பத்தாம்-திருமுறை

3ம் தந்திரம் - 09. சமாதி

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

சமாதி யமாதியிற் றான்செல்லக் கூடும்

சமாதி யமாதியிற் றானெட்டுச் சித்தி

சமாதி யமாதியில் தங்கினோர்க் கன்றே

சமாதி யமாதி தலைப்படுந் தானே  1 

 

 

விந்துவும் நாதமும் மேருவில் ஓங்கிடிற்

சந்தியி லான சமாதியிற் கூடிடும்

அந்த மிலாத அறிவின் அரும்பொருள்

சுந்தரச் சோதியுந் தோன்றிடுந் தானே  2 

 

 

மன்மனம் எங்குண்டு வாயுவும் அங்குண்டு

மன்மனம் எங்கில்லை வாயுவும் அங்கில்லை

மன்மனத் துள்ளே மகிழ்ந்திருப் பார்க்கு

மன்மனத் துள்ளே மனோலய மாமே  3 

 

 

விண்டலர் கூபமும் விஞ்சத் தடவியுங்-

கண்டுணர் வாகக் கருதி யிருப்பர்கள்

செண்டு வௌiயிற் செழுங்கிரி யத்திடை

கொண்டு குதிரை குசைசெறுத் தாரே  4 

 

 

மூல நாடி முகட்டல குச்சியுள்

நாலு வாசல் நடுவுள் இருப்பிர்காள்

மேலை வாசல் வெளியுறக் கண்டபின்

காலன் வார்த்தை கனாவிலும் இல்லையே  5 

 

 

மண்டலம் ஐந்து வரைகளும் ஈராறு

கொண்டிட நிற்குங் குடிகளும் ஆறெண்மர்

கண்டிட நிற்குங் கருத்து நடுவாக

உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே  6 

 

 

பூட்டொத்து மெய்யிற் பொறிபட்ட வாயுவைத்

தேட்டற்ற வந்நிலஞ் சேரும் படிவைத்து

நாட்டத்தை மீட்டு நயனத் திருப்பார்க்குத்

தோட்டத்து மாம்பழந் தூங்கலு மாமே  7 

 

 

உருவறி யும்பரி சொன்றுண்டு வானோர்

கருவரை பற்றிக் கடைந்தமு துண்டார்

அருவரை யேறி அமுதுண்ண மாட்டார்

திருவரை யாமனந் தீர்ந்தற்ற வாறே  8 

 

 

நம்பனை யாதியை நான்மறை ஓதியைச்

செம்பொனின் உள்ளே திகழ்கின்ற சோதியை

அன்பினை யாக்கி யருத்தி ஒடுக்கிப்போய்க்

கொம்பேறிக் கும்பிட்டுக் கூட்டமிட் டாரே  9 

 

 

மூலத்து மேலது முச்சது ரத்தது

காலத் திசையிற் கலக்கின்ற சந்தினில்

மேலைப் பிறையினில் நெற்றிநேர் நின்ற

கோலத்தின் கோலங்கள் வெவ்வேறு கொண்டதே  10 

 

 

கற்பனை யற்றுக் கனல்வழி யேசென்று

சிற்பனை எல்லாஞ் சிருட்டித்த பேரொளிப்

பொற்பினை நாடிப் புணர்மதி யோடுற்றுத்

தற்பர மாகத் தகுந்தண் சமாதியே  11 

 

 

தலைப்பட் டிருந்திடத் தத்துவங் கூடும்

வலைப்பட் டிருந்திடும் மாதுநல் லாளுங்

குலைப்பட் டிருந்திடுங் கோபம் அகலுந்

துலைப்பட் டிருந்திடுந் தூங்கவல் லார்க்கே  12 

 

 

சோதித் தனிச்சுட ராய்நின்ற தேவனும்

ஆதியும் 1உள்நின்ற சீவனு மாகுமால்

ஆதிப் பிரமன் பெருங்கடல் வண்ணனும்

ஆதி அடிபணிந் தன்புறு வாரே  13 

 

 

சமாதிசெய் வார்க்குத் தகும்பல யோகஞ்

சமாதிகள் வேண்டாம் இறையுட னேகிற்

சமாதிதா னில்லை தானவ னாகிற்

சமாதியில் எட்டெட்டுச் சித்தியும் எய்துமே  14 

திருச்சிற்றம்பலம்