நான்காம்-திருமுறை

100 மன்னு மலைமகள்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : இன்னம்பர்

திருச்சிற்றம்பலம்

 

மன்னு மலைமகள் கையால் 

  வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறுந் தூப்பொரு 

  ளாயின தூக்கமலத்

தன்ன வடிவின அன்புடைத் 

  தொண்டர்க் கமுதருத்தி

இன்னல் களைவன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  1 

 

 

பைதற் பிணக்குழைக் காளிவெங் 

  கோபம்பங் கப்படுப்பான்

செய்தற் கரிய திருநடஞ் 

  செய்தன சீர்மறையோன்

உய்தற் பொருட்டுவெங் கூற்றை 

  யுதைத்தன உம்பர்க்கெல்லாம்

எய்தற் கரியன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  2 

 

 

சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை 

  சூடின தூமலரால்

வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின 

  மன்னு மறைகள்தம்மிற்

பிணங்கிநின் றின்னன வென்றறி 

  யாதன பேய்க்கணத்தோ

டிணங்கிநின் றாடின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  3 

 

 

ஆறொன் றியசம யங்களின் 

  அவ்வவர்க் கப்பொருள்கள்

வேறொன் றிலாதன விண்ணோர் 

  மதிப்பன மிக்குவமன்

மாறொன் றிலாதன மண்ணொடு 

  விண்ணகம் மாய்ந்திடினும்

ஈறொன் றிலாதன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  4 

 

 

அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி 

  னாலட லங்கியின்வாய்க்

கரக்கமுன் வைதிகத் தேர்மிசை 

  நின்றன கட்டுருவம்

பரக்கவெங் கானிடை வேடுரு 

  வாயின பல்பதிதோ

றிரக்க நடந்தன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  5 

 

 

கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் 

  தேடின கேடுபடா

ஆண்டும் பலபல வூழியு 

  மாயின ஆரணத்தின்

வேண்டும் பொருள்கள் விளங்கநின் 

  றாடின மேவுசிலம்

பீண்டும் கழலின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  6 

 

 

போற்றுந் தகையன பொல்லா 

  முயலகன் கோபப்புன்மை

ஆற்றுந் தகையன ஆறு 

  சமயத் தவரவரைத்

தேற்றுந் தகையன தேறிய 

  தொண்டரைச் செந்நெறிக்கே

ஏற்றுந் தகையன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  7 

 

 

பயம்புன்மை சேர்தரு பாவந் 

  தவிர்ப்பன பார்ப்பதிதன்

குயம்பொன்மை மாமல ராகக் 

  குலாவின கூடவொண்ணாச்

சயம்புவென் றேதகு தாணுவென் 

  றேசதுர் வேதங்கள்நின்

றியம்புங் கழலின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  8 

 

 

அயன்நெடு மால்இந் திரன்சந்தி 

  ராதித்தர் அமரரெல்லாஞ்

சயசய என்றுமுப் போதும் 

  பணிவன தண்கடல்சூழ்

வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் 

  நாகர் வியன்நகர்க்கும்

இயபர மாவன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  9 

 

 

தருக்கிய தக்கன்றன் வேள்வி 

  தகர்த்தன தாமரைப்போ

துருக்கிய செம்பொன் உவமன் 

  இலாதன வொண்கயிலை

நெருக்கிய வாளரக் கன்றலை 

  பத்தும் நெரித்தவன்றன்

இருக்கியல் பாயின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே. 10

திருச்சிற்றம்பலம்