நான்காம்-திருமுறை

066 கச்சைசேர் அரவர்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : நாகேச்சுரம்

திருச்சிற்றம்பலம்

 

கச்சைசேர் அரவர் போலுங் 

  கறையணி மிடற்றர் போலும்

பிச்சைகொண் டுண்பர் போலும் 

  பேரரு ளாளர் போலும்

இச்சையால் மலர்கள் தூவி 

  இரவொடு பகலுந் தம்மை

நச்சுவார்க் கினியர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  1 

 

 

வேடுறு வேட ராகி 

  விசயனோ டெய்தார் போலுங்

காடுறு பதியர் போலுங் 

  கடிபுனற் கங்கை நங்கை

சேடெறி சடையர் போலுந் 

  தீவினை தீர்க்க வல்ல

நாடறி புகழர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  2 

 

 

கற்றுணை வில்ல தாகக் 

  கடியரண் செற்றார் போலும்

பொற்றுணைப் பாதர் போலும் 

  புலியத ளுடையார் போலுஞ்

சொற்றுணை மாலை கொண்டு 

  தொழுதெழு வார்கட் கெல்லாம்

நற்றுணை யாவர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  3 

 

 

கொம்பனாள் பாகர் போலுங் 

  கொடியுடை விடையர் போலுஞ்

செம்பொனா ருருவர் போலுந் 

  திகழ்திரு நீற்றர் போலும்

எம்பிரான் எம்மை யாளும் 

  இறைவனே என்று தம்மை

நம்புவார்க் கன்பர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  4 

 

 

கடகரி யுரியர் போலுங் 

  கனல்மழு வாளர் போலும்

படவர வரையர் போலும் 

  பாரிடம் பலவுங் கூடிக்

குடமுடை முழவம் ஆர்ப்பக் 

  கூளிகள் பாட நாளும்

நடநவில் அடிகள் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  5 

 

 

பிறையுறு சடையர் போலும் 

  பெண்ணொரு பாகர் போலும்

மறையுறு மொழியர் போலும் 

  மால்மறை யவன்ற னோடு

முறைமுறை அமரர் கூடி 

  முடிகளால் வணங்க நின்ற

நறவமர் கழலர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  6 

 

 

வஞ்சகர்க் கரியர் போலும் 

  மருவினோர்க் கெளியர் போலுங்

குஞ்சரத் துரியர் போலுங் 

  கூற்றினைக் குமைப்பர் போலும்

விஞ்சையர் இரிய அன்று 

  வேலைவாய் வந்தெ ழுந்த

நஞ்சணி மிடற்றர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  7 

 

 

போகமார் மோடி கொங்கை 

  புணர்தரு புனிதர் போலும்

வேகமார் விடையர் போலும் 

  வெண்பொடி யாடு மேனிப்

பாகமா லுடையர் போலும் 

  பருப்பத வில்லர் போலும்

நாகநா ணுடையர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  8 

 

 

கொக்கரை தாளம் வீணை 

  பாணிசெய் குழகர் போலும்

அக்கரை யணிவர் போலும் 

  ஐந்தலை யரவர் போலும்

வக்கரை யமர்வர் போலும் 

  மாதரை மையல் செய்யும்

நக்கரை யுருவர் போலும் 

  நாகஈச் சரவ னாரே.  9 

 

 

வின்மையாற் புரங்கள் மூன்றும் 

  வெந்தழல் விரித்தார் போலும்

தன்மையால் அமரர் தங்கள் 

  தலைவர்க்குந் தலைவர் போலும்

வன்மையான் மலையெ டுத்தான் 

  வலியினைத் தொலைவித் தாங்கே

நன்மையால் அளிப்பர் போலும் 

  நாகஈச் சரவ னாரே. 10

 

 

திருச்சிற்றம்பலம்