ஐந்தாம்-திருமுறை

066 ஓத மார்கட லின்விட

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : ஐந்தாம் திருமுறை

  தலம் : வலஞ்சுழி

திருச்சிற்றம்பலம்

 

ஓத மார்கட

  லின்விட முண்டவன்

பூத நாயகன்

  பொற்கயி லைக்கிறை

மாதொர் பாகன்

  வலஞ்சுழி யீசனைப்

பாத மேத்தப்

   பறையுநம் பாவமே.  1 

 

 

கயிலை நாதன்

  கறுத்தவர் முப்புரம்

எயில்கள் தீயெழ

  வெல்வல வித்தகன்

மயில்க ளாலும்

  வலஞ்சுழி யீசனைப்

பயில்கி லார்சிலர்

  பாவித் தொழும்பரே.  2 

 

 

இளைய காலமெம்

  மானை யடைகிலாத்

துளையி லாச்செவித்

  தொண்டர்காள் நும்முடல்

வளையுங் காலம்

  வலஞ்சுழி யீசனைக்

களைக ணாகக்

  கருதிநீர் உய்ம்மினே.  3 

 

 

நறைகொள் பூம்புனல்

  கொண்டெழு மாணிக்காய்க்

குறைவி லாக்கொடுங்

  கூற்றுதைத் திட்டவன்

மறைகொள் நாவன்

  வலஞ்சுழி மேவிய

இறைவ னையினி

  என்றுகொல் காண்பதே.  4 

 

 

விண்ட வர்புர

  மூன்று மெரிகொளத்

திண்டி றற்சிலை

  யாலெரி செய்தவன்

வண்டு பண்முர

  லுந்தண் வலஞ்சுழி

அண்ட னுக்கடி

  மைத்திறத் தாவனே.  5 

 

 

படங்கொள் பாம்பொடு

  பான்மதி யஞ்சடை

அடங்க வாழவல்

  லானும்பர் தம்பிரான்

மடந்தை பாகன்

  வலஞ்சுழி யானடி

அடைந்த வர்க்கடி

  மைத்திறத் தாவனே.  6 

 

 

நாக்கொண் டுபர

  வும்மடி யார்வினை

போக்க வல்ல

  புரிசடைப் புண்ணியன்

மாக்கொள் சோலை

  வலஞ்சுழி ஈசன்றன்

ஏக்கொ ளப்புர

  மூன்றெரி யானவே.  7 

 

 

தேடு வார்பிர

  மன்திரு மாலவர்

ஆடு பாத

  மவரும் அறிகிலார்

மாட வீதி

  வலஞ்சுழி யீசனைத்

தேடு வானுறு

  கின்றதென் சிந்தையே.  8 

 

 

கண்ப னிக்குங்

  கைகூப்புங் கண்மூன்றுடை

நண்ப னுக்கெனை

  நான்கொடுப் பேனெனும்

வண்பொ னித்தென்

  வலஞ்சுழி மேவிய

பண்ப னிப்பொனைச்

  செய்த பரிசிதே.  9 

 

 

இலங்கை வேந்தன்

  இருபது தோளிற

நலங்கொள் பாதத்

  தொருவிர லூன்றினான்

மலங்கு பாய்வயல்

  சூழ்ந்த வலஞ்சுழி

வலங்கொள் வாரடி

  யென்றலை மேலவே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

புகழ்ச் சோழ நாயனார்
View Details
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
பாக்கர்
View Details