ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

020 மின்னார் உருவம்

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மின்னார் உருவம் மேல்விளங்க 

  வெண்கொடி மாளி கைசூழப்

பொன்னார் குன்றம் ஒன்று வந்து 

  நின்றது போலும் என்னாத்

தென்னா என்று வண்டு பாடும் 

  தென்தில்லை அம்ப லத்துள்

என்னார் அமுதை எங்கள் 

  கோவை என்றுகொல் எய்துவதே  1 

 

 

ஓவா முத்தீ அஞ்சு வேள்வி 

  ஆறங்க நான்மறையோர்

ஆவே படுப்பார் அந்த ணாளர் 

  ஆகுதி வேட்டுயர் வார்

மூவா யிரவர் தங்க ளோடு 

  முன் அரங்(கு) ஏறிநின்ற

கோவே உன்றன் கூத்துக் காணக் 

  கூடுவ தென்று கொலோ  2 

 

 

முத்தீ யாளர் நான் மறையர் 

  மூவா யிர வர்நின்னோ(டு)

ஒத்தே வாழும் தன்மை யாளர் 

  ஓதிய நான்மறையைத்

தெத்தே யென்று வண்டு பாடும் 

  தென்தில்லை அம்பலத்துள்

அத்தா உன்றன் ஆடல் காண 

  அணைவதும் என்றுகொலோ  3 

 

 

மானைப் புரையும் மடமென் 

  நோக்கி மாமலை யாளோடும்

ஆனைஞ் சாடும் சென்னி 

  மேலோர் அம்புலி சூடும்அரன்

தேனைப் பாலைத் தில்லை 

  மல்கு செம்பொனின் அம்பலத்துக்

கோனை ஞானக் கொழுந்து 

  தன்னைக் கூடுவது என்றுகொலோ  4 

 

 

களிவான் உலகில் கங்கை 

  நங்கை காதலனே ! அருளென்(று)

ஒளிமால் முன்னே வரங்கி 

  டக்க உன்னடியார்க்(கு) அருளும்

தெளிவார் அமுதே ! தில்லை 

  மல்கு செம்பொனின் அம்பலத்துள்

ஒளிவான் சுடரே ! உன்னை 

  நாயேன் உறுவதும் என்றுகொலோ  5 

 

 

பாரோர் முழுதும் வந்தி 

  றைஞ்சப் பதஞ்சலிக்(கு) ஆட்டுகந்தான்

வாரார் முலையாள் மங்கை 

  பங்கன் மாமறையோர் வணங்கச்

சீரான் மல்கு தில்லைச் 

  செம்பொன் அம்பலத்(து) ஆடுகின்ற

காரார் மிடற்றெங் கண்டனாரைக் 

  காண்பதும் என்றுகொலோ  6 

 

 

இலையார் கதிர்வேல் இலங்கைவேந்தன் 

  இருபது தோளும்இற

மலைதான் எடுத்த மற்றவற்கு 

  வாளொடு நாள்கொடுத்தான்

சிலையால் புரமூன்(று) எய்த 

  வில்லி செம்பொனின் அம்பலத்துக்

கலையார் மறிபொன் கையி 

  னானைக் காண்பதும் என்றுகொலோ  7 

 

 

வெங்கோல் வேந்தன் தென்னன் 

  நாடும் ஈழமும் கொண்டதிறல்

செங்கோற் சோழன் கோழி 

  வேந்தன் செம்பியன் பொன்னணிந்த

அங்கோல் வளையார் பாடி 

  யாடும் அணிதில்லை அம்பலத்துள்

எங்கோன் ஈசன் எம்மி 

  றையை என்றுகொல் எய்துவதே.  8 

 

 

நெடியா னோடு நான் 

  முகனும் வானவரும் நெருங்கி

முடியான் முடிகள் மோதி 

  உக்க முழுமணி யின்திரளை

அடியார் அலகி னால்தி 

  ரட்டும் அணிதில்லை அம்பலத்துக்

கடியார் கொன்றை மாலை 

  யானைக் காண்பதும் என்றுகொலோ  9 

 

 

சீரான் மல்கு தில்லைச் 

  செம்பொன் அம்பலத் தாடிதன்னைக்

காரார் சோலைக் கோழி 

  வேந்தன் தஞ்சையர் கோன்கலந்த

ஆரா இன்சொற் கண்டரா 

  தித்தன் அருந்தமிழ் மாலை வல்லார்

பேரா வுலகிற் பெருமை 

  யோடும் பேரின்பம் எய்துவரே.  10 

 

திருச்சிற்றம்பலம்