இரண்டாம்-திருமுறை

036 சீரார் கழலே

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : இரண்டாம் திருமுறை

  தலம் : இரும்பூளை

திருச்சிற்றம்பலம்

 

சீரார் கழலே

  தொழுவீ  ரிதுசெப்பீர்

வாரார் முலைமங்

  கையொடும் முடனாகி

ஏரா ரிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

காரார் கடல்நஞ்

  சமுதுண் டகருத்தே.  1 

 

தொழலார் கழலே

  தொழுதொண் டர்கள்சொல்லீர்

குழலார் மொழிக்கோல்

  வளையோ டுடனாகி

எழிலா ரிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

கழல்தான் கரிகா

  னிடையா டுகருத்தே.  2 

 

அன்பா லடிகை

  தொழுவீ ரறியீரே

மின்போல் மருங்குல்

  மடவா ளொடுமேவி

இன்பா யிரும்பூ ளை

  யிடங் கொண்டஈசன்

பொன்போற் சடையிற்

  புனல்வைத் தபொருளே.  3 

 

நச்சித் தொழுவீர்

  கள்நமக் கிதுசொல்லீர்

கச்சிப் பொலிகா

  மக்கொடி யுடன்கூடி

இச்சித் திரும்பூ

  ளையிடங் கொண்ட ஈசன்

உச்சித் தலையிற்

  பலிகொண் டுழலூணே.  4 

 

சுற்றார்ந் தடியே

  தொழுவீ  ரிதுசொல்லீர்

நற்றாழ் குழல்நங்

  கையொடும் முடனாகி

எற்றே யிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

புற்றா டரவோ

  டென்புபூண் டபொருளே.  5 

 

தோடார் மலர்தூய்த்

  தொழுதொண்டர் கள்சொல்லீர்

சேடார் குழற்சே

  யிழையோ டுடனாகி

ஈடா யிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

காடார் கடுவே

  டுவனா னகருத்தே.  6 

 

(7- ஆம் செய்யுள் சிதைந்து போயிற்று.)  7 

 

ஒருக்கும் மனத்தன்

  பருள்ளீ  ரிதுசொல்லீர்

பருக்கைம் மதவே

  ழமுரித் துமையோடும்

இருக்கை யிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

அரக்கன் உரந்தீர்த்

  தருளாக் கியவாறே.  8 

 

துயரா யினநீங்

  கித்தொழுந் தொண்டர்சொல்லீர்

கயலார் கருங்கண்

  ணியொடும் முடனாகி

இயல்பா யிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

முயல்வா ரிருவர்க்

  கெரியா கியமொய்ம்பே.  9 

 

துணைநன் மலர்தூய்த்

  தொழுந்தொண் டர்கள்சொல்லீர்

பணைமென் முலைப்பார்ப்

  பதியோ டுடனாகி

இணையில் லிரும்பூ

  ளையிடங் கொண்டஈசன்

அணைவில் சமண்சாக்

  கியமாக் கியவாறே.  10 

 

எந்தை யிரும்பூ ளையிடங்

  கொண்ட ஈசன்

சந்தம் பயில்சண்

  பையுண்ஞான சம்பந்தன்

செந்தண் தமிழ்செப்

  பியபத் திவைவல்லார்

பந்தம் மறுத்தோங்

  குவர்பான் மையினாலே. 11

 

திருச்சிற்றம்பலம்