எட்டாம்-திருமுறை-திருக்கோவையார்

014 இரவுக்குறி

அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய்

இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப்

பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனையிறும்பின்

விருந்தினன் யானுங்கள் சீறூ ரதனுக்கு வெள்வளையே. 1

 

 

விசும்பினுக் கேணி நெறியன்ன சின்னெறி மேன்மழைதூங்

கசும்பினிற் றுன்னி அளைநுழைந் தாலொக்கும் ஐயமெய்யே

இசும்பினிற் சிந்தைக்கு மேறற் கரிதெழி லம்பலத்துப்

பசும்பனிக் கோடுமி லைந்தான் மலயத்தெம் வாழ்பதியே. 2

 

 

மாற்றே னெனவந்த காலனை யோலமிட அடர்த்த

கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி

மேற்றேன் விரும்பு முடவனைப் போலமெலியு நெஞ்சே

ஆற்றே னரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. 3

 

 

கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த் 

தூளி நிறைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால்

ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து

மீளி யுரைத்தி வினையே னுரைப்பதென் மெல்லியற்கே.  4

 

 

வரையன் றொருகா லிருகால் வளைய நிமிர்ந்துவட்கார்

நிரையன் றழலெழ வெய்துநின் றோன்தில்லை யன்னநின்னூர்

விரையென்ன மென்னிழ லென்ன வெறியுறு தாதிவர்போ

துரையென்ன வோசிலம் பாநலம் பாவி யொளிர்வனவே. 5

 

 

செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக் கண்ணணியும்

மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத் தோன்மன்னு தென்மலயத்

தெம்மலர் சூடிநின் றெச்சாந் தணிந்தென்ன நன்னிழல்வாய்

அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி வாய்நும ராடுவதே. 6

 

 

பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர்

புனைவளர் சாரற் பொதியின்மலைப் பொலி சந்தணிந்து

சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகைதுயில் பயிலுஞ்

சினைவளர் வேங்கைகள் யாங்கணின் றாடுஞ் செழும்பொழிலே. 7

 

 

மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வானர்க் கப்பாற்

செலவன்பர்க் கோக்குஞ் சிவன்தில்லைக் கானலிற் சீர்ப்பெடையோ

டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலுரவோன்

செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன் சேர்துயிலே. 8

 

 

மோட்டங் கதிர்முலைப் பங்குடைத் தில்லைமுன் னோன்கழற்கே

கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் மழைகுழுமி

நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம்

வேட்டந் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. 9

 

 

செழுங்கார் முழவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால்

கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழ லேத்தலர்போல்

முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய்

வழங்கா அதரின் வழங்கென்று மோவின்றெம் வள்ளலையே. 10

 

 

ஓங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப ருய்யவன்று

தாங்கு மொருவன் தடவரை வாய்தழங் கும்மருவி

வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து

வாங்கு மவர்க்கறி யேன்சிறி யேன்சொல்லும் வாசகமே. 11

 

 

ஏனற் பசுங்கதி ரென்றூழ்க் கழிய எழிலியுன்னிக்

கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா

யானிற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச்சென்றேன்

தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லுஞ் செல்லல்களே. 12

 

 

முன்னு மொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற்

பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்

துன்னுமொ ரின்பமென் றோகைதந் தோகைக்குச் சொல்லுவபோல்

மன்னு மரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. 13

 

 

கூடார் அரண்எரி கூடக்கொடுஞ்சிலை கொண்ட அண்டன்

சேடார் மதின்மல்லற் றில்லையன் னாய்சிறு கட்பெருவெண்

கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத்

தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே. 14

 

 

விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த

மண்ணுக்கு நாப்பண் நயந்துதென் தில்லைநின் றோன்மிடற்றின்

வண்ணக் குவளை மலர்க்கின் றனசின வாண்மிளிர்நின்

கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே. 15

 

 

நந்தீ வரமென்னு நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கெஃகந்

தந்தீ வரன்புலி யூரனை யாய்தடங் கண்கடந்த

இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர்

சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே. 16

 

