ஏழாம்-திருமுறை

043 நஞ்சி யிடையின்று நாளை

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : முதுகுன்றம்

திருச்சிற்றம்பலம்

 

நஞ்சி யிடையின்று நாளை

  யென்றும்மை நச்சுவார்

துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ

  தென்னடி கேள்சொலீர்

பஞ்சி யிடப்புட்டில் கீறு

  மோபணி யீரருள்

முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ்

  சீர்முது குன்றரே.  1 

 

 

ஏரிக் கனகக் கமல

  மலரன்ன சேவடி

ஊரித் தனையுந் திரிந்தக்

  காலவை நோங்கொலோ

வாரிக் கட்சென்று வளைக்கப்

  பட்டு வருந்திப்போய்

மூரிக் களிறு முழக்க

  றாமுது குன்றரே.  2 

 

 

தொண்டர்கள் பாட விண்ணோர்க

  ளேத்த உழிதர்வீர்

பண்டகந் தோறும் பலிக்குச்

  செல்வது பான்மையே

கண்டகர் வாளிகள் வில்லி

  கள்புறங் காக்குஞ்சீர்

மொண்டகை வேள்வி முழக்க

  றாமுது குன்றரே.  3 

 

 

இளைப்பறி யீரிம்மை யேத்து

  வார்க்கம்மை செய்வதென்

விளைப்பறி யாதவெங் கால

  னையுயிர் வீட்டினீர்

அளைப்பிரி யாவர வல்கு

  லாளொடு கங்கைசேர்

முளைப்பி றைச்சென் னிச்சடை

  முடிமுது குன்றரே.  4 

 

 

ஆடி அசைந்தடி யாரும்

  நீரும் அகந்தொறும்

பாடிப் படைத்த பொருளெ

  லாமுமை யாளுக்கோ

மாட மதிலணி கோபு

  ரம்மணி மண்டபம்

மூடி முகில்தவழ் சோலை

  சூழ்முது குன்றரே.  5 

 

 

இழைவளர் நுண்ணிடை மங்கை

  யோடிடு காட்டிடைக்

குழைவளர் காதுகள் மோத

  நின்று குனிப்பதே

மழைவள ருந்நெடுங் கோட்டி

  டைமத யானைகள்

முழைவளர் ஆளி முழக்க

  றாமுது குன்றரே.  6 

 

 

சென்றி லிடைச்செடி நாய்கு

  ரைக்கச்சே டிச்சிகள்

மன்றி லிடைப்பலி தேரப்

  போவது வாழ்க்கையே

குன்றி லிடைக்களி றாளி

  கொள்ளக் குறத்திகள்

முன்றி லிடைப்பிடி கன்றி

  டும்முது குன்றரே.  7 

 

 

அந்தி திரிந்தடி யாரும்

  நீரும் அகந்தொறுஞ்

சந்தி கள்தோறும் பலிக்குச்

  செல்வது தக்கதே

மந்தி கடுவனுக் குண்பழம்

  நாடி மலைப்புறம்

முந்தி யடிதொழ நின்ற

  சீர்முது குன்றரே.  8 

 

 

செட்டிநின் காதலி ஊர்கள்

  தோறும் அறஞ்செய

அட்டு மின்சில் பலிக்கென்

  றகங்கடை நிற்பதே

பட்டிவெள் ளேறுகந் தேறு

  வீர்பரி சென்கொலோ

முட்டி யடிதொழ நின்ற

  சீர்முது குன்றரே.  9 

 

 

எத்திசை யுந்திரிந் தேற்றக்

  காற்பிற ரென்சொலார்

பத்தியி னாலிடு வாரி

  டைப்பலி கொண்மினோ

எத்திசை யுந்திரை யேற

  மோதிக் கரைகள்மேல்

முத்திமுத் தாறு வலஞ்செ

  யும்முது குன்றரே.  10 

 

 

முத்திமுத் தாறு வலஞ்செ

  யும்முது குன்றரைப்

பித்தனொப் பானடித் தொண்ட

  னூரன் பிதற்றிவை

தத்துவ ஞானிக ளாயி

  னார்தடு மாற்றிலார்

எத்தவத் தோர்களு மேத்து

  வார்க்கிடர் இல்லையே.  11 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மச்ச முனி
View Details
சாவளிகே சிவலிங்கேஸ்வர சித்தர்
View Details
தண்டியடிகள் நாயனார்
View Details