பத்தாம்-திருமுறை

01 பாயிரம் - 03. ஆகமச் சிறப்பு

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்

அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்

அஞ்சலி கூப்பி அறுபத்து அறுவரும்

அஞ்சா முகத்தில் அரும்பொருள் கேட்டதே.  1 

 

 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்

விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்

எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் யானே.  2 

 

 

பண்டிதர் ஆவார் பதினெட்டும் பாடையும்

கண்டவர் கூறும் கருத்தறி வார்என்க

பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடையும்

அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே.  3 

 

 

அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்

விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி

தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்

எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.  4 

 

 

பரனாய் பராபரம் காட்டி உலகில்

தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்

தரனாய் அமரர்கள் அர்ச்சிக்கு நந்தி

உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே.  5 

 

 

சிவமாம் பரத்தினில் சத்தி சதாசிவம்

உவமா மகேசர் உருத்திர தேவர்

தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற

நவஆ கமமெங்கள் நந்திபெற் றானே.  6 

 

 

பெற்றநல் ஆகமங் காரணம் காமிகம்

உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்

மற்றவ் வியாமளம் ஆகும்கா லோத்தரந்

துற்றநற் சுப்பிரம் சொல்லு மகுடமே.  7 

 

 

அண்ணல் அருளால் அருளும் சிவாகமம்

எண்ணிலி கோடி தொகுத்திடும் ஆயினும்

அண்ணல் அறைந்த அறிவுஅறி யாவிடின்

எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே.  8 

 

 

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று

ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து

ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக்

காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.  9 

 

 

அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும்

சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும்

தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்

உணர்த்தும் அவனை உணரலு மாமே.  10 

 

திருச்சிற்றம்பலம்

 

 

மேலும்

சடைய நாயனார்
View Details
பசுமடத்துக் கோனார்ச் சித்தர்
View Details
பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details