நான்காம்-திருமுறை

107 மருட்டுயர் தீரவன்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : கடவூர் வீரட்டம்

திருச்சிற்றம்பலம்

 

மருட்டுயர் தீரவன் றர்ச்சித்த 

  மாணிமார்க் கண்டேயற்காய்

இருட்டிய மேனி வளைவாள் 

  எயிற்றெரி போலுங்குஞ்சிச்

சுருட்டிய நாவில்வெங் கூற்றம் 

  பதைப்ப வுதைத்துங்ஙனே

உருட்டிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  1 

 

 

பதத்தெழு மந்திரம் அஞ்செழுத் 

  தோதிப் பரிவினொடும்

இதத்தெழு மாணிதன் இன்னுயிர் 

  உண்ண வெகுண்டடர்த்த

கதத்தெழு காலனைக் கண்குரு 

  திப்புன லாறொழுக

உதைத்தெழு சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  2 

 

 

கரப்புறு சிந்தையர் காண்டற் 

  கரியவன் காமனையும்

நெருப்புமிழ் கண்ணினன் நீள்புனற் 

  கங்கையும் பொங்கரவும்

பரப்பிய செஞ்சடைப் பால்வண்ணன் 

  காலனைப் பண்டொருகால்

உரப்பிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  3 

 

 

மறித்திகழ் கையினன் வானவர் 

  கோனை மனமகிழ்ந்து

குறித்தெழு மாணிதன் ஆருயிர் 

  கொள்வான் கொதித்தசிந்தைக்

கறுத்தெழு மூவிலை வேலுடைக் 

  காலனைத் தானலற

உறுக்கிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  4 

 

 

குழைத்திகழ் காதினன் வானவர் 

  கோனைக் குளிர்ந்தெழுந்து

பழக்கமொ டர்ச்சித்த மாணிதன் 

  ஆருயிர் கொள்ளவந்த

தழற்பொதி மூவிலை வேலுடைக் 

  காலனைத் தானலற

உழக்கிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  5 

 

 

பாலனுக் காயன்று பாற்கடல் 

  ஈந்து பணைத்தெழுந்த

ஆலினிற் கீழிருந் தாரண 

  மோதி அருமுனிக்காய்ச்

சூலமும் பாசமுங் கொண்டு 

  தொடர்ந்தடர்ந் தோடிவந்த

காலனைக் காய்ந்த பிரான்கட 

  வூருறை உத்தமனே.  6 

 

 

படர்சடைக் கொன்றையும் பன்னக 

  மாலை பணிகயிறா

உடைதலைக் கோத்துழல் மேனியன் 

  உண்பலிக் கென்றுழல்வோன்

சுடர்பொதி மூவிலை வேலுடைக் 

  காலனைத் துண்டமதா

உடறிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே.  7 

 

 

வெண்டலை மாலையுங் கங்கைக் 

  கரோடி விரிசடைமேற்

பெண்டனி நாயகன் பேயுகந் 

  தாடும் பெருந்தகையான்

கண்டனி நெற்றியன் காலனைக் 

  காய்ந்து கடலின்விடம்

உண்டருள் செய்தபி ரான்கட 

  வூருறை உத்தமனே.  8 

 

 

கேழல தாகிக் கிளறிய 

  கேசவன் காண்பரிதாய்

வாழிநன் மாமலர்க் கண்ணிடந் 

  திட்டவம் மாலவற்கன்

றாழியும் ஈந்து அடுதிறற் 

  காலனை அன்றடர்த்து

ஊழியு மாய பிரான்கட 

  வூருறை உத்தமனே.  9 

 

 

தேன்றிகழ் கொன்றையுங் கூவிள

  மாலை திருமுடிமேல்

ஆன்றிகழ் ஐந்துகந் தாடும் 

  பிரான்மலை ஆர்த்தெடுத்த

கூன்றிகழ் வாளரக் கன்முடி 

  பத்துங் குலைந்துவிழ

ஊன்றிய சேவடி யான்கட 

  வூருறை உத்தமனே. 10

 

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

பொற்கிழி அளித்தல்
View Details
செருத்துணை நாயனார்
View Details
கழறிற்றறிவார் நாயனார்
View Details