ஆறாம்-திருமுறை

027 பொய்ம்மாயப் பெருங்கடலிற்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

பொய்ம்மாயப் பெருங்கடலிற் புலம்பா நின்ற 

புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்

இம்மாயப் பெருங்கடலை அரித்துத் தின்பீர்க்

கில்லையே கிடந்துதான் யானேல் வானோர்

தம்மானைத் தலைமகனைத் தண்ண லாரூர்த் 

தடங்கடலைத் தொடர்ந்தோரை யடங்கச் செய்யும்

எம்மான்ற னடித்தொடர்வான் உழிதர் கின்றேன்

இடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.  1 

 

 

ஐம்பெருமா பூதங்காள் ஒருவீர் வேண்டிற் 

றொருவீர்வேண் டீர்ஈண்டிவ் வவனி யெல்லாம்

உம்பரமே உம்வசமே ஆக்க வல்லீர்க் 

கில்லையே னுகர்போகம் யானேல் வானோர்

உம்பருமாய் ஊழியுமாய் உலகே ழாகி 

ஒள்ளாரூர் நள்ளமிர்தாம் வள்ளல் வானோர்

தம்பெருமா னார்நின்ற அரனைக் காண்பேன்

தடைப்படுவே னாக்கருதித் தருக்கேன் மின்னே.  2 

 

 

சில்லுருவிற் குறியிருத்தி நித்தல் பற்றிச்

செழுங்கணால் நோக்குமிது வூக்க மன்று

பல்லுருவிற் றொழில்பூண்ட பஞ்ச பூதப்

பளகீரும் வசமன்றே பாரே லெல்லாஞ்

சொல்லுருவிற் சுடர்மூன்றாய் உருவம் மூன்றாய்த்

தூநயன மூன்றாகி ஆண்ட ஆரூர்

நல்லுருவிற் சிவனடியே அடைவேன் நும்மால் 

நமைப்புண்ணேன் கமைத்துநீர் நடமின் களே.  3 

 

 

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத் 

துறுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள்

மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ 

வையகமே போதாதே யானேல் வானோர்

பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்

புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை

தன்னுருவைத் தந்தவனை எந்தை தன்னைத்

தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே.  4 

 

 

துப்பினைமுன் பற்றறா விறலே மிக்க

சோர்வுபடு சூட்சியமே சுகமே நீங்கள்

ஒப்பினையைப் பாவித்திவ் வுலக மெல்லாம் 

உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே என்றன்

வைப்பினைப்பொன் மதிலாரூர் மணியை வைகல் 

மணாளனையெம் பெருமானை வானோர் தங்கள்

அப்பனைச்செப் பிடவடைவேன் நும்மால் நானும் 

ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.  5 

 

 

பொங்குமத மானமே ஆர்வச் செற்றக்

குரோதமே உலோபமே பொறையே நீங்கள்

உங்கள்பெரு மாநிலத்தின் எல்லை யெல்லாம் 

உழறுமிது குறைமுடிப்பீர்க் கரிதே யானேல்

அங்கமலத் தயனொடுமா லாகி மற்றும்

அதற்கப்பா லொன்றாகி அறிய வொண்ணாச்

செங்கனகத் தனிக்குன்றைச் சிவனை ஆரூர்ச் 

செல்வனைச்சேர் வேனும்மாற் செலுத்து ணேனே.  6 

 

 

இடர்பாவ மெனமிக்க துக்க வேட்கை

வெறுப்பேயென் றனைவீரும் உலகை யோடிக்

குடைகின்றீர்க் குலகங்கள் குலுங்கி நுங்கள் 

குறிநின்ற தமையாதே யானேல் வானோர்

அடையார்தம் புரமூன்று மெரிசெய் தானை

அமரர்கள்தம் பெருமானை அரனை ஆரூர்

உடையானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் 

ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.  7 

 

 

விரைந்தாளும் நல்குரவே செல்வே பொல்லா 

வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்

நிரந்தோடி மாநிலத்தை அரித்துத் தின்பீர்க் 

கில்லையே நுகர்போகம் யானேல் வானோர்

கரைந்தோட வருநஞ்சை அமுது செய்த 

கற்பகத்தைத் தற்பரத்தைத் திருவா ரூரிற்

பரஞ்சோதி தனைக்காண்பேன் படேனும் பண்பிற்

பரிந்தோடி யோட்டந்து பகட்டேன் மின்னே.  8 

 

 

மூள்வாய தொழிற்பஞ்சேந் திரிய வஞ்ச

முகரிகாண் முழுதுமிவ் வுலகை யோடி

நாள்வாயு நும்முடைய மம்ம ராணை 

நடாத்துகின்றீர்க் கமையாதே யானேல் வானோர்

நீள்வான முகடதனைத் தாங்கி நின்ற 

நெடுந்தூணைப் பாதாளக் கருவை ஆரூர்

ஆள்வானைக் கடுகச்சென் றடைவேன் நும்மால் 

ஆட்டுணேன் ஓட்டந்தீங் கலையேன் மின்னே.  9 

 

 

சுருக்கமொடு பெருக்கநிலை நீத்தல் பற்றித் 

துப்பறையென் றனைவீரிவ் வுலகை யோடிச்

செருக்கிமிகை செலுத்தியும் செய்கை வைகல் 

செய்கின்றீர்க் கமையாதே யானேல் மிக்க

தருக்கிமிக வரையெடுத்த அரக்க னாகந் 

தளரவடி எடுத்தவன்றன் பாடல் கேட்டு

இரக்கமெழுந் தருளியவெம் பெருமான் பாதத் 

திடையிலேன் கெடுவீர்காள் இடறேன் மின்னே.  10 

 

திருச்சிற்றம்பலம்