ஆறாம்-திருமுறை

051 கயிலாய மலையுள்ளார்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : வீழிமிழலை

திருச்சிற்றம்பலம்

 

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார் 

கந்தமா தனத்துளார் காளத் தியார்

மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்

வக்கரையார் சக்கரமாற் கீந்தார் வாய்ந்த

அயில்வாய சூலமுங் காபா லமும்

அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி

வெயிலாய சோதி விளங்கு நீற்றார்

வீழி மிழலையே மேவி னாரே.  1 

 

 

பூதியணி பொன்னிறத்தர் பூண நூலர்

பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர்

கேதிசர மேவினார் கேதா ரத்தார்

கெடில வடவதிகை வீரட் டத்தார்

மாதுயரந் தீர்த்தென்னை உய்யக் கொண்டார்

மழபாடி மேய மழுவா ளனார்

வேதி குடியுளார் மீயச் சூரார்

வீழி மிழலையே மேவி னாரே.  2 

 

 

அண்ணா மலையமர்ந்தார் ஆரூ ருள்ளார்

அளப்பூரார் அந்தணர்கள் மாடக் கோயில்

உண்ணாழி கையார் உமையா ளோடும்

இமையோர் பெருமானார் ஒற்றி யூரார்

பெண்ணா கடத்துப் பெருந்தூங் கானை

மாடத்தார் கூடத்தார் பேரா வூரார்

விண்ணோர்க ளெல்லாம் விரும்பி யேத்த 

வீழி மிழலையே மேவி னாரே.  3 

 

 

வெண்காட்டார் செங்காட்டங் குடியார் வெண்ணி 

நன்னகரார் வேட்களத்தார் வேத நாவார்

பண்காட்டும் வண்டார் பழனத் துள்ளார்

பராய்த்துறையார் சிராப்பள்ளி யுள்ளார் பண்டோ ர்

வெண்கோட்டுக் கருங்களிற்றைப் பிளிறப் பற்றி 

உரித்துரிவை போர்த்த விடலை வேடம்

விண்காட்டும் பிறைநுதலி யஞ்சக் காட்டி

வீழி மிழலையே மேவி னாரே.  4 

 

 

புடைசூழ்ந்த பூதங்கள் வேதம் பாடப் 

புலியூர்ச்சிற் றம்பலத்தே நடமா டுவார்

உடைசூழ்ந்த புலித்தோலர் கலிக்கச் சிமேற் 

றளியுளார் குளிர்சோலை யேகம் பத்தார்

கடைசூழ்ந்து பலிதேருங் கங்கா ளனார்

கழுமலத்தார் செழுமலர்த்தார்க் குழலி யோடும்

விடைசூழ்ந்த வெல்கொடியார் மல்கு செல்வ 

வீழி மிழலையே மேவி னாரே.  5 

 

 

பெரும்புலியூர் விரும்பினார் பெரும்பா ழியார்

பெரும்பற்றப் புலியூர்மூ லட்டா னத்தார்

இரும்புதலார் இரும்பூளை யுள்ளா ரேரார் 

இன்னம்ப ரார்ஈங்கோய் மலையார் இன்சொற்

கரும்பனையாள் உமையோடுங் கருகா வூரார்

கருப்பறிய லூரார் கரவீ ரத்தார்

விரும்பமரர் இரவுபகல் பரவி யேத்த 

வீழி மிழலையே மேவி னாரே.  6 

 

 

மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார்

வாழ்கொளி புத்தூரார் மாகா ளத்தார்

கறைக்காட்டுங் கண்டனார் காபா லியார்

கற்குடியார் விற்குடியார் கானப் பேரார்

பறைக்காட்டுங் குழிவிழிகட் பல்பேய் சூழப் 

பழையனூர் ஆலங்காட் டடிகள் பண்டோ ர்

மிறைக்காட்டுங் கொடுங்காலன் வீடப் பாய்ந்தார்

வீழி மிழலையே மேவி னாரே.  7 

 

 

அஞ்சைக் களத்துள்ளார் ஐயாற் றுள்ளார்

ஆரூரார் பேரூரார் அழுந்தூ ருள்ளார்

தஞ்சைத் தளிக்குளத்தார் தக்க ளூரார்

சாந்தை அயவந்தி தங்கி னார்தாம்

நஞ்சைத் தமக்கமுதா உண்ட நம்பர்

நாகேச் சரத்துள்ளார் நாரை யூரார்

வெஞ்சொற் சமண்சிறையி லென்னை மீட்டார்

வீழி மிழலையே மேவி னாரே.  8 

 

 

கொண்டலுள்ளார் கொண்டீச் சரத்தி னுள்ளார்

கோவலூர் வீரட்டங் கோயில் கொண்டார்

தண்டலையார் தலையாலங் காட்டி னுள்ளார்

தலைச்சங்கைப் பெருங்கோயில் தங்கி னார்தாம்

வண்டலொடு மணற்கொணரும் பொன்னி நன்னீர் 

வலஞ்சுழியார் வைகலின்மேன் மாடத் துள்ளார்

வெண்டலைமான் கைக்கொண்ட விகிர்த வேடர்

வீழி மிழலையே மேவி னாரே.  9 

 

 

அரிச்சந் திரத்துள்ளார் அம்ப ருள்ளார்

அரிபிரமர் இந்திரர்க்கு மரிய ரானார்

புரிச்சந் திரத்துள்ளார் போகத் துள்ளார்

பொருப்பரையன் மகளோடு விருப்ப ராகி

எரிச்சந்தி வேட்கு மிடத்தா ரேமக்

கூடத்தார் பாடத்தே னிசையார் கீதர்

விரிச்சங்கை யெரிக்கொண்டங் காடும் வேடர்

வீழி மிழலையே மேவி னாரே.  10 

 

 

புன்கூரார் புறம்பயத்தார் புத்தூ ருள்ளார்

பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க

தன்கூர்மை கருதிவரை யெடுக்க லுற்றான் 

தலைகளொடு மலைகளன்ன தாளுந் தோளும்

பொன்கூருங் கழலடியோர் விரலா லூன்றிப்

பொருப்பதன்கீழ் நெரித்தருள்செய் புவன நாதர்

மின்கூருஞ் சடைமுடியார் விடையின் பாகர்

வீழி மிழலையே மேவி னாரே.  11

 

திருச்சிற்றம்பலம்