ஆறாம்-திருமுறை

001 அரியானை அந்தணர்தஞ்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஆறாம் திருமுறை

  தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)

திருச்சிற்றம்பலம்

 

அரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை

அருமறையி னகத்தானை அணுவை யார்க்குந்

தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத் 

திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்

கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக் 

கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற

பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  1 

 

 

கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்

காவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை

அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை 

ஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே

மற்றாருந் தன்னொப்பா ரில்லா தானை

வானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்தப்

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  2 

 

 

கருமானின் உரியதளே உடையா வீக்கிக் 

கனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி

வருமானத் திரள்தோள்கள் மட்டித் தாட

வளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி

அருமான வாண்முகத்தா ளமர்ந்து காண

அமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற

பெருமானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  3 

 

 

அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை

அமரர்கள்தம் பெருமானை அரனை மூவா

மருந்தமரர்க் கருள்புரிந்த மைந்தன் றன்னை

மறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணுந்

திருந்தொளிய தாரகையுந் திசைக ளெட்டுந் 

திரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய

பெருந்தகையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  4 

 

 

அருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்

அருமருந்தை அகல்ஞாலத் தகத்துள் தோன்றி

வருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு

வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்

பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  5 

 

 

கரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னைக் 

கனவயிரக் குன்றனைய காட்சி யானை

அரும்பமரும் பூங்கொன்றைத் தாரான் றன்னை 

அருமறையோ டாறங்க மாயி னானைச்

சுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர்ச் 

சுடர்க்கொழுந்தைத் துளக்கில்லா விளக்கை மிக்க

பெரும்பொருளைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  6 

 

 

வரும்பயனை எழுநரம்பி னோசை யானை

வரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி

அரும்பயஞ்செ யவுணர்புர மெரியக் கோத்த

அம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னைச்

சுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்

துளங்காத சிந்தையராய்த் துறந்தோ ருள்ளப்

பெரும்பயனைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  7 

 

 

காரானை ஈருரிவைப் போர்வை யானைக்

காமருபூங் கச்சியே கம்பன் றன்னை

ஆரேனு மடியவர்கட் கணியான் றன்னை

அமரர்களுக் கறிவரிய அளவி லானைப்

பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் 

பயில்கின்ற பரஞ்சுடரைப் பரனை எண்ணில்

பேரானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  8 

 

 

முற்றாத பால்மதியஞ் சூடினானை

மூவுலகுந் தானாய முதல்வன் றன்னைச்

செற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னைத்

திகழொளியை மரகதத்தைத் தேனைப் பாலைக்

குற்றாலத் தமர்ந்துறையுங் குழகன் றன்னைக்

கூத்தாட வல்லானைக் கோனை ஞானம்

பெற்றானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.  9 

 

 

காரொளிய திருமேனிச் செங்கண் மாலுங் 

கடிக்கமலத் திருந்தயனுங் காணா வண்ணஞ்

சீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லைத் 

திகழொளியைச் சிந்தைதனை மயக்கந் தீர்க்கும்

ஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்

ஏழுலகுங் கடந்தண்டத் தப்பால் நின்ற

பேரொளியைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்

பேசாத நாளெல்லாம் பிறவா நாளே. 10

 

திருச்சிற்றம்பலம்