ஏழாம்-திருமுறை

022 முன்னவன் எங்கள்பிரான்

அ௫ளியவர் : சுந்தரர்

  திருமுறை : ஏழாம் திருமுறை

  தலம் : பழமண்ணிப்படிக்கரை

திருச்சிற்றம்பலம்

 

முன்னவன் எங்கள்பிரான்

  முதற்காண்பரி தாயபிரான்

சென்னியில் எங்கள்பிரான்

  திருநீலமி டற்றெம்பிரான்

மன்னிய எங்கள்பிரான்

  மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்

பன்னிய எங்கள்பிரான்

  பழமண்ணிப் படிக்கரையே.  1 

 

 

அண்ட கபாலஞ்சென்னி

  அடிமேலல ரிட்டுநல்ல

தொண்டங் கடிபரவித்

  தொழுதேத்திநின் றாடுமிடம்

வெண்டிங்கள் வெண்மழுவன்

  விரையார்கதிர் மூவிலைய

பண்டங்கன் மேயவிடம்

  பழமண்ணிப் படிக்கரையே.  2 

 

 

ஆடுமின் அன்புடையீர்

  அடிக்காட்பட்ட தூளிகொண்டு

சூடுமின் தொண்டருள்ளீர்

  உமரோடெமர் சூழவந்து

வாடுமிவ் வாழ்க்கைதன்னை

  வருந்தாமல் திருந்தச்சென்று

பாடுமின் பத்தருள்ளீர்

  பழமண்ணிப் படிக்கரையே.  3 

 

 

அடுதலை யேபுரிந்தான்

  அவைஅந்தர மூவெயிலுங்

கெடுதலை யேபுரிந்தான்

  கிளருஞ்சிலை நாணியிற்கோல்

*நடுதலை யேபுரிந்தான்

  நரிகான்றிட்ட எச்சில்வெள்ளைப்

படுதலை யேபுரிந்தான்

  பழமண்ணிப் படிக்கரையே.

(* அடுதலையே என்றும் பாடம்)  4 

 

 

உங்கைக ளாற்கூப்பி

  உகந்தேத்தித் தொழுமின்தொண்டீர்

மங்கையோர் கூறுடையான்

  வானோர்முத லாயபிரான்

அங்கையில் வெண்மழுவன்

  அலையார்கதிர் மூவிலைய

பங்கய பாதனிடம்

  பழமண்ணிப் படிக்கரையே.  5 

 

 

செடிபடத் தீவிளைத்தான்

  சிலையார்மதில் செம்புனஞ்சேர்

கொடிபடு மூரிவெள்ளை

  எருதேற்றையும் ஏறக்கொண்டான்

கடியவன் காலன்றன்னைக்

  கறுத்தான்கழற் செம்பவளப்

படியவன் பாசுபதன்

  பழமண்ணிப் படிக்கரையே.  6 

 

 

கடுத்தவன் தேர்கொண்டோ

  டிக் கயிலாயநன் மாமலையை

எடுத்தவன் ஈரைந்துவாய்

  அரக்கன்முடி பத்தலற

விடுத்தவன் கைநரம்பால்

  வேதகீதங்கள் பாடலுறப்

படுத்தவன் பால்வெண்ணீற்றன்

  பழமண்ணிப் படிக்கரையே.  7 

 

 

திரிவன மும்மதிலும்

  எரித்தான்இமை யோர்பெருமான்

அரியவன் அட்டபுட்பம்

  அவைகொண்டடி போற்றிநல்ல

கரியவன் நான்முகனும்

  அடியும்முடி காண்பரிய

பரியவன் பாசுபதன்

  பழமண்ணிப் படிக் கரையே.  8 

 

 

வெற்றரைக் கற்றமணும்

  விரையாதுவிண் டாலமுண்ணுந்

துற்றரைத் துற்றறுப்பான்

  றுன்னஆடைத் தொழிலுடையீர்

பெற்றரைப் பித்தரென்று

  கருதேன்மின் படிக்கரையுள்

பற்றரைப் பற்றிநின்று

  பழிபாவங்கள் தீர்மின்களே.  9 

 

 

பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப்

  பழமண்ணிப் படிக்கரையை

அல்லியந் தாமரைத்தார்

  ஆரூரன் உரைத்ததமிழ்

சொல்லுதல் கேட்டல்வல்லா

  ரவர்க்குந்தமர்க் குங்கிளைக்கும்

எல்லியும் நண்பகலும்

  இடர்கூருதல் இல்லையன்றே.  10 

 

திருச்சிற்றம்பலம்