பத்தாம்-திருமுறை

4ம் தந்திரம் - 04. நவகுண்டம்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

நவகுண்டம் ஆனவை நான்உரை செய்யின்

நவகுண்டத்து உள்ளெழும் நற்றீபம் தானும்

நவகுண்டத்து உள்ளெழும் நன்மைகள் எல்லாம்

நவகுண்டம் ஆனவை நான்உரைப் பேனே.  1 

 

 

உரைத்திடும் குண்டத்தின் உள்ளே முக்காலும்

நகைத்தெழு நாற்கோணம் நன்மை கள்ஐந்தும்

பகைத்திடு முப்புரம் பாரங்கி யோடே

மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.  2 

 

 

மேலெறிந்து உள்ளே வெளிசெய்த அப்பொருள்

கால்அறிந்து உள்ளே கருத்துற்ற செஞ்சுடர்

பார்அறிந்து அண்டம் சிறகற நின்றது

நான்அறிந்து உள்ளே நாடிக்கொண் டேனே.  3 

 

 

கொண்டஇக் குண்டத்தின் உள்ளெழு சோதியாய்

அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்

பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்

இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.  4 

 

 

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்

பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்

கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே

கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.  5 

 

 

கூடமுக் கூடத்தின் உள்ளெழு குண்டத்துள்

ஆடிய ஐந்தும் அகம்புறம் பாய்நிற்கும்

பாடிய பன்னீர் இராசியும் அங்குஎழ

நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.  6 

 

 

நற்சுட ராகும் சிரமுக வட்டமாம்

கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளிற்

பைச்சுடர் மேனி பதைப்பற்று இலிங்கமும்

நற்சுட ராய்எழு நல்லதென் றாளே.  7 

 

 

நல்லதென் றாளே நமக்குற்ற நாயகம்

சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா

மெல்லநின் றாளை வினவகில் லாதவர்

கல்லதன் றாளையும் கற்றும் வின் னாளே.  8 

 

 

வின்னா விளம்பிறை மேவிய குண்டத்துச்

சொன்னால் இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்

பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்

என்ஆகத் துள்ளே இடங்கொண்ட வாறே.  9 

 

 

இடங்கொண்ட பாதம் எழிற்சுடர் ஏக

நடங்கொண்ட பாதங்கள் நண்ணீர் அதற்குச்

சகங்கொண்ட கையிரண்டு ஆறும் தழைப்ப

முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.  10 

 

 

முக்கணன் தானே முழுச்சுடர் ஆயவன்

அக்கணன் தானே அகிலமும் உண்டவன்

திக்கணன் ஆகித் திகைஎட்டும் கண்டவன்

எக்கணன் தானுக்கும் எந்தை பிரானே.  11 

 

 

எந்தை பிரானுக்கு இருமூன்று வட்டமாய்த்

தந்தைதன் முன்னே சண்முகம் தோன்றலால்

கந்தன் சுவாமி கலந்தங்கு இருந்தலான்

மைந்தன் இவனென்று மாட்டிக்கொள் ளீரே.  12 

 

 

மாட்டிய குண்டத்தின் உள்ளெழு வேதத்துள்

ஆட்டிய காலொன்றும் இரண்டும் அலர்ந்திடும்

வாட்டிய கையிரண்டு ஒன்று பதைத்தெழ

நாட்டும் சுரரிவர் நல்லொளி தானே.  13 

 

 

நல்லொளி யாக நடந்துல கெங்கும்

கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்

சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்

கல்லொளி கண்ணுளு மாகிநின் றாளே.  14 

 

 

நின்றஇக் குண்டம் நிலையாறு கோணமாய்ப்

பண்டையில் வட்டம் பதைத்தெழு மாறாறும்

கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ

விண்ணுளும் என்ன எடுக்கலு மாமே.  15 

 

 

எடுக்கின்ற பாதங்கள் மூன்றது எழுத்தைக்

கடுத்த முகம்இரண்டு ஆறுகண் ஆகப்

படித்துஎண்ணு நாவெழு கொம்பொரு நாலும்

அடுத்தெழு கண்ணான தந்தமி லாற்கே.  16 

 

 

அந்தமில் லானுக்கு அகலிடம் தானில்லை

அந்தமில் லானை அளப்பவர் தாமில்லை

அந்தமில் லானுக்கு அடுத்தசொல் தானில்லை

அந்தமில் லானை அறிந்துகொள் பத்தே.  17 

 

 

பத்திட்டுஅங்கு எட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு

மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை

கட்டிட்டு நின்று கலந்தமெய் யாகமும்

பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.  18 

 

 

பார்ப்பதி பாகன் பரந்தகை நால்ஐஞ்சு

காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்

பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி

நாற்பது சோத்திரம் நல்லிரு பத்தஞ்சே.  19 

 

 

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்

மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங்கு இருத்தலால்

பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்

கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.  20 

 

 

முத்திநற் சோதி முழுச்சுடர் ஆயவன்

கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்

பற்றற நாடிப் பரந்தொளி யூடு போய்ச்

செற்றற்று இருந்தவர் சேர்ந்திருந் தாரே.  21 

 

 

சேர்ந்த கலையஞ்சும் சேரும்இக் குண்டமும்

ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்

பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்

காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.  22 

 

 

மெய்கண்ட மாம்விரி நீருல கேழையும்

உய்கண்டம் செய்த ஒருவனைச் சேருமின்

செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்

பொய்கண்டம் இல்லாப் பொருள்கலந் தாரே.  23 

 

 

கலந்திரு பாதம் இருகர மாகு

மலர்ந்திரு குண்ட மகாரத்தோர் மூக்கு

மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி

உணர்ந்திரு குஞ்சி அங்கு உத்தம னார்க்கே.  24 

 

 

உத்தமன் சோதி உளனொரு பாலனாய்

மத்திம னாகி மலர்ந்தங்கு இருந்திடும்

பச்சிம திக்கும் பரந்து குழிந்தன

சத்திமா னாகத் தழைத்த கொடியே.  25 

 

 

கொடியாறு சென்று குலாவிய குண்டம்

அடியிரு கோணமாய் அந்தமும் ஒக்கும்

படிஏழ் உலகும் பரந்த சுடரை

மடியாது கண்டவர் மாதன மாமே.  26 

 

 

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்

சாதன மாகச் சமைந்த குருவென்று

போதன மாகப் பொருந்த உலகாளும்

பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.  27 

 

 

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை

ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார் இல்லை

காத்துடல் உள்ளே கருதி இருந்தவர்

மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.  28 

 

 

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க

அகங்கண்ட யோகியுள் நாடி எழுப்பும்

பகங்கண்டு கொண்டஇப் பாய்கரு வொப்பச்

சகங்கண்டு கொண்டது சாதன மாமே.  29 

 

 

சாதனை நாலு தழல்மூன்று வில்வயம்

வேதனை வட்டம் விளையாறு பூநிலை

போதனை போதுஐஞ்சு பொய்கய வாரண

நாதனை நாடு நவகோடி தானே.  30 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

கணநாத நாயனார்
View Details
வரகுண பாண்டியனின் பழியை ஒழித்தல்
View Details
ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details