ஆறாம்-திருமுறை

005 எல்லாஞ் சிவனென்ன

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : அதிகை வீரட்டானம்

திருச்சிற்றம்பலம்

 

எல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி

எரிசுடராய் நின்ற இறைவா போற்றி

கொல்லார் மழுவாட் படையாய் போற்றி 

கொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி

கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி

கற்றா ரிடும்பை களைவாய் போற்றி

வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி

வீரட்டங் காதல் விமலா போற்றி.  1 

 

 

பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி 

பல்லூழி யாய படைத்தாய் போற்றி

ஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி 

உள்குவார் உள்ளத் துறைவாய் போற்றி

காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

கார்மேக மன்ன மிடற்றாய் போற்றி

ஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி

அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.  2 

 

 

முல்லையங் கண்ணி முடியாய் போற்றி

முழுநீறு பூசிய மூர்த்தி போற்றி

எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி 

ஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி

சில்லைச் சிரைத்தலையில் ஊணா போற்றி

சென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி

தில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி

திருவீரட் டானத்தெஞ் செல்வா போற்றி.  3 

 

 

சாம்பர் அகலத் தணிந்தாய் போற்றி

தவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி

கூம்பித் தொழுவார்தங் குற்றே வலைக் 

குறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி

பாம்பும் மதியும் புனலுந் தம்மிற் 

பகைதீர்த் துடன்வைத்த பண்பா போற்றி

ஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி

அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.  4 

 

 

நீறேறு நீல மிடற்றாய் போற்றி

நிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி

கூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி

கோளரவம் ஆட்டுங் குழகா போற்றி

ஆறேறு சென்னி யுடையாய் போற்றி

அடியார்கட் காரமுத மானாய் போற்றி

ஏறேற என்றும் உகப்பாய் போற்றி

இருங்கெடில வீரட்டத் தெந்தாய் போற்றி.  5 

 

 

பாடுவார் பாட லுகப்பாய் போற்றி

பழையாற்றுப் பட்டீச் சுரத்தாய் போற்றி

வீடுவார் வீடருள வல்லாய் போற்றி

வேழத் துரிவெருவப் போர்த்தாய் போற்றி

நாடுவார் நாடற் கரியாய் போற்றி

நாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி

ஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி

அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.  6 

 

 

மண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி

மால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி

விண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி

வேழத் துரிமூடும் விகிர்தா போற்றி

பண்டுளங்கப் பாடல் பயின்றாய் போற்றி 

பார்முழுது மாய பரமா போற்றி

கண்டுளங்கக் காமனைமுன் காய்ந்தாய் போற்றி

கார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி.  7 

 

 

வெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போற்றி

விரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி

துஞ்சாப் பலிதேருந் தோன்றால் போற்றி

தொழுதகை துன்பந் துடைப்பாய் போற்றி

நஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி

நான்மறையோ டாறங்க மானாய் போற்றி

அஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி

அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.  8 

 

 

சிந்தையாய் நின்ற சிவனே போற்றி

சீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி

புந்தியாய்ப் புண்டரிகத் துள்ளாய் போற்றி

புண்ணியனே போற்றி புனிதா போற்றி

சந்தியாய் நின்ற சதுரா போற்றி

தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி

அந்தியாய் நின்ற அரனே போற்றி

அலைகெடில வீரட்டத் தாள்வாய் போற்றி.  9 

 

 

முக்கணா போற்றி முதல்வா போற்றி

முருகவேள் தன்னைப் பயந்தாய் போற்றி

தக்கணா போற்றி தருமா போற்றி

தத்துவனே போற்றியென் தாதாய் போற்றி

தொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்பத் 

துளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி

எக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி

எறிகெடில வீரட்டத் தீசா போற்றி. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

திருக்கோயிலூர் ஜடாமுடித் தம்பிரான் சித்தர்
View Details
கௌரியின் துயர் தீர்த்தல்
View Details
நின்றசீர் நெடுமாற நாயனார்
View Details