ஒன்பதாம்-திருமுறை-திருவிசைப்பா

013 அன்னமாய் விசும்பு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கங்கைகொண்ட சோளேச்சரம்

திருச்சிற்றம்பலம்

 

அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

  அங்ஙனே பெரியநீ சிறிய

என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த

  எளிமையை என்றும்நான் மறக்கேன்

முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா

  முக்கணா நாற்பெருந் தடந்தோள்

கன்னலே தேனே அமுதமே கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  1 

 

 

உண்ணெகிழ்ந்(து) உடலம் நெக்குமுக் கண்ணா !

  ஓலமென்(று) ஓலமிட்(டு) ஒருநாள்

மண்ணினின்று அலறேன் வழிமொழி மாலை

  மழலையஞ் சிலம்படி முடிமேல்

பண்ணிநின்(று) உருகேன் பணிசெயேன் எனினும்

  பாவியேன் ஆவியுள் புகுந்தென்

கண்ணினின்று அகலான் என்கொலோ கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  2 

 

 

அற்புதத்தெய்வம் இதனின்மற் றுண்டே

  அன்பொடு தன்னைஅஞ் செழுத்தின்

சொற்பதத் துள்வைத்(து) உள்ளம்அள் ளூறும்

  தொண்டருக்(கு) எண்டிசைக் கனகம்

பற்பதக் குவையும் பைம்பொன்மா ளிகையும்

  பவளவா யவர்பணை முலையும்

கற்பகப் பொழிலும் முழுதுமாம் கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  3 

 

 

ஐயபொட் டிட்ட அழகுவாள் நுதலும்

  அழகிய விழியும்வெண்ணீறும்

சைவம்விட் டிட்ட சடைகளும் சடைமேல்

  தரங்கமும் சதங்கையும் சிலம்பும்

மொய்கொள்எண் திக்கும் கண்டநின் தொண்டர்

  முகமலர்ந்து இருகணீர் அரும்பக்

கைகள்மொட் டிக்கும் என்கொலோ கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே !  4 

 

 

கருதிவா னவனாம் திருநெடு மாலாம்

  சுந்தர விசும்பின்இந் திரனாம்

பருதிவா னவனாம் படர்சடை முக்கண்

  பகவனாம் அகஉயிர்க்கு அமுதாம்

எருதுவா கனனாம் எயில்கள் மூன்(று) எரித்த

  ஏறுசே வகனுமாம் பின்னும்

கருதுவார் கருதும் உருவமாம் கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  5 

 

 

அண்டமோர் அணுவாம் பெருமைகொண்(டு) அணுவோர்

  அண்டமாம் சிறுமைகொண்(டு) அடியேன்

உண்டவூண் உனக்காம் வகைஎன துள்ளம்

  உள்கலந்(து) ஏழுபரஞ் சோதி

கொண்டநாண் பாம்பாம் பெருவரை வில்லில்

  குறுகலர் புரங்கள் மூன்(று) எரித்த

கண்டனே ! நீல கண்டனே ! கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே !  6 

 

 

மோதலைப் பட்ட கடல்வயி(று) உதித்த

  முழுமணித் திரள்அமு(து) ஆங்கே

தாய்தலைப் பட்டங்(கு) உருகிஒன் றாய

  தன்மையில் என்னைமுன் ஈன்ற

நீதலைப் பட்டால் யானும் அவ்வகையே

  நிசிசரர் இருவரோடு ஒருவர்

காதலிற் பட்ட கருணையாய் கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  7 

 

 

தத்தையங் கனையார் தங்கள்மேல் வைத்த

  தயாவைநூ றாயிரங் கூறிட்(டு)

அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)

  அமருல(கு) அளிக்கும்நின் பெருமை

பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும்

  பிழைத்தவை பொறுத்தருள் செய்யும்

கைத்தலம் அடியேன் சென்னிமேல்வைத்த கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  8 

 

 

பண்ணிய தழல்காய் பாலளா நீர்போல்

  பாவமுன் பறைந்துபா லனைய

புண்ணியம் பின்சென்(று) அறிவினுக்(கு) அறியப்

  புகுந்ததோர் யோகினில் பொலிந்து

நுண்ணியை எனினும் நம்பநின் பெருமை

  நுன்னிடை ஒடுங்கநீ வந்தென்

கண்ணினுள் மணியிற் கலந்தனை கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  9 

 

 

அங்கைகொண்(டு) அமரர் மலர்மழை பொழிய

  அடிச்சிலம்பு அலம்பவந்(து) ஒருநாள்

உங்கைகொண் டடியேன் சென்னிவைத் தென்னை

  உய்யக்கொண் டருளினை மருங்கில்

கொங்கைகொண்(டு) அனுங்கும் கொடியிடை காணில்

  கொடியள்என்(று) அவிர்சடை முடிமேல்

கங்கைகொண் டிருந்த கடவுளே ! கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானே.  10 

 

 

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை

  வளர்இளந் திங்களை முடிமேல்

கங்கையோ(டு) அணியும் கடவுளைக் கங்கை

  கொண்டசோ ளேச்சரத் தானை

அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்

  அறைந்தசொல் மாலையால் ஆழிச்

செங்கையோ(டு) உலகில் அரசுவீற் றிருந்து

  திளைப்பதும் சிவனருட் கடலே. 11

 

திருச்சிற்றம்பலம்