ஐந்தாம்-திருமுறை

097 சிந்திப் பார்மனத்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : பொது

திருச்சிற்றம்பலம்

 

சிந்திப் பார்மனத்

  தான்சிவன் செஞ்சுடர்

அந்தி வானிறத்

  தானணி யார்மதி

முந்திச் சூடிய

  முக்கண்ணி னானடி

வந்திப் பாரவர்

  வானுல காள்வரே.  1 

 

 

அண்ட மாரிரு

  ளூடு கடந்தும்பர்

உண்டு போலுமோ

  ரொண்சுட ரச்சுடர்

கண்டிங் காரறி

  வாரறி வாரெலாம்

வெண்டிங் கட்கண்ணி

  வேதியன் என்பரே.  2 

 

 

ஆதி யாயவ

  னாரு மிலாதவன்

போது சேர்புனை

  நீண்முடிப் புண்ணியன்

பாதி பெண்ணுரு

  வாகிப் பரஞ்சுடர்ச்

சோதி யுட்சோதி

  யாய்நின்ற சோதியே.  3 

 

 

இட்ட திட்டதோ

  ரேறுகந் தேறியூர்

பட்டி துட்டங்க

  னாய்ப்பலி தேர்வதோர்

கட்ட வாழ்க்கைய

  னாகிலும் வானவர்

அட்ட மூர்த்தி

  யருளென் றடைவரே.  4 

 

 

ஈறில் கூறைய

  னாகி எரிந்தவெண்

ணீறு பூசி

  நிலாமதி சூடிலும்

வீறி லாதன

  செய்யினும் விண்ணவர்

ஊற லாயரு

  ளாயென் றுரைப்பரே.  5 

 

 

உச்சி வெண்மதி

  சூடிலும் ஊனறாப்

பச்சை வெண்டலை

  யேந்திப் பலஇலம்

பிச்சை யேபுகு

  மாகிலும் வானவர்

அச்சந் தீர்த்தரு

  ளாயென் றடைவரே.  6 

 

 

ஊரி லாயென்றொன்

  றாக வுரைப்பதோர்

பேரி லாய்பிறை

  சூடிய பிஞ்ஞகா

காரு லாங்கண்ட

  னேயுன் கழலடி

சேர்வி லார்கட்குத்

  தீயவை தீயவே.  7 

 

 

எந்தை யேயெம்

  பிரானே யெனவுள்கிச்

சிந்திப் பாரவர்

  தீவினை தீருமால்

வெந்த நீறுமெய்

  பூசிய வேதியன்

அந்த மாவளப்

  பாரடைந் தார்களே.  8 

 

 

ஏன வெண்மருப்

  போடென்பு பூண்டெழில்

ஆனை யீருரி

  போர்த்தன லாடிலுந்

தான வண்ணத்த

  னாகிலுந் தன்னையே

வான நாடர்

  வணங்குவர் வைகலே.  9 

 

 

ஐயன் அந்தணன்

  ஆணொடு பெண்ணுமாம்

மெய்யன் மேதகு

  வெண்பொடிப் பூசிய

மைகொள் கண்டத்தன்

  மான்மறிக் கையினான்

பைகொள் பாம்பரை

  யார்த்த பரமனே.  10 

 

 

ஒருவ னாகிநின்

  றானிவ் வுலகெலாம்

இருவ ராகிநின்

  றார்கட் கறிகிலான்

அருவ ராவரை

  ஆர்த்தவ னார்கழல்

பரவு வாரவர்

  பாவம் பறையுமே.  11 

 

 

ஓத வண்ணனும்

  ஒண்மலர்ச் செல்வனும்

நாத னேயரு

  ளாயென்று நாடொறுங்

காதல் செய்து

  கருதப் படுமவர்

பாத மேத்தப்

  பறையுநம் பாவமே.  12 

 

 

ஔவ தன்மை

  யவரவ ராக்கையான்

வெவ்வ தன்மைய

  னென்ப தொழிமினோ

மௌவல் நீண்மலர்

  மேலுறை வானொடு

பௌவ வண்ணனு

  மாய்ப்பணி வார்களே.  13 

 

 

அக்கும் ஆமையும்

  பூண்டன லேந்திஇல்

புக்குப் பல்பலி

  தேரும் புராணனை

நக்கு நீர்கள்

  நரகம் புகேன்மினோ

தொக்க வானவ

  ராற்றொழு வானையே.  14 

 

 

கங்கை தங்கிய

  செஞ்சடை மேலிளந்

திங்கள் சூடிய

  தீநிற வண்ணனார்

இங்க ணாரெழில்

  வானம் வணங்கவே

அங்க ணாற்கது

  வாலவன் தன்மையே.  15 

 

 

