே.  15 

 

 

தலைவி தடமுலை மேல்நின்ற தையல்

தொலைவில் தவம்செய்யும் தூய்நெறித் தோகை

கலைபல வென்றிடும் கன்னியென் உள்ளம்

நிலைபெற இங்கே நிறைந்துநின் றாளே.  16 

 

 

நின்றவள் நேரிழை நீள்கலை யோடுற

என்றன் அகம்படிந்து ஏழுல கும்தொழ

மன்றது ஒன்றி மனோன்மனி மங்கலி

ஒன்றெனொடு ஒன்றிநின்று ஒத்துஅடைந்தாளே.  17 

 

 

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை

அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி

மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி

சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.  18 

 

 

உணர்ந்துட னேநிற்கும் உள்ளொளி யாகி

மணங்கமழ் பூங்குழல் மங்கையும் தானும்

புணர்ந்துட னேநிற்கும் போதருங் காலைக்

கணிந்தெழு வார்க்குக் கதியளிப் பாளே.  19 

 

 

அளியொத்த பெண்பிள்ளை ஆனந்த சுந்தரி

புளியுறு புன்பழம் போலுள்ளே நோக்கித்

தெளியுறு வித்துச் சிவகதி காட்டி

ஒளியுற வைத்தென்னை உய்யவுண் டாளே.  20 

 

 

உண்டில்லை என்றது உருச்செய்து நின்றது

வண்தில்லை மன்றினுள் மன்னி நிறைந்தது

கண்டிலர் காரண காரணி தம்மொடு

மண்டல முன்றுற மன்னிநின் றாளே.  21 

 

 

நின்றாள் அவன்தன் உடலும் உயிருமாய்ச்

சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி

ஒன்றாக என்னுள் புகுந்துணர் வாகியே

நின்றான் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.  22 

 

 

ஏடங்கை நங்கை இறைஎங்கள் முக்கண்ணி

வேடம் படிகம் விரும்பும்வெண் தாமரை

பாடும் திருமுறை பார்ப்பதி பாதங்கள்

சூடுமின் சென்னிவாய்த் தோத்திரம் சொல்லுமே.  23 

 

 

தோத்திரம் செய்து தொழுது துணையடி

வாய்த்திட ஏத்தி வழிபடு மாறிரும்

பார்த்திடும் அங்குச பாசம் பசுங்கரும்

பார்த்திடும் பூம்பிள்ளை ஆகுமாம் ஆதிக்கே.  24 

 

 

ஆதி விதமிகுத் தண்தந்த மால்தங்கை

நீதி மலரின்மேல் நேரிழை நாமத்தைப்

பாதியில் வைத்துப் பல்காற் பயில்விரேல்

சோதி மிகுந்துமுக் காலமும் தோன்றுமே.  25 

 

 

மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்

வேதாதி நூலின் விளங்கும் பராபரை

ஆதார மாகியே ஆய்ந்த பரப்பினள்

நாதாதி நாதத்து நல்லரு ளாளே.  26 

 

 

அருள்பெற்றவர் சொல்ல வாரீர் மனிதர்

பொருள்பெற்ற சிந்தைப் புவனா பதியார்

மருளுற்ற சிந்தையை மாற்றி யருமைப்

பொருளுற்ற சேவடி போற்றுவன் நானே  27 

 

 

ஆன வராக முகத்தி பதத்தினள்

ஈன வராகம் இடிக்கும் முசலத்தோடு

ஏனை உழுபடை ஏந்திய வெண்ணகை

ஊன மறஉணர்ந் தார் உளத்து ஓங்குமே.  28 

 

 

ஓங்காரி என்பாள் அவளொரு பெண்பிள்ளை

நீங்காத பச்சை நிறத்தை உடையவள்

ஆங்காரி யாகியே ஐவரைப் பெற்றிட்டு

ரீங்காரத் துள்ளே இனிதிருந் தாளே.  29 

 

 

தானே தலைவி எனநின்ற தற்பரை

தானே உயிர்வித்துத் தந்த பதினாலும்

வானோர் தலமும் மனமும்நற் புத்தியும்

தானே சிவகதி தன்மையும் ஆமே.  30

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

பன்றிக் குட்டிகளை மந்திரிகளாக்குதல்
View Details
நக்கீரரைக் காத்தருளல்
View Details
சோழனுக்குக் கதவு திறந்து விடுதல்
View Details