இரண்டாம்-திருமுறை

046 பாலூரும் மலைப்பாம்பும்

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : இரண்டாம் திருமுறை

  தலம் : நாலூர் மயானம்

திருச்சிற்றம்பலம்

 

பாலூரும் மலைப்பாம்பும்

  பனிமதியும் மத்தமும்

மேலூருஞ் செஞ்சடையான்

  வெண்ணூல்சேர் மார்பினான்

நாலூர் மயானத்து

  நம்பான்றன் அடிநினைந்து

மாலூருஞ் சிந்தையர்பால்

  வந்தூரா மறுபிறப்பே.  1 

 

சூடும் பிறைச்சென்னி

  சூழ்கா டிடமாக

ஆடும் பறைசங்

  கொலியோ டழகாக

நாடுஞ் சிறப்போவா

  நாலூர் மயானத்தைப்

பாடுஞ் சிறப்போர்பாற்

  பற்றாவாம் பாவமே.  2

 

கல்லால் நிழல்மேவிக்

  காமுறுசீர் நால்வர்க்கன்

றெல்லா அறனுரையும்

  இன்னருளாற் சொல்லினான்

நல்லார் தொழுதேத்தும்

  நாலூர் மயானத்தைச்

சொல்லா தவரெல்லாஞ்

  செல்லாதார் தொல்நெறிக்கே.  3 

 

கோலத்தார் கொன்றையான்

  கொல்புலித்தோ லாடையான்

நீலத்தார் கண்டத்தான்

  நெற்றியோர் கண்ணினான்

ஞாலத்தார் சென்றேத்து

  நாலூர் மயானத்தில்

சூலத்தா னென்பார்பால்

  சூழாவாந் தொல்வினையே.  4 

 

கறையார் மணிமிடற்றான்

  காபாலி கட்டங்கன்

பிறையார் வளர்சடையான்

  பெண்பாகன் நண்பாய

நறையார் பொழில்புடைசூழ்

  நாலூர் மயானத்தெம்

இறையானென் றேத்துவார்க்

  கெய்துமாம் இன்பமே.  5 

 

கண்ணார் நுதலான்

  கனலா டிடமாகப்

பண்ணார் மறைபாடி

  யாடும் பரஞ்சோதி

நண்ணார் புரமெய்தான்

  நாலூர் மயானத்தை

நண்ணா தவரெல்லாம்

  நண்ணாதார் நன்னெறியே.  6 

 

கண்பாவு வேகத்தாற்

  காமனைமுன் காய்ந்துகந்தான்

பெண்பாவு பாகத்தான்

  நாகத்தோல் ஆகத்தான்

நண்பாவு குணத்தோர்கள்

  நாலூர் மயானத்தை

எண்பாவு சிந்தையார்க்

  கேலா இடர்தானே.  7 

 

பத்துத் தலையோனைப்

  பாதத் தொருவிரலால்

வைத்து மலையடர்த்து

  வாளோடு நாள்கொடுத்தான்

நத்தின் ஒலியோவா

  நாலூர் மயானத்தென்

அத்தன் அடிநினைவார்க்

  கல்லல் அடையாவே.  8 

 

மாலோடு நான்முகனும்

  நேட வளரெரியாய்

மேலோடு கீழ்காணா

  மேன்மையான் வேதங்கள்

நாலோடும் ஆறங்கம்

  நாலூர் மயானத்தெம்

பாலோடு நெய்யாடி

  பாதம் பணிவோமே.  9 

 

துன்பாய மாசார்

  துவராய போர்வையார்

புன்பேச்சுக் கேளாதே

  புண்ணியனை நண்ணுமின்கள்

நண்பாற் சிவாயவெனா

  நாலூர் மயானத்தே

இன்பா யிருந்தானை

  யேத்துவார்க் கின்பமே.  10 

 

ஞாலம் புகழ்காழி

  ஞானசம் பந்தன்றான்

நாலு மறையோது

  நாலூர் மயானத்தைச்

சீலம் புகழாற்

  சிறந்தேத்த வல்லாருக்

கேலும் புகழ்வானத்

  தின்பா யிருப்பாரே. 11

 

திருச்சிற்றம்பலம்