நான்காம்-திருமுறை

038 கங்கையைச் சடையுள்

அ௫ளியவர் : திருநாவுக்கரசர்

  திருமுறை : நான்காம் திருமுறை

  தலம் : ஐயாறு

திருச்சிற்றம்பலம்

 

கங்கையைச் சடையுள் வைத்தார் 

  கதிர்பொறி அரவும் வைத்தார்

திங்களைத் திகழ வைத்தார் 

  திசைதிசை தொழவும் வைத்தார்

மங்கையைப் பாகம் வைத்தார் 

  மான்மறி மழுவும் வைத்தார்

அங்கையுள் அனலும் வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  1 

 

 

பொடிதனைப் பூச வைத்தார் 

  பொங்குவெண் ணூலும் வைத்தார்

கடியதோர் நாகம் வைத்தார் 

  காலனைக் கால வைத்தார்

வடிவுடை மங்கை தன்னை 

  மார்பிலோர் பாகம் வைத்தார்

அடியிணை தொழவும் வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  2 

 

 

உடைதரு கீளும் வைத்தார் 

  உலகங்க ளனைத்தும் வைத்தார்

படைதரு மழுவும் வைத்தார் 

  பாய்புலித் தோலும் வைத்தார்

விடைதரு கொடியும் வைத்தார் 

  வெண்புரி நூலும் வைத்தார்

அடைதர அருளும் வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  3 

 

 

தொண்டர்கள் தொழவும் வைத்தார் 

  தூமதி சடையில் வைத்தார்

இண்டையைத் திகழ வைத்தார் 

  எமக்கென்று மின்பம் வைத்தார்

வண்டுசேர் குழலி னாளை 

  மருவியோர் பாகம் வைத்தார்

அண்டவா னவர்கள் ஏத்தும் 

  ஐயனை யாற னாரே.  4 

 

 

வானவர் வணங்க வைத்தார் 

  வல்வினை மாய வைத்தார்

கானிடை நடமும் வைத்தார் 

  காமனைக் கனலா வைத்தார்

ஆனிடை ஐந்தும் வைத்தார் 

  ஆட்டுவார்க் கருளும் வைத்தார்

ஆனையின் உரிவை வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  5 

 

 

சங்கணி குழையும் வைத்தார் 

  சாம்பல்மெய்ப் பூச வைத்தார்

வெங்கதிர் எரிய வைத்தார் 

  விரிபொழி லனைத்தும் வைத்தார்

கங்குலும் பகலும் வைத்தார் 

  கடுவினை களைய வைத்தார்

அங்கம தோத வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  6 

 

 

பத்தர்கட் கருளும் வைத்தார் 

  பாய்விடை யேற வைத்தார்

சித்தத்தை ஒன்ற வைத்தார் 

  சிவமதே நினைய வைத்தார்

முத்தியை முற்ற வைத்தார் 

  முறைமுறை நெறிகள் வைத்தார்

அத்தியின் உரிவை வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  7 

 

 

ஏறுகந் தேற வைத்தார் 

  இடைமரு திடமும் வைத்தார்

நாறுபூங் கொன்றை வைத்தார் 

  நாகமும் அரையில் வைத்தார்

கூறுமை பாகம் வைத்தார் 

  கொல்புலித் தோலும் வைத்தார்

ஆறுமோர் சடையில் வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  8 

 

 

பூதங்கள் பலவும் வைத்தார் 

  பொங்குவெண் ணீறும் வைத்தார்

கீதங்கள் பாட வைத்தார் 

  கின்னரந் தன்னை வைத்தார்

பாதங்கள் பரவ வைத்தார் 

  பத்தர்கள் பணிய வைத்தார்

ஆதியும் அந்தம் வைத்தார் 

  ஐயனை யாற னாரே.  9 

 

 

இரப்பவர்க் கீய வைத்தார் 

  ஈபவர்க் கருளும் வைத்தார்

கரப்பவர் தங்கட் கெல்லாங் 

  கடுநர கங்கள் வைத்தார்

பரப்புநீர்க் கங்கை தன்னைப் 

  படர்சடைப் பாகம் வைத்தார்

அரக்கனுக் கருளும் வைத்தார் 

  ஐயனை யாற னாரே. 10

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

உக்கிர பாண்டியன் பிறப்பு
View Details
சேர்மன் அருணாசலம்
View Details
அஷ்டமா சித்தி உபதேசித்தல்
View Details