ஐந்தாம்-திருமுறை

083 பாணத் தால்மதில்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : நாகைக்காரோணம்

திருச்சிற்றம்பலம்

 

பாணத் தால்மதில்

  மூன்று மெரித்தவன்

பூணத் தானர

  வாமை பொறுத்தவன்

காணத் தானினி

  யான்கடல் நாகைக்கா

ரோணத் தானென

  நம்வினை ஓயுமே.  1 

 

 

வண்ட லம்பிய

  வார்சடை ஈசனை

விண்ட லம்பணிந்

  தேத்தும் விகிர்தனைக்

கண்ட லங்கமழ்

  நாகைக்கா ரோணனைக்

கண்ட லும்வினை

  யான கழலுமே.  2 

 

 

புனையும் மாமலர்

  கொண்டு புரிசடை

நனையும் மாமலர்

  சூடிய நம்பனைக்

கனையும் வார்கடல்

  நாகைக்கா ரோணனை

நினைய வேவினை

  யாயின நீங்குமே.  3 

 

 

கொல்லை மால்விடை

  யேறிய கோவினை

எல்லி மாநட

  மாடும் இறைவனைக்

கல்லி னார்மதில்

  நாகைக்கா ரோணனைச்

சொல்ல வேவினை

  யானவை சோருமே.  4 

 

 

மெய்ய னைவிடை

  யூர்தியை வெண்மழுக்

கைய னைக்கடல்

  நாகைக்கா ரோணனை

மைய னுக்கிய

  கண்டனை வானவர்

ஐய னைத்தொழு

  வார்க்கல்ல லில்லையே.  5 

 

 

அலங்கல் சேர்சடை

  ஆதி புராணனை

விலங்கல் மெல்லியல்

  பாகம் விருப்பனைக்

கலங்கள் சேர்கடல்

  நாகைக்கா ரோணனை

வலங்கொள் வார்வினை

  யாயின மாயுமே.  6 

 

 

சினங்கொள் மால்கரி

  சீறிய ஏறினை

இனங்கொள் வானவ

  ரேத்திய ஈசனைக்

கனங்கொள் மாமதில்

  நாகைக்கா ரோணனை

மனங்கொள் வார்வினை

  யாயின மாயுமே.  7 

 

 

அந்த மில்புகழ்

  ஆயிழை யார்பணிந்

தெந்தை யீசனென்

  றேத்தும் இறைவனைக்

கந்த வார்பொழில்

  நாகைக்கா ரோணனைச்

சிந்தை செய்யக்

  கெடுந்துயர் திண்ணமே.  8 

 

 

கருவ னைக்கடல்

  நாகைக்கா ரோணனை

இருவ ருக்கறி

  வொண்ணா இறைவனை

ஒருவ னையுண

  ரார்புர மூன்றெய்த

செருவ னைத்தொழத்

  தீவினை தீருமே.  9 

 

 

கடல்க ழிதழி

  நாகைக்கா ரோணன்றன்

வடவ ரையெடுத்

  தார்த்த அரக்கனை

அடர வூன்றிய

  பாதம் அணைதரத்

தொடர அஞ்சுந்

  துயக்கறுங் காலனே. 10

திருச்சிற்றம்பலம்

மேலும்

கழறிற்றறிவார் நாயனார்
View Details
ஸ்ரீ பெருமானந்த சித்த சுவாமிகள்
View Details
சங்கப் பலகையளித்தல்
View Details