ஏழாம்-திருமுறை

028 பொடியார் மேனியனே

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

பொடியார் மேனியனே

  புரிநூலொரு பாற்பொருந்த

வடியார் மூவிலைவேல்

  வளர்கங்கையின் மங்கையொடுங்

கடியார் கொன்றையனே

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அடிகேள் என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  1 

 

 

பிறையா ருஞ்சடையாய்

  பிரமன்றலை யிற்பலிகொள்

மறையார் வானவனே

  மறையின்பொரு ளானவனே

கறையா ரும்மிடற்றாய்

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

இறைவா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  2 

 

 

அன்றா லின்னிழற்கீழ்

  அறம்நால்வர்க் கருள்புரிந்து

கொன்றாய் காலனுயிர்

  கொடுத்தாய்மறை யோனுக்குமான்

கன்றாருங் கரவா

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

என்றா தைபெருமான்

  எனக்கார்துணை நீயலதே.  3 

 

 

போரா ருங்கரியின்

  னுரிபோர்த்துப்பொன் மேனியின்மேல்

வாரா ரும்முலையாள்

  ஒருபாகம் மகிழ்ந்தவனே

காரா ரும்மிடற்றாய்

  கடவூர்தனுள் வீரட்டானத்

தாரா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  4 

 

 

மையார் கண்டத்தினாய்

  மதமாவுரி போர்த்தவனே

பொய்யா தென்னுயிருள்

  புகுந்தாயின்னம் போந்தறியாய்

கையார் ஆடரவா

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

ஐயா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  5 

 

 

மண்ணீர் தீவெளிகால்

  வருபூதங்க ளாகிமற்றும்

பெண்ணோ டாணலியாய்ப்

  பிறவாவுரு ஆனவனே

கண்ணா ரும்மணியே

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அண்ணா என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  6 

 

 

எரியார் புன்சடைமேல்

  இளநாகம் அணிந்தவனே

நரியா ருஞ்சுடலை

  நகுவெண்டலை கொண்டவனே

கரியார் ஈருரியாய்

  கடவூர்தனுள் வீரட்டத்தெம்

அரியாய் என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  7 

 

 

வேறா உன்னடியேன்

  விளங்குங்குழைக் காதுடையாய்

தேறேன் உன்னையல்லாற்

  சிவனேயென் செழுஞ்சுடரே

காறார் வெண்மருப்பா

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஆறார் செஞ்சடையாய்

  எனக்கார்துணை நீயலதே.  8 

 

 

அயனோ டன்றரியும்

  அடியும்முடி காண்பரிய

பயனே எம்பரனே

  பரமாய பரஞ்சுடரே

கயமா ருஞ்சடையாய்

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

அயனே என்னமுதே

  எனக்கார்துணை நீயலதே.  9 

 

 

காரா ரும்பொழில்சூழ்

  கடவூர்த்திரு வீரட்டத்துள்

ஏரா ரும்மிறையைத்

  துணையாஎழில் நாவலர்கோன்

ஆரூ ரன்னடியான்

  அடித்தொண்டன் உரைத்ததமிழ்

பாரோ ரேத்தவல்லார்

  பரலோகத் திருப்பாரே. 10

 

திருச்சிற்றம்பலம்