அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
திருச்சிற்றம்பலம்
பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்
முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம்
அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற்
புரைசந்த மேகலை யாய்துயர் தீரப்புகுந்து நின்றே. 1
இருந்துதி யென்வயிற் கொண்டவன் யான்எப் பொழுதுமுன்னும்
மருந்து திசைமுகன் மாற்கரி யோன்தில்லை வாழ்த்தினர்போல்
இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவுஞ் சிலம்பன் அருந்தழையே. 2
சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற்
காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த
வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டவர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. 3
தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல்நகரிற்
கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே. 4
பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போலிடை யெனப்பூண்
இட்டணி யான்தவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. 5
தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம்அனையாள்
தெய்வம் பணிந்தறி யாள்என்று நின்று திறைவழங்காத்
தெய்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பெளவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. 6
சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னீர்ங்களிறே. 7
மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே
றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந்
தென்னவ னேத்துசிற் றம்பலந் தான்மற்றைத் தேவர்க்கெல்லாம்
முன்னவன் மூலவன் னாளும்மற் றோர்தெய்வ முன்னலளே. 8
ஆனந்த வெள்ளத் தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண்
டானந்த வெள்ளத் திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர்
ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின்
ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே. 9
திருச்சிற்றம்பலம்