ஏழாம்-திருமுறை

024 பொன்னார் மேனியனே

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : மழபாடி

திருச்சிற்றம்பலம்

 

பொன்னார் மேனியனே

  புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல்

  மிளிர்கொன்றை யணிந்தவனே

மன்னே மாமணியே

  மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  1 

 

 

கீளார் கோவணமுந்

  திருநீறுமெய் பூசியுன்றன்

தாளே வந்தடைந்தேன்

  தலைவாயெனை ஏன்றுகொள்நீ

வாளார் கண்ணிபங்கா

  மழபாடியுள் மாணிக்கமே

*கேளா நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.

(* ஆளாய் என்றும் பாடம்)  2 

 

 

எம்மான் எம்மனையென்

  றெனக்கெட்டனைச் சார்வாகார்

இம்மா யப்பிறவி

  பிறந்தேயிறந் தெய்த்தொழிந்தேன்

மைம்மாம் பூம்பொழில்சூழ்

  மழபாடியுள் மாணிக்கமே

அம்மான் நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  3 

 

 

பண்டே நின்னடியேன்

  அடியாரடி யார்கட்கெல்லாந்

தொண்டே பூண்டொழிந்தேன்

  தொடராமைத் துரிசறுத்தேன்

வண்டார் பூம்பொழில்சூழ்

  மழபாடியுள் மாணிக்கமே

அண்டா நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  4 

 

 

கண்ணாய் ஏழுலகுங்

  கருத்தாய அருத்தமுமாய்ப்

பண்ணார் இன்றமிழாய்ப்

  பரமாய பரஞ்சுடரே

மண்ணார் பூம்பொழில்சூழ்

  மழபாடியுள் மாணிக்கமே

அண்ணா நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  5 

 

 

நாளார் வந்தணுகி

  நலியாமுனம் நின்றனக்கே

ஆளா வந்தடைந்தேன்

  அடியேனையும் ஏன்றுகொள்நீ

மாளா நாளருளும்

  மழபாடியுள் மாணிக்கமே

ஆளா நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  6 

 

 

சந்தா ருங்குழையாய்

  சடைமேற்பிறை தாங்கிநல்ல

வெந்தார் வெண்பொடியாய்

  விடையேறிய வித்தகனே

மைந்தார் சோலைகள்சூழ்

  மழபாடியுள் மாணிக்கமே

எந்தாய் நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  7 

 

 

வெய்ய விரிசுடரோன்

  மிகுதேவர் கணங்களெல்லாஞ்

செய்ய மலர்களிட

  மிகுசெம்மையுள் நின்றவனே

மையார் பூம்பொழில்சூழ்

  மழபாடியுள் மாணிக்கமே

ஐயா நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  8 

 

 

நெறியே நின்மலனே

  நெடுமாலயன் போற்றிசெய்யுங்

குறியே நீர்மையனே

  கொடியேரிடை யாள்தலைவா

மறிசேர் அங்கையனே

  மழபாடியுள் மாணிக்கமே

அறிவே நின்னையல்லால்

  இனியாரை நினைக்கேனே.  9 

 

 

ஏரார் முப்புரமும்

  எரியச்சிலை தொட்டவனை

வாரார் கொங்கையுடன்

  மழபாடியுள் மேயவனைச்

சீரார் நாவலர்கோன்

  ஆரூரன் உரைத்ததமிழ்

பாரோர் ஏத்தவல்லார்

  பரலோகத் திருப்பாரே.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

நக்கீரருக்கு இலக்கணம் உபதேசித்தல்
View Details
கூற்றுவ நாயனார்
View Details
ஸ்ரீ வல்லப சித்தர் (சுந்தரானந்ததேவர்)
View Details