ஆறாம்-திருமுறை

078 ஒன்றா வுலகனைத்து

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆலங்காடு

திருச்சிற்றம்பலம்

 

ஒன்றா வுலகனைத்து மானார் தாமே

ஊழிதோ றூழி உயர்ந்தார் தாமே

நின்றாகி யெங்கும் நிமிர்ந்தார் தாமே

நீர்வளிதீ யாகாச மானார் தாமே

கொன்றாடுங் கூற்றை யுதைத்தார் தாமே

கோலப் பழனை யுடையார் தாமே

சென்றாடு தீர்த்தங்க ளானார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  1 

 

 

மலைமகளைப் பாக மமர்ந்தார் தாமே

வானோர் வணங்கப் படுவார் தாமே

சலமகளைச் செஞ்சடைமேல் வைத்தார் தாமே

சரணென் றிருப்பார்கட் கன்பர் தாமே

பலபலவும் வேடங்க ளானார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

சிலைமலையா மூவெயிலும் அட்டார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  2 

 

 

ஆவுற்ற ஐந்து முகந்தார் தாமே

அளவில் பெருமை யுடையார் தாமே

பூவுற்ற நாற்றமாய் நின்றார் தாமே

புனிதப் பொருளாகி நின்றார் தாமே

பாவுற்ற பாட லுகப்பார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

தேவுற் றடிபரவ நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  3 

 

 

நாறுபூங் கொன்றை முடியார் தாமே

நான்மறையோ டாறங்கஞ் சொன்னார் தாமே

மாறிலா மேனி யுடையார் தாமே

மாமதியஞ் செஞ்சடைமேல் வைத்தார் தாமே

பாறினார் வெண்டலையி லுண்டார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

தேறினார் சித்தத் திருந்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  4 

 

 

அல்லும் பகலுமாய் நின்றார் தாமே

அந்தியுஞ் சந்தியு மானார் தாமே

சொல்லும் பொருளெலா மானார் தாமே

தோத்திரமுஞ் சாத்திரமு மானார் தாமே

பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

செல்லும் நெறிகாட்ட வல்லார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  5 

 

 

தொண்டாய்ப் பணிவார்க் கணியார் தாமே

தூநீ றணியுஞ் சுவண்டர் தாமே

தண்டா மரையானும் மாலுந் தேடத்

தழலுருவா யோங்கி நிமிர்ந்தார் தாமே

பண்டா னிசைபாட நின்றார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

திண்டோ ள்க ளெட்டு முடையார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  6 

 

 

மையாருங் கண்ட மிடற்றார் தாமே

மயானத்தி லாடல் மகிழ்ந்தார் தாமே

ஐயாறும் ஆரூரும் ஆனைக் காவும்

அம்பலமுங் கோயிலாக் கொண்டார் தாமே

பையா டரவ மசைத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

செய்யாள் வழிபட நின்றார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  7 

 

 

விண்முழுதும் மண்முழுது மானார் தாமே

மிக்கோர்க ளேத்துங் குணத்தார் தாமே

கண்விழியாற் காமனையுங் காய்ந்தார் தாமே

காலங்க ளூழி கடந்தார் தாமே

பண்ணியலும் பாட லுகப்பார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

திண்மழுவா ளேந்து கரத்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  8 

 

 

காரார் கடல்நஞ்சை யுண்டார் தாமே

கயிலை மலையை யுடையார் தாமே

ஊரா வேகம்பம் உகந்தார் தாமே

ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே

பாரார் புகழப் படுவார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

தீராத வல்வினைநோய் தீர்ப்பார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  9 

 

 

மாலைப் பிறைசென்னி வைத்தார் தாமே

வண்கயிலை மாமலையை வந்தி யாத

நீலக் கடல்சூ ழிலங்கைக் கோனை

நெரிய விரலா லடர்த்தார் தாமே

பாலொத்த மேனி நிறத்தார் தாமே

பழனை பதியா வுடையார் தாமே

சீலத்தா ரேத்துந் திறத்தார் தாமே

திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.  10

 

திருச்சிற்றம்பலம்