முதல்-திருமுறை

038 கரவின் றிநன்மா

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் : மயிலாடுதுறை

திருச்சிற்றம்பலம்

 

கரவின் றிநன்மா மலர்கொண்டு1

இரவும் பகலுந் தொழுவார்கள்

சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்

வரமா மயிலா டுதுறையே. 1

 

உரவெங் கரியின் னுரிபோர்த்த

பரமன் னுறையும் பதியென்பர்

குரவஞ் சுரபுன் னையும்வன்னி

மருவும் மயிலா டுதுறையே.  2 

 

ஊனத் திருள்நீங் கிடவேண்டில்

ஞானப் பொருள்கொண் டடிபேணுந்

தேனொத் தினியா னமருஞ்சேர்

வானம் மயிலா டுதுறையே.  3 

 

அஞ்சொண் புலனும் மவைசெற்ற

மஞ்சன் மயிலா டுதுறையை

நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல்

துஞ்சும் பிணியா யினதானே.  4 

 

தணியார் மதிசெஞ் சடையான்றன்

அணியார்ந் தவருக் கருளென்றும்

பிணியா யினதீர்த் தருள்செய்யும்

மணியான் மயிலா டுதுறையே.  5 

 

தொண்ட ரிசைபா டியுங்கூடிக்

கண்டு துதிசெய் பவனூராம்

பண்டும் பலவே தியரோத

வண்டார் மயிலா டுதுறையே.  6 

 

அணங்கோ டொருபா கம்அமர்ந்து

இணங்கி யருள்செய் தவனூராம்

நுணங்கும் புரிநூ லர்கள்கூடி

வணங்கும் மயிலா டுதுறையே.  7 

 

சிரங்கை யினிலேந் தியிரந்த

பரங்கொள் பரமேட் டிவரையால்

அரங்கவ் வரக்கன் வலிசெற்ற

வரங்கொள் மயிலா டுதுறையே.  8 

 

ஞாலத் தைநுகர்ந் தவன்தானும்

கோலத் தயனும் மறியாத

சீலத் தவனூர் சிலர்கூடி

மாலைத் தீர்மயிலா டுதுறையே.  9 

 

நின்றுண் சமணும் நெடுந்தேரர்

ஒன்றும் மறியா மையுயர்ந்த

வென்றி யருளா னவனூராம்

மன்றன் மயிலா டுதுறையே.  10 

 

நயர்கா ழியுள்ஞா னசம்பந்தன்

மயல்தீர் மயிலா டுதுறைமேல்

செயலா லுரைசெய் தனபத்தும்

உயர்வாம் இவையுற் றுணர்வார்க்கே. 11

 

திருச்சிற்றம்பலம்