ஆறாம்-திருமுறை

056 பொறையுடைய பூமிநீ

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : கயிலாயம் (நொடித்தான்மலை)

திருச்சிற்றம்பலம்

 

பொறையுடைய பூமிநீ ரானாய் போற்றி

பூதப் படையாள் புனிதா போற்றி

நிறையுடைய நெஞ்சின் இடையாய் போற்றி

நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

மறையுடைய வேதம் விரித்தாய் போற்றி

வானோர் வணங்கப் படுவாய் போற்றி

கறையுடைய கண்ட முடையாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  1 

 

 

முன்பாகி நின்ற முதலே போற்றி

மூவாத மேனிமுக் கண்ணா போற்றி

அன்பாகி நின்றார்க் கணியாய் போற்றி

ஆறேறு சென்னிச் சடையாய் போற்றி

என்பாக வெங்கு மணிந்தாய் போற்றி

என்சிந்தை நீங்கா இறைவா போற்றி

கண்பாவி நின்ற கனலே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  2 

 

 

மாலை யெழுந்த மதியே போற்றி

மன்னியென் சிந்தை யிருந்தாய் போற்றி

மேலை வினைக ளறுப்பாய் போற்றி

மேலாடு திங்கள் முடியாய் போற்றி

ஆலைக் கரும்பின் தெளிவே போற்றி

அடியார்கட் காரமுத மானாய் போற்றி

காலை முளைத்த கதிரே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  3 

 

 

உடலின் வினைக ளறுப்பாய் போற்றி

ஒள்ளெரி வீசும் பிரானே போற்றி

படருஞ் சடைமேல் மதியாய் போற்றி

பல்கணக் கூத்தப் பிரானே போற்றி

சுடரிற் றிகழ்கின்ற சோதி போற்றி

தோன்றியென் னுள்ளத் திருந்தாய் போற்றி

கடலி லொளியாய முத்தே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  4 

 

 

மைசேர்ந்த கண்ட முடையாய் போற்றி

மாலுக்கும் ஓராழி ஈந்தாய் போற்றி

பொய்சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி

போகாதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

மெய்சேரப் பால்வெண்ணீ றாடி போற்றி

மிக்கார்க ளேத்தும் விளக்கே போற்றி

கைசேர் அனலேந்தி யாடீ போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  5 

 

 

ஆறேறு சென்னி முடியாய் போற்றி

அடியார்கட் காரமுதாய் நின்றாய் போற்றி

நீறேறு மேனி யுடையாய் போற்றி

நீங்காதென் னுள்ளத் திருந்தாய் போற்றி

கூறேறு மங்கை மழுவா போற்றி

கொள்ளுங் கிழமையே ழானாய் போற்றி

காறேறு கண்ட மிடற்றாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  6 

 

 

அண்டமே ழன்று கடந்தாய் போற்றி

ஆதி புராணனாய் நின்றாய் போற்றி

பண்டை வினைக ளறுப்பாய் போற்றி

பாரோர்விண் ணேத்தப் படுவாய் போற்றி

தொண்டர் பரவு மிடத்தாய் போற்றி

தொழில்நோக்கி யாளுஞ் சுடரே போற்றி

கண்டங் கறுக்கவும் வல்லாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  7 

 

 

பெருகி யலைக்கின்ற ஆறே போற்றி

பேராநோய் பேர விடுப்பாய் போற்றி

உருகி நினைவார்தம் முள்ளாய் போற்றி

ஊனந் தவிர்க்கும் பிரானே போற்றி

அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி

ஆரு மிகழப் படாதாய் போற்றி

கருகிப் பொழிந்தோடு நீரே போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  8 

 

 

செய்ய மலர்மேலான் கண்ணன் போற்றி 

தேடி யுணராமை நின்றாய் போற்றி

பொய்யாநஞ் சுண்ட பொறையே போற்றி

பொருளாக என்னையாட் கொண்டாய் போற்றி

மெய்யாக ஆனஞ் சுகந்தாய் போற்றி

மிக்கார்க ளேத்துங் குணத்தாய் போற்றி

கையானை மெய்த்தோ லுரித்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  9 

 

 

மேல்வைத்த வானோர் பெருமான் போற்றி

மேலாடு புரமூன்று மெய்தாய் போற்றி

சீலத்தான் தென்னிலங்கை மன்னன் போற்றி 

சிலையெடுக்க வாயலற வைத்தாய் போற்றி

கோலத்தாற் குறைவில்லான் றன்னை யன்று

கொடிதாகக் காய்ந்த குழகா போற்றி

காலத்தாற் காலனையுங் காய்ந்தாய் போற்றி

கயிலை மலையானே போற்றி போற்றி.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

ஸ்ரீ போடோ சித்தர் ஞானி
View Details
நின்றசீர் நெடுமாற நாயனார்
View Details
கூற்றுவ நாயனார்
View Details