ஆறாம்-திருமுறை

026 பாதித்தன் திருவுருவிற் பெண்கொண்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : ஆரூர்

திருச்சிற்றம்பலம்

 

பாதித்தன் திருவுருவிற் பெண்கொண் டானைப்

பண்டொருகால் தசமுகனை அழுவித் தானை

வாதித்துத் தடமலரான் சிரங்கொண் டானை

வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைச்

சோதிச்சந் திரன்மேனி மறுச்செய்தானைச்

சுடரங்கி தேவனையோர் கைக்கொண் டானை

ஆதித்தன் பற்கொண்ட அம்மான் றன்னை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  1 

 

 

வெற்புறுத்த திருவடியாற் கூற்றட் டானை

விளக்கினொளி மின்னினொளி முத்தின் சோதி

ஒப்புறுத்த திருவுருவத் தொருவன் றன்னை

ஓதாதே வேத முணர்ந்தான் றன்னை

அப்புறுத்த கடல்நஞ்ச முண்டான் றன்னை

அமுதுண்டார் உலந்தாலு முலவா தானை

அப்புறுத்த நீரகத்தே அழலா னானை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  2 

 

 

ஒருகாலத் தொருதேவர் கண்கொண் டானை

ஊழிதோ றூழி உயர்ந்தான் றன்னை

வருகாலஞ் செல்கால மாயி னானை

வன்கருப்புச் சிலைக்காமன் உடலட் டானைப்

பொருவேழக் களிற்றுரிவைப் போர்வை யானைப்

புள்ளரைய னுடல்தன்னைப் பொடிசெய் தானை

அருவேள்வி தகர்த்தெச்சன் றலைகொண் டானை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  3 

 

 

மெய்ப்பால்வெண் ணீறணிந்த மேனி யானை

வெண்பளிங்கி னுட்பதித்த சோதி யானை

ஒப்பானை ஒப்பிலா ஒருவன் றன்னை

உத்தமனை நித்திலத்தை உலக மெல்லாம்

வைப்பானைக் களைவானை வருவிப் பானை

வல்வினையேன் மனத்தகத்தே மன்னி னானை

அப்பாலைக் கப்பாலைக் கப்பா லானை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  4 

 

 

பிண்டத்திற் பிறந்ததொரு பொருளை மற்றைப் 

பிண்டத்தைப் படைத்ததனைப் பெரிய வேதத்

துண்டத்தின் துணிபொருளைச் சுடுதீ யாகிச்

சுழல்காலாய் நீராகிப் பாரா யிற்றைக்

கண்டத்தில் தீதினஞ் சமுது செய்து 

கண்மூன்று படைத்ததொரு கரும்பைப் பாலை

அண்டத்துக் கப்புறத்தார் தமக்கு வித்தை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  5 

 

 

நீதியாய் நிலனாகி நெருப்பாய் நீராய்

நிறைகாலாய் இவையிற்றின் நியம மாகிப்

பாதியாய் ஒன்றாகி இரண்டாய் மூன்றாய் 

பரமாணு வாய்ப்பழுத்த பண்க ளாகிச்

சோதியாய் இருளாகிச் சுவைக ளாகிச்

சுவைகலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்

ஆதியாய் அந்தமாய் நின்றான் றன்னை

ஆரூரிற் கண்டடியேன் அயர்த்த வாறே.  6 

 

 

இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  7 

 

 

இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

 

இப்பதிகத்தில் 10-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  10 

 

திருச்சிற்றம்பலம்