ஆறாம்-திருமுறை

057 பாட்டான நல்ல

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)

திருச்சிற்றம்பலம்

 

பாட்டான நல்ல தொடையாய் போற்றி

பரிசை யறியாமை நின்றாய் போற்றி

சூட்டான திங்கள் முடியாய் போற்றி

தூமாலை மத்த மணிந்தாய் போற்றி

ஆட்டான தஞ்சு மமர்ந்தாய் போற்றி

அடங்கார் புரமெரிய நக்காய் போற்றி

காட்டானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  1 

 

 

அதிரா வினைக ளறுப்பாய் போற்றி

ஆல நிழற்கீழ் அமர்ந்தாய் போற்றி

சதுரா சதுரக் குழையாய் போற்றி

சாம்பர் மெய்பூசுந் தலைவா போற்றி

எதிரா உலக மமைப்பாய் போற்றி

என்றுமீ ளாவருள் செய்வாய் போற்றி

கதிரார் கதிருக்கோர் கண்ணே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  2 

 

 

செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி

செல்லாத செல்வ முடையாய் போற்றி

ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி

ஆகாச வண்ண முடியாய் போற்றி

வெய்யாய் தணியா யணியாய் போற்றி

வேளாத வேள்வி யுடையாய் போற்றி

கையார் தழலார் விடங்கா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  3 

 

 

ஆட்சி யுலகை யுடையாய் போற்றி

அடியார்க் கமுதெலாம் ஈவாய் போற்றி

சூட்சி சிறிது மிலாதாய் போற்றி

சூழ்ந்த கடல்நஞ்ச முண்டாய் போற்றி

மாட்சி பெரிது முடையாய் போற்றி

மன்னியென் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி

காட்சி பெரிது மரியாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  4 

 

 

முன்னியா நின்ற முதல்வா போற்றி

மூவாத மேனி யுடையாய் போற்றி

என்னியா யெந்தை பிரானே போற்றி

ஏழி னிசையே யுகப்பாய் போற்றி

மன்னிய மங்கை மணாளா போற்றி

மந்திரமுந் தந்திரமு மானாய் போற்றி

கன்னியார் கங்கைத் தலைவா போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  5 

 

 

உரியாய் உலகினுக் கெல்லாம் போற்றி

உணர்வென்னு மூர்வ துடையாய் போற்றி

எரியாய தெய்வச் சுடரே போற்றி

ஏசுமா முண்டி யுடையாய் போற்றி

அரியாய் அமரர்கட் கெல்லாம் போற்றி

அறிவே அடக்க முடையாய் போற்றி

கரியானுக் காழியன் றீந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  6 

 

 

எண்மேலும் எண்ண முடையாய் போற்றி

ஏறரிய வேறுங் குணத்தாய் போற்றி

பண்மேலே பாவித் திருந்தாய் போற்றி

பண்ணொடுயாழ் வீணை பயின்றாய் போற்றி

விண்மேலு மேலும் நிமிர்ந்தாய் போற்றி

மேலார்கண் மேலார்கண் மேலாய் போற்றி

கண்மேலுங் கண்ணொன் றுடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  7 

 

 

முடியார் சடையின் மதியாய் போற்றி

முழுநீறு சண்ணித்த மூர்த்தி போற்றி

துடியா ரிடையுமையாள் பங்கா போற்றி

சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி

அடியா ரடிமை அறிவாய் போற்றி

அமரர் பதியாள வைத்தாய் போற்றி

கடியார் புரமூன்று மெய்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  8 

 

 

போற்றிசைத்துன் னடிபரவ நின்றாய் போற்றி

புண்ணியனே நண்ண லரியாய் போற்றி

ஏற்றிசைக்கும் வான்மே லிருந்தாய் போற்றி

எண்ணா யிரநூறு பேராய் போற்றி

நாற்றிசைக்கும் விளக்காய நாதா போற்றி

நான்முகற்கும் மாற்கு மரியாய் போற்றி

காற்றிசைக்குந் திசைக்கெல்லாம் வித்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10 

 

திருச்சிற்றம்பலம்