பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 22. கல்லாமை

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

கல்லா தவரும் கருத்தறி காட்சியை

வல்லார் எனில்அருட் கண்ணான் மதித்துளோர்

கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோரும்

கல்லாதார் இன்பம் காணுகி லாரே.  1 

 

 

வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்

அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்

எல்லா இடத்தும் உளன்எங்கள் தம் இறை

கல்லா தவர்கள் கலப்பறி யாரே.  2 

 

 

நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து

நில்லாக் குரம்பை நிலையென்று உணர்வீர்காள்

எல்லா உயிர்க்கும் இறைவனே ஆயினும்

கல்லாதார் நெஞ்சத்துக் காணஒண் ணாதே.  3 

 

 

கில்லேன் வினைத்துய ராக்கும் மயலானேன்

கல்லேன் அரநெறி அறியாத் தகைமையின்

வல்லேன் வழங்கும் பொருளே மனத்தினுள்

கல்லேன் கழியநின்று ஆடவல் லேனே.  4 

 

 

நில்லாது சீவன் நிலையன்று எனஎண்ணி

வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்

கல்லா மனித்தர் கயவர் உலகினில்

பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே.  5 

 

 

விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி

கண்ணினின் உள்ளே கலந்துஅங் கிருந்தது

மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்

றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே.  6 

 

 

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது

கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடா காட்சி

கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்

கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.  7 

 

 

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது

கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன்அன்று

கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்

கல்லாத மூடர் கருத்தறி யாரே.  8 

 

 

கற்றும் சிவஞானம் இல்லாக் கலதிகள்

சுற்றமும் வீடார் துரிசுஅறார் மூடர்கள்

மற்றும் பலதிசை காணார் மதியிலோர்

கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.  9 

 

 

ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்

சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்

ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற

சோதி நடத்தும் தொடர்வறி யாரே.  10

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

அன்னக்குழி, வைகை அழைத்தல்
View Details
மாயக் குதிரைகள் விற்றல்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு
View Details