எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

023 வேந்தற் குற்றுழிப் பிரிவு

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல்

மாது குலாயமென் னோக்கிசென் றார்நமர் வண்புலியூர்க்

காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல்

ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னா ரிடுமதிலே. 1

 

 

பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர்

வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல்

துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ

மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. 2

 

 

கோலித் திகழ்சிற கொன்றி னொடுக்கிப் பெடைக்குருகு

பாலித் திரும்பனி பார்ப்பொடு சேவல் பயிலிரவின்

மாலித் தனையறி யாமறை யோனுறை யம்பலமே

போலித் திருநுத லாட்கென்ன தாங்கொலென் போதரவே. 3

 

 

கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால்

விருப்பினம் மேவச்சென் றார்க்குஞ் சென்றல்குங் கொல்வீழ்பனிவாய்

நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற

பொருப்பின மேறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. 4

 

 

சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று

பெற்றவ ளேயெனப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப்

புற்றில வாளர வன்தில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழீஇ

மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே. 5

 

 

புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண்

சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள்

பரமன் றிரும்பனி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ்

சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே. 6

 

 

வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில்தேன்

சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்

யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்

கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே. 7

 

 

பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூ ரரன்மிடற்றின்

மாண்பதென் றேயென வானின் மலரும் மணந்தவர்தேர்

காண்பதன் றேயின்று நாளையிங் கேவரக் கார்மலர்த்தேன்

பாண்பதன் தேர்குழ லாயெழில் வாய்த்த பனிமுகிலே. 8

 

 

தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன்

களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவந்

துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக் குன்குழல்போன்

றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தனவே. 9

 

 

தேன்றிக் கிலங்கு கழலழல் வண்ணன்சிற் றம்பலத்தெங்

கோன்றிக் கிலங்குதிண்டோட் கொண்டற் கண்டன் குழையெழில்நாண்

போன்றிக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல்போல்

தோன்றிக் கடிமல ரும்பொய்ம்மை யோமெய்யிற் றோன்றுவதே. 10

 

 

திருமா லறியாச் செறிகழல் தில்லைச் சிற்றம்பலத்தெங்

கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்ட லெண்டிசையும்

வருமா லுடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர்

பொருமா லயிற்கண்நல் லாயின்று தோன்றுநம் பொன்னகர்க்கே. 11

 

 

புயலோங் கலர்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும்

மயலோங் கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த

கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோபமுங் காட்டிவருஞ்

செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே. 12

 

 

சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம்

பிறப்பிற் றுனைந்து பெருகுக தேர்பிறங் கும்மொளியார்

நிறப்பொற் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள்

இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை தேரும் எழில்நகர்க்கே. 13

 

 

அருந்தே ரழிந்தனம் ஆலமென் றோலமிடு மிமையோர்

மருந்தே ரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல்

திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென்

வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. 14

 

 

பணிவார் குழையெழி லோன்தில்லைச் சிற்றம் பலமனைய

மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப்

பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர்

அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோட ணுகினரே. 15

 

 

கருங்குவ ளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க

நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோ

டொருங்கு வளைக்கரத் தானுண ராதவன் தில்லையொப்பாய்

மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே.  16

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

இளையான்குடி மாற நாயனார்
View Details
விறன்மிண்ட நாயனார்
View Details
நேச நாயனார்
View Details