ஏழாம்-திருமுறை

089 பிழையுளன பொறுத்திடுவர்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : வெண்பாக்கம்

திருச்சிற்றம்பலம்

 

பிழையுளன பொறுத்திடுவர்

  என்றடியேன் பிழைத்தக்காற்

பழியதனைப் பாராதே

  படலமென்கண் மறைப்பித்தாய்

குழைவிரவு வடிகாதா 

  கோயிலுளா யேயென்ன

உழையுடையான் உள்ளிருந்து

  உளோம்போகீர் என்றானே.  1 

 

 

இடையறியேன் தலையறியேன்

  எம்பெருமான் சரணமென்பேன்

நடையுடையன் நம்மடியான்

  என்றவற்றைப் பாராதே

விடையுடையான் விடநாகன்

  வெண்ணீற்றன் புலியின்றோல்

உடையுடையான் எனையுடையான்

  உளோம்போகீர் என்றானே.  2 

 

 

செய்வினையொன் றறியாதேன்

  திருவடியே சரணென்று

பொய்யடியேன் பிழைத்திடினும்

  பொறுத்திடநீ வேண்டாவோ

பையரவா இங்கிருந்தா

  யோவென்னப் பரிந்தென்னை

உய்யஅருள் செய்யவல்லான்

  உளோம்போகீர் என்றானே.  3 

 

 

கம்பமருங் கரியுரியன்

  கறைமிடற்றன் காபாலி

செம்பவளத் திருவுருவன்

  சேயிழையோ டுடனாகி

நம்பியிங்கே இருந்தீரே

  என்றுநான் கேட்டலுமே

உம்பர்தனித் துணையெனக்கு

  உளோம்போகீர் என்றானே.  4 

 

 

பொன்னிலங்கு நறுங்கொன்றை

  புரிசடைமேற் பொலிந்திலங்க

மின்னிலங்கு நுண்ணிடையாள்

  பாகமா எருதேறித்

துன்னியிரு பால்அடியார்

  தொழுதேத்த அடியேனும்

உன்னதமாய்க் கேட்டலுமே

  உளோம்போகீர் என்றானே.  5 

 

 

கண்ணுதலாற் காமனையுங்

  காய்ந்ததிறற் கங்கைமலர்

தெண்ணிலவு செஞ்சடைமேல்

  தீமலர்ந்த கொன்றையினான்

கண்மணியை மறைப்பித்தாய்

  இங்கிருந்தா யோவென்ன

ஒண்ணுதலி பெருமானார்

  உளோம்போகீர் என்றானே.  6 

 

 

பார்நிலவு மறையோரும்

  பத்தர்களும் பணிசெய்யத்

தார்நிலவு நறுங்கொன்றைச்

  சடையனார் தாங்கரிய

கார்நிலவு மணிமிடற்றீர்

  இங்கிருந்தீ ரேயென்ன

ஊரரவம் அரைக்கசைத்தான்

  உளோம்போகீர் என்றானே.  7 

 

 

வாரிடங்கொள் வனமுலையாள்

  தன்னோடு மயானத்துப்

பாரிடங்கள் பலசூழப்

  பயின்றாடும் பரமேட்டி

காரிடங்கொள் கண்டத்தன்

  கருதுமிடந் திருஒற்றி

யூரிடங்கொண் டிருந்தபிரான்

  உளோம்போகீர் என்றானே.  8 

 

 

பொன்னவிலுங் கொன்றையினாய்

  போய்மகிழ்க்கீ ழிருவென்று

சொன்னஎனைக் காணாமே

  சூளறவு மகிழ்க்கீழே

என்னவல்ல பெருமானே

  இங்கிருந்தா யோவென்ன

ஒன்னலரைக் கண்டாற்போல்

  உளோம்போகீர் என்றானே.  9 

 

 

மான்றிகழுஞ் சங்கிலியைத்

  தந்துவரு பயன்களெல்லாந்

தோன்றஅருள் செய்தளித்தாய்

  என்றுரைக்க உலகமெலாம்

ஈன்றவனே வெண்கோயில்

  இங்கிருந்தா யோவென்ன

ஊன்றுவதோர் கோலருளி

  உளோம்போகீர் என்றானே.  10 

 

 

ஏராரும் பொழில்நிலவு

  வெண்பாக்கம் இடங்கொண்ட

காராறும் மிடாற்றானைக்

  காதலித்திட் டன்பினொடுஞ்

சீராருந் திருவாரூர்ச்

  சிவன்பேர்சென் னியில்வைத்த

ஆரூரன் தமிழ்வல்லார்க்

  கடையாவல் வினைதானே.  11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

கலசப்பாக்கம் மலப்பீடான் சித்தர் (பூண்டிச்சித்தர்)
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details
சேரனுக்கு நிருபம் கொடுத்தல்
View Details