பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

056 நின்ற சீர் நெடுமாற நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தடுமாறும் நெறி அதனைத் தவம் 

  என்று தம் உடலை

அடுமாறு செய்து ஒழுகும் 

  அமண் வலையில் அகப்பட்டு 

விடுமாறு தமிழ் விரகர் வினை 

  மாறும் கழல் அடைந்த

நெடுமாறனார் பெருமை உலகு 

  ஏழும் நிகழ்ந்ததால்.  1 

 

 

அந்நாளில் ஆளுடைய 

  பிள்ளையார் அருளாலே

தென்னாடு சிவம் பெருகச் செங்கோல் 

  உய்த்து அறம் அளித்து

சொன்னாம நெறிபோற்றிச் சுரர் 

  நகர்க்கோன் தனைக் கொண்ட

பொன்னாரம் அணி மார்பில் 

  புரவலனார் பொலி கின்றார்.  2 

 

 

ஆய அரசு அளிப்பார் பால் 

  அமர் வேண்டி வந்து ஏற்ற

சேய புலத் தெவ்வர் எதிர் