முதல்-திருமுறை

072 வாரார் கொங்கை மாதோர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : குடந்தைக்காரோணம்

திருச்சிற்றம்பலம்

 

வாரார் கொங்கை மாதோர் 

  பாக மாக வார்சடை

நீரார் கங்கை திங்கள் 

  சூடி நெற்றி யொற்றைக்கண்

கூரார் மழுவொன் றேந்தி 

  யந்தண் குழகன் குடமூக்கில்

காரார் கண்டத் தெண்டோள் 

  எந்தை காரோ ணத்தாரே.  1 

 

முடியார் மன்னர் மடமான் 

  விழியார் மூவுல கும்மேத்தும்

படியார் பவள வாயார் 

  பலரும் பரவிப் பணிந்தேத்தக்

கொடியார் விடையார் மாட 

  வீதிக் குடந்தைக் குழகாரும்

கடியார் சோலைக் கலவ 

  மயிலார் காரோ ணத்தாரே.  2 

 

மலையார் மங்கை பங்கர் 

  அங்கை அனலர் மடலாரும்

குலையார் தெங்கு குளிர்கொள் 

  வாழை யழகார் குடமூக்கில்

முலையா ரணிபொன் முளைவெண் 

  நகையார் மூவா மதியினார்

கலையார் மொழியார் காதல் 

  செய்யுங் காரோ ணத்தாரே.  3 

 

போதார் புனல்சேர் கந்தம் 

  உந்திப் பொலியவ் வழகாரும்

தாதார் பொழில்சூழ்ந் தெழிலார் 

  புறவி லந்தண்குட மூக்கில்

மாதார் மங்கை பாக 

  மாக மனைகள் பலிதேர்வார்

காதார் குழையர் காள 

  கண்டர் காரோ ணத்தாரே.  4 

 

பூவார் பொய்கை அலர்தா 

  மரைசெங் கழுநீர் புறவெல்லாம்

தேவார் சிந்தை அந்த ணாளர் 

  சீரா லடிபோற்றக்

கூவார் குயில்கள் ஆலும் 

  மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை

காவார் பொழில்சூழ்ந் தழகார் 

  குடந்தைக் காரோ ணத்தாரே.  5 

 

மூப்பூர் நலிய நெதியார் 

  விதியாய் முன்னே அனல்வாளி

கோப்பார் பார்த்தன் நிலைகண் 

  டருளுங் குழகர் குடமூக்கில்

தீர்ப்பா ருடலில் அடுநோய 

  அவலம் வினைகள் நலியாமைக்

காப்பார் காலன் அடையா 

  வண்ணங் காரோணத்தாரே.  6 

 

ஊனார் தலைகை யேந்தி 

  யுலகம் பலிதேர்ந் துழல்வாழ்க்கை

மானார் தோலார் புலியி 

  னுடையார் கரியின் னுரிபோர்வை

தேனார் மொழியார் திளைத்தங் 

  காடித் திகழுங் குடமூக்கில்

கானார் நட்டம் உடையார் 

  செல்வக் காரோ ணத்தாரே.  7 

 

வரையார் திரள்தோள் மதவா 

  ளரக்கன் எடுப்ப மலைசேரும்

விரையார் பாதம் நுதியா 

  லூன்ற நெரிந்து சிரம்பத்தும்

உரையார் கீதம் பாடக் 

  கேட்டங் கொளிவாள் கொடுத்தாரும்

கரையார் பொன்னி சூழ்தண் 

  குடந்தைக் காரோ ணத்தாரே.  8 

 

கரிய மாலுஞ் செய்ய 

  பூமேல் அயனுங் கழறிப்போய்

அரிய அண்டந் தேடிப் 

  புக்கும் அளக்க வொண்கிலார்

தெரிய அரிய தேவர் 

  செல்வந் திகழுங் குடமூக்கில்

கரிய கண்டர் கால 

  காலர் காரோ ணத்தாரே.  9 

 

நாணார் அமணர் நல்ல 

  தறியார் நாளுங் குரத்திகள்

பேணார் தூய்மை1 மாசு 

  கழியார் பேச லவரோடும்

சேணார் மதிதோய் மாட 

  மல்கு செல்வ நெடுவீதிக்

கோணா கரமொன் றுடையார் 

  குடந்தைக் காரோ ணத்தாரே. 10

 

கருவார் பொழில்சூழ்ந் தழகார் 

  செல்வக் காரோ ணத்தாரைத்

திருவார் செல்வம் மல்கு 

  சண்பைத் திகழுஞ் சம்பந்தன்

உருவார் செஞ்சொல் மாலையிவைபத் 

  துரைப்பா ருலகத்துக்

கருவா ரிடும்பைப் பிறப்ப 

  தறுத்துக் கவலை கழிவாரே. 11

திருச்சிற்றம்பலம்

மேலும்

பாண்டியனுக்காக தண்ணீர் பந்தல் அமைத்தல்
View Details
வலையன் மகளை மணத்தல்
View Details
வன்னி மரம்ரூபவ் கிணறுரூபவ் சிவலிங்கம் சாட்சி
View Details