ஆறாம்-திருமுறை

095 அப்பன்நீ அம்மைநீ

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ

அன்புடைய மாமனும் மாமி யும்நீ

ஒப்புடைய மாதரு மொண்பொரு ளும்நீ

ஒருகுலமுஞ் சுற்றமும் ஓரூ ரும்நீ

துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ

துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ

இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ

இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே.  1 

 

 

வெம்பவரு கிற்பதன்று கூற்றம் நம்மேல்

வெய்ய வினைப்பகையும் பைய நையும்

எம்பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம்

எங்கெழிலென் ஞாயி றெளியோ மல்லோம்

அம்பவளச் செஞ்சடைமேல் ஆறு சூடி

அனலாடி ஆனஞ்சும் ஆட்டு கந்த

செம்பவள வண்ணர்செங் குன்ற வண்ணர்

செவ்வான வண்ணரென் சிந்தை யாரே.  2 

 

 

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடா தாரே

அடக்குவித்தால் ஆரொருவர் அடங்கா தாரே

ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடா தாரே

உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே

பாட்டுவித்தால் ஆரொருவர் பாடா தாரே

பணிவித்தால் ஆரொருவர் பணியா தாரே

காட்டுவித்தால் ஆரொருவர் காணா தாரே

காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே.  3 

 

 

நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி

நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற

சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற

சொலற்கரிய சூழலாய் இதுவுன் றன்மை

நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள்

நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற

கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்

கனகமா மணிநிறத்தெங் கடவு ளானே.  4 

 

 

திருக்கோயி லில்லாத திருவி லூருந்

திருவெண்ணீ றணியாத திருவி லூரும்

பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்

பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்

விருப்போடு வெண்சங்க மூதா வூரும்

விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்

அருப்போடு மலர்பறித்திட் டுண்ணா வூரும்

அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.  5 

 

 

திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகிற்

தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்

ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்

உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்

அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்

அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னிற்

பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்

பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.  6 

 

 

நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்

நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்து மானாய்

மன்னானாய் மன்னவர்க்கோ ரமுத மானாய்

மறைநான்கு மானாயா றங்க மானாய்

பொன்னானாய் மணியானாய் போக மானாய்

பூமிமேற் புகழ்தக்க பொருளே உன்னை

என்னானாய் என்னானாய் என்னி னல்லால்

ஏழையேன் என்சொல்லி ஏத்து கேனே.  7 

 

 

அத்தாவுன் அடியேனை அன்பா லார்த்தாய்

அருள்நோக்கில் தீர்த்தநீ ராட்டிக் கொண்டாய்

எத்தனையும் அரியைநீ எளியை யானாய்

எனையாண்டு கொண்டிரங்கி யேன்று கொண்டாய்

பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன்

பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே

இத்தனையும் எம்பரமோ ஐய ஐயோ

எம்பெருமான் றிருக்கருணை இருந்த வாறே.  8 

 

 

குலம்பொல்லேன் குணம்பொல்லேன் குறியும் பொல்லேன்

குற்றமே பெரிதுடையேன் கோல மாய

நலம்பொல்லேன் நான்பொல்லேன் ஞானி யல்லேன்

நல்லாரோ டிசைந்திலேன் நடுவே நின்ற

விலங்கல்லேன் விலங்கல்லா தொழிந்தே னல்லேன்

வெறுப்பனவும் மிகப்பெரிதும் பேச வல்லேன்

இலம்பொல்லேன் இரப்பதே ஈய மாட்டேன்

என்செய்வான் தோன்றினேன் ஏழை யேனே.  9 

 

 

சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து

தரணியொடு வானாளத் தருவ ரேனும்

மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்

மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்

அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.  10

 

திருச்சிற்றம்பலம்