மூன்றாம்-திருமுறை

112 பரசுபாணியர் பாடல்வீணையர்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : மூன்றாம் திருமுறை

  தலம் : பல்லவனீச்சுரம்

திருச்சிற்றம்பலம்

 

பரசுபாணியர் பாடல்வீணையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தரசுபேணி நின்றார் இவர்தன்மை யறிவாரார்  1 

 

 

பட்டநெற்றியர் நட்டமாடுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திட்ட மாயிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  2 

 

 

பவளமேனியர் திகழும் நீற்றினர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தழகரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  3 

 

 

பண்ணில்யாழினர் பயிலும்மொந்தையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தண்ணலா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  4 

 

 

பல்லிலோட்டினர் பலிகொண்டுண்பவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தெல்லி யாட்டுகந்தார் இவர்தன்மை யறிவாரார்.  5 

 

 

பச்சைமேனியர் பிச்சை கொள்பவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திச்சையா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  6 

 

 

பைங்கண் ஏற்றினர் திங்கள்சூடுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தெங்குமா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  7 

 

 

பாதங் கைதொழ வேதமோதுவர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தாதியா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  8 

 

 

படிகொள்மேனியர் கடிகொள் கொன்றையர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

தடிகளா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  9 

 

 

பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர்

  பட்டினத்துறை பல்லவனீச்சரத்

திறைவரா யிருப்பார் இவர்தன்மை யறிவாரார்.  10 

 

 

வானமாள்வதற் கூனமொன்றிலை மாதர்

  பல்லவனீச் சரத்தானை

ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்லவல்லவர் நல்லரே. 11

 

திருச்சிற்றம்பலம்