பத்தாம்-திருமுறை

1ம் தந்திரம் - 19. அன்பு செய்வாரை அறியும் சிவன்

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்

உகந்தருள் செய்திடும் உத்தம நாதன்

கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு

மகிழ்ந்தன்பு செய்யும் அருளது வாமே.  1 

 

 

இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்

துன்பப் பிறவித் தொழில்பல என்னினும்

அன்பிற் கலவிசெய்து ஆதிப் பிரான்வைத்த

முன்பிப் பிறவி முடிவது தானே.  2 

 

 

அன்புறு சிந்தையின் மேலெழும் அவ்வொளி

இன்புறு கண்ணியொடு ஏற்க இசைந்தன

துன்புறு கண்ணி ஐந் தாடும் துடக்கற்று

நண்புறு சிந்தையை நாடுமின் நீரே.  3 

 

 

புணர்ச்சியுள் ஆயிழை மேல்அன்பு போல

உணர்ச்சியுள் ஆங்கே ஒடுங்கவல் லாருக்கு

உணர்ச்சியில் லாது குலாவி உலாவி

அணைத்தலும் இன்பம் அதுவிது வாமே.  4 

 

 

உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்

சித்தர்கள் என்றும் தெரிந்தறி வாரில்லை

பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ

முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.  5 

 

 

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி

கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை

கண்டேன் கமல மலர்உறை வானடி 

கண்டேன் கழலதென் அன்பினுள் யானே.  6 

 

 

நம்பனை நானா விதப்பொரு ளாகுமென்று

உம்பரில் வானவர் ஓதுந் தலைவனை

இன்பனை இன்பத் திடைநின்று இரதிக்கும்

அன்பனை யாரும் அறியகி லாரே.  7 

 

 

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்

அன்பில் இறைவனை யாம்அறி வோம்என்பர்

இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்தி

அன்பில் அவனை அறியகி லாரே.  8 

 

 

ஈசன் அறியும் இராப்பக லுந்தன்னைப்

பாசத்துள் வைத்துப் பரிவுசெய் வார்களைத்

தேசுற்று இருந்து செயலற் றிருந்திடில்

ஈசன்வந்து எம்மிடை ஈட்டிநின் றானே.  9 

 

 

விட்டுப் பிடிப்பதென் மேதகு சோதியைத்

தொட்டுத் தொடர்வன் தொலையாப் பெருமையை

எட்டும் என் ஆருயி ராய்நின்ற ஈசனை

மட்டுக் கலப்பது மஞ்சனம் ஆமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சிறுத்தொண்ட நாயனார்
View Details
யாக்கோபு சித்தர் (இராம தேவர்)
View Details
கணம்புல்ல நாயனார்
View Details