ஏழாம்-திருமுறை

048 மற்றுப் பற்றெனக்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : பாண்டிக்கொடுமுடி

திருச்சிற்றம்பலம்

 

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்

  பாத மேமனம் பாவித்தேன்

பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற

  வாத தன்மைவந் தெய்தினேன்

கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

  யூரிற் பாண்டிக் கொடுமுடி

நற்ற வாவுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  1 

 

 

இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந்

  திட்ட நாள்மறந் திட்டநாள்

கெட்ட நாளிவை என்ற லாற்கரு

  தேன்கி ளர்புனற் காவிரி

வட்ட வாசிகை கொண்ட டிதொழு

  தேத்து பாண்டிக் கொடுமுடி

நட்ட வாவுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  2 

 

 

ஓவு நாளுணர் வழியும் நாளுயிர்

  போகும் நாளுயர் பாடைமேல்

காவு நாளிவை என்ற லாற்கரு

  தேன்கி ளர்புனற் காவிரிப்

பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்

  சோதி பாண்டிக் கொடுமுடி

நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  3 

 

 

எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை

  தம்பி ரானென்பொன் மாமணி

கல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி

  காவி ரியதன் வாய்க்கரை

நல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை

  யூரிற் பாண்டிக் கொடுமுடி

வல்ல வாவுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  4 

 

 

அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி

  யேனும் நான்மிக அஞ்சினேன்

அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள்

  நல்கி னாய்க்கழி கின்றதென்

பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந்

  தாடு பாண்டிக் கொடுமுடி

நஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  5 

 

 

ஏடு வானிளந் திங்கள் சூடினை

  என்பின் கொல்புலித் தோலின்மேல்

ஆடு பாம்பத ரைக்க சைத்த

  அழக னேயந்தண் காவிரிப்

பாடு தண்புனல் வந்தி ழிபரஞ்

  சோதி பாண்டிக் கொடுமுடி

சேட னேயுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  6 

 

 

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந்

  தேன்வி னைகளும் விண்டனன்

நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற

  நின்ற காவிரிக் கோட்டிடைக்

குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந்

  தாடு பாண்டிக் கொடுமுடி

விரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  7 

 

 

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந்

  தீயெ ழச்சிலை கோலினாய்

வம்பு லாங்குழ லாளைப் பாகம

  மர்ந்து காவிரிக் கோட்டிடைக்

கொம்பின் மேற்குயில் கூவ மாமயி

  லாடு பாண்டிக் கொடுமுடி

நம்ப னேயுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  8 

 

 

சார ணன்தந்தை எம்பி ரானெந்தை

  தம்பிரா னென்பொன்மா மணியென்று

பேரெ ணாயிர கோடி தேவர்

  பிதற்றி நின்று பிரிகிலார்

நார ணன்பிர மன்றொ ழுங்கறை

  யூரிற் பாண்டிக் கொடுமுடிக்

கார ணாவுனை நான்ம றக்கினுஞ்

  சொல்லும் நாநமச்சி வாயவே.  9 

 

 

கோணி யபிறை சூடியைக் கறை

  யூரிற் பாண்டிக் கொடுமுடி

பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்

  பித்த னைப்பிறப் பில்லியைப்

பாணு லாவரி வண்ட றைகொன்றைத்

  தார னைப்படப் பாம்பரை

நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை

  சொல்லு வார்க்கில்லை துன்பமே.  10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ பல்குனி ருத்ர சித்தர்
View Details
மாபாதகம் தீர்த்தல்
View Details
அந்தணப் பெண்ணின் கொலையைக் கண்டுபிடித்தல்
View Details