ஙகர வெல்கொடி

  யானொடு நன்னெஞ்சே

நுகர நீயுனைக்

  கொண்டுயப் போக்குறில்

மகர வெல்கொடி

  மைந்தனைக் காய்ந்தவன்

புகரில் சேவடி

  யேபுக லாகுமே.  16 

 

 

சரண மாம்படி

  யார்பிற ரியாவரோ

கரணந் தீர்த்துயிர்

  கையி லிகழ்ந்தபின்

மரண மெய்திய

  பின்னவை நீக்குவான்

அரண மூவெயி

  லெய்தவ னல்லனே.  17 

 

 

ஞமனென் பான்நர

  கர்க்கு நமக்கெலாஞ்

சிவனென் பான்செழு

  மான்மறிக் கையினான்

கவனஞ் செய்யுங்

  கனவிடை யூர்தியான்

தமரென் றாலுங்

  கெடுந்தடு மாற்றமே.  18 

 

 

இடப மேறியும்

  இல்பலி யேற்பவர்

அடவி காதலித்

  தாடுவர் ஐந்தலைப்

படவம் பாம்பரை

  யார்த்த பரமனைக்

கடவி ராய்ச்சென்று

  கைதொழு துய்ம்மினே.  19 

 

 

இணர்ந்து கொன்றைபொற்

  றாது சொரிந்திடும்

புணர்ந்த வாளர

  வம்மதி யோடுடன்

அணைந்த அஞ்சடை

  யானவன் பாதமே

உணர்ந்த உள்ளத்

  தவருணர் வார்களே.  20 

 

 

தருமந் தான்றவந்

  தான்றவத் தால்வருங்

கருமந் தான்கரு

  மான்மறிக் கையினான்

அருமந் தன்ன

  அதிர்கழல் சேர்மினோ

சிரமஞ் சேரழல்

  தீவினை யாளரே.  21 

 

 

நமச்சி வாயவென்

  பாருள ரேலவர்

தமச்ச நீங்கத்

  தவநெறி சார்தலால்

அமைத்துக் கொண்டதோர்

  வாழ்க்கைய னாகிலும்

இமைத்து நிற்பது

  சால அரியதே.  22 

 

 

பற்பல் காலம்

  பயிற்றிப் பரமனைச்

சொற்பல் காலம்நின்

  றேத்துமின் தொல்வினை

வெற்பில் தோன்றிய

  வெங்கதிர் கண்டவப்

புற்ப னிக்கெடு

  மாறது போலுமே.  23 

 

 

மணிசெய் கண்டத்து

  மான்மறிக் கையினான்

கணிசெய் வேடத்தர்

  ஆயவர் காப்பினாற்

பணிகள் தாஞ்செய

  வல்லவர் யாவர்தம்

பிணிசெய் யாக்கையை

  நீக்குவர் பேயரே.  24 

 

 

இயக்கர் கின்னரர்

  இந்திரன் தானவர்

நயக்க நின்றவன்

  நான்முகன் ஆழியான்

மயக்க மெய்தவன்

  மாலெரி யாயினான்

வியக்குந் தன்மையி

  னானெம் விகிர்தனே.  25 

 

 

அரவ மார்த்தன

  லாடிய அண்ணலைப்

பரவு வாரவர்

  பாவம் பறைதற்குக்

குரவை கோத்தவ

  னுங்குளிர் போதின்மேல்

கரவில் நான்முக

  னுங்கரி யல்லரே.  26 

 

 

அழலங் கையினன்

  அந்தரத் தோங்கிநின்

றுழலும் மூவெயில்

  ஒள்ளழ லூட்டினான்

தழலுந் தாமரை

  யானொடு தாவினான்

கழலுஞ் சென்னியுங்

  காண்டற் கரியனே.  27 

 

 

இளமை கைவிட்

  டகறலும் மூப்பினார்

வளமை போய்ப்பிணி

  யோடு வருதலால்

உளமெ லாமொளி

  யாய்மதி ஆயினான்

கிளமை யேகிளை

  யாக நினைப்பனே.  28 

 

 

தன்னிற் றன்னை

  அறியுந் தலைமகன்

தன்னிற் றன்னை

  அறியிற் றலைப்படுந்

தன்னிற் றன்னை

  அறிவில னாயிடிற்

தன்னிற் றன்னையுஞ்

  சார்தற் கரியனே.  29 

 

 

இலங்கை மன்னனை

  ஈரைந்து பத்துமன்

றலங்க லோடுட

  னேசெல வூன்றிய

நலங்கொள் சேவடி

  நாடொறும் நாடொறும்

வலம்கொண் டேத்துவார்

  வானுல காள்வரே.  30 

 

திருச்சிற்றம்பலம்