அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
மன்னுக தில்லை வளர்கநம்
பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே. 1
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டுங் கொடுத்தும் குடிகுடி
ஈசற்(கு)ஆட் செய்மின் குழாம்புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையி லாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டும் திறங்களுமே சிந்தித்(து)
அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநீழற்
பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுரு திருப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதை யும்சில
தேவர் சிறுநெறி சேராமே
வில்லாண் டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன்
பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)
ஓலமிட்(டு) இன்னம் புகலரிதாய்
இரந்திரந்(து) அழைப்பஎன் னுயிராண்ட
கோவினுக்(கு) என்செய வல்லம் என்றும்
கரந்துங் கரவாத கற்பக
னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. 5
சேவிக்க வந்தயன் இந்திரன்
செங்கண்மால் எங்கும்திசை திசையன
கூவிக் கவர்ந்து நெருங்கிக்
குழாம்குழா மாய் நின்று கூத்தாடும்
ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத்
தனத்தினை அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவார் உலகில்
ஊரும் உலகும் கழற உழறி
உமைமண வாளனுக்(கு)ஆட்
பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே. 7
சேலுங் கயலும் திளைக்கும்
கண்ணார்இளங் கொங்கையில் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப
மாலும் அயனும் அறியா
நெறி தந்துவந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதமும் ஒத்துநின்
றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 9
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்(கு)இவ் வண்டத்தொடும் உடனே
பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச்
சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 10
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி
விழவொலி விண்ணளவும் சென்று
விம்மி மிகுதிரு ஆரூரின்
மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த
பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 11
ஆரார் வந்தார் அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்
நாராயணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. 12
எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்
எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று
சிந்தை செய்யும் சிவன்சீர்
அடியார் அடிநாய் செப்புறை
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
என்று பல்லாண்டு கூறுதுமே 13
திருச்சிற்றம்பலம்