நான்காம்-திருமுறை

100 மன்னு மலைமகள்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : இன்னம்பர்

திருச்சிற்றம்பலம்

 

மன்னு மலைமகள் கையால் 

  வருடின மாமறைகள்

சொன்ன துறைதொறுந் தூப்பொரு 

  ளாயின தூக்கமலத்

தன்ன வடிவின அன்புடைத் 

  தொண்டர்க் கமுதருத்தி

இன்னல் களைவன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  1 

 

 

பைதற் பிணக்குழைக் காளிவெங் 

  கோபம்பங் கப்படுப்பான்

செய்தற் கரிய திருநடஞ் 

  செய்தன சீர்மறையோன்

உய்தற் பொருட்டுவெங் கூற்றை 

  யுதைத்தன உம்பர்க்கெல்லாம்

எய்தற் கரியன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  2 

 

 

சுணங்குநின் றார்கொங்கை யாள்உமை 

  சூடின தூமலரால்

வணங்கிநின் றும்பர்கள் வாழ்த்தின 

  மன்னு மறைகள்தம்மிற்

பிணங்கிநின் றின்னன வென்றறி 

  யாதன பேய்க்கணத்தோ

டிணங்கிநின் றாடின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  3 

 

 

ஆறொன் றியசம யங்களின் 

  அவ்வவர்க் கப்பொருள்கள்

வேறொன் றிலாதன விண்ணோர் 

  மதிப்பன மிக்குவமன்

மாறொன் றிலாதன மண்ணொடு 

  விண்ணகம் மாய்ந்திடினும்

ஈறொன் றிலாதன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  4 

 

 

அரக்கர்தம் முப்புரம் அம்பொன்றி 

  னாலட லங்கியின்வாய்க்

கரக்கமுன் வைதிகத் தேர்மிசை 

  நின்றன கட்டுருவம்

பரக்கவெங் கானிடை வேடுரு 

  வாயின பல்பதிதோ

றிரக்க நடந்தன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  5 

 

 

கீண்டுங் கிளர்ந்தும்பொற் கேழல்முன் 

  தேடின கேடுபடா

ஆண்டும் பலபல வூழியு 

  மாயின ஆரணத்தின்

வேண்டும் பொருள்கள் விளங்கநின் 

  றாடின மேவுசிலம்

பீண்டும் கழலின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  6 

 

 

போற்றுந் தகையன பொல்லா 

  முயலகன் கோபப்புன்மை

ஆற்றுந் தகையன ஆறு 

  சமயத் தவரவரைத்

தேற்றுந் தகையன தேறிய 

  தொண்டரைச் செந்நெறிக்கே

ஏற்றுந் தகையன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  7 

 

 

பயம்புன்மை சேர்தரு பாவந் 

  தவிர்ப்பன பார்ப்பதிதன்

குயம்பொன்மை மாமல ராகக் 

  குலாவின கூடவொண்ணாச்

சயம்புவென் றேதகு தாணுவென் 

  றேசதுர் வேதங்கள்நின்

றியம்புங் கழலின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  8 

 

 

அயன்நெடு மால்இந் திரன்சந்தி 

  ராதித்தர் அமரரெல்லாஞ்

சயசய என்றுமுப் போதும் 

  பணிவன தண்கடல்சூழ்

வியனில முற்றுக்கும் விண்ணுக்கும் 

  நாகர் வியன்நகர்க்கும்

இயபர மாவன இன்னம்ப 

  ரான்றன் இணையடியே.  9 

 

 

தருக்கிய தக்கன்றன் வேள்வி 

  தகர்த்தன தாமரைப்போ

துருக்கிய செம்பொன் உவமன் 

  இலாதன வொண்கயிலை

நெருக்கிய வாளரக் கன்றலை 

  பத்தும் நெரித்தவன்றன்

இருக்கியல் பாயின இன்னம்ப 

  ரான்றன் இணையடியே. 10

திருச்சிற்றம்பலம்

 

மேலும்

ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
View Details
சோழனது படையை முறியடித்தல்
View Details
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
View Details