 

காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோனடைத்த

தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே

பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே

நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே. 17

 

 

அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத்

தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர்

இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப்

புகலு மிகஇங்ங னேயிறு மாக்கும் புணர்முலையே. 18

 

 

அழுந்தேன் நரகத் தியானென்றி ருப்பவந் தாண்டுகொண்ட

செழுந்தேன் திகழ்பொழிற் றில்லைப் புறவிற் செறுவகத்த

கொழுந்தேன் மலர்வாய்க் குமுத மிவள்யான் குரூஉச்சுடர்கொண்

டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர் வானத் திளமதியே. 19

 

 

கரும்புறு நீலங் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ

அரும்பெறற் றோழியொ டாயத்து நாப்ப ணமரரொன்னார்

இரும்புறு மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர்

துரும்புறச் செற்றகொற் றத்தெம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. 20

 

 

நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன

விற்பகைத் தோங்கும் புருவத் திவளின் மெய்யேயெளிதே

வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற

கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. 21

 

 

பைவா யரவரை அம்பலத் தெம்பரன் பைங்கயிலைச்

செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத் தோட்சிற் றிடைக்கொடியை

மொய்வார் கமலத்து முற்றிழை யின்றென் முன்னைத்தவத்தால்

இவ்வா றிருக்குமென் றேநிற்ப தென்றுமென் இன்னுயிரே. 22

 

 

பைவா யரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை

மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்காற்

செவ்வாய் கருவயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண்

மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே.  23

 

 

நாகந்  தொழவெழில் அம்பலம் நண்ணிநடம் நவில்வோன்

நாகமிதுமதி யேமதி யேநவில் வேற்கை யெங்கள்

நாகம் வரவெதிர்நாங் கொள்ளும் நள்ளிருள் வாய்நறவார்

நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. 24

 

 

மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய்

என்னங் கலமர லெய்திய தோவெழின் முத்தந்தொத்திப்

பொன்னங் கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும்

அன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே. 25

 

 

சோத்துன் னடியமென் றோரைக் குழுமித்தொல் வானவர்சூழ்ந்

தேத்தும் படிநிற்ப வன்தில்லை யன்னா ளிவள்துவள

ஆர்த்துன் னமிழ்துந் திருவும் மதியும் இழந்தவம்நீ

பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. 26

 

 

மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ்

போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள்

ஏதுற் றழிதியென் னீர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ

தீதுற்ற தென்னுக்கென் னீரிது வோநன்மை செப்புமினே. 27

 

 

இன்னற வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற்

பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின்

துன்னற வுய்க்குமில் லோருந் துயிலில் துறைவர்மிக்க

கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே. 28

 

 

தாருறு கொன்றையன் தில்லைச் சடைமுடி யோன்கயிலை

நீருறு கான்யா றளவில் நீந்திவந் தால்நினது

போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுக மஞ்சிவருஞ்

சூருறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே.  29

 

 

விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்

கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்

கண்டிலை யேவரக் கங்குலெல் லாம்மங்குல் வாய்விளக்கும்

மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. 30

 

 

பற்றொன்றி லார்பற்றுந் தில்லைப் பரன்பரங் குன்றினின்ற

புற்றொன் றரவன் புதல்வ னெனநீ புகுந்துநின்றால்

மற்றுன்று மாமலரிட் டுன்னை வாழ்த்திவந் தித்தலன்றி

மற்றொன்று சிந்திப்ப ரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. 31

 

 

பூங்கணை வேளைப் பொடியாய் விழவிழித் தோன்புலியூர்

ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத்

தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே

ஆங்கணைந் தார்நின்னை யும்முள ரோசென் றகன்றவரே. 32

 

 

அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால்

அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள்

அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லை யானருள்போன்

றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே. 33

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நூல்களின் ஏற்ற தாழ்வு கண்டறிதல்
View Details
புலிப்பாணி சித்தர்
View Details
குண்டோதரனுக்கு உண்டியிடல்
View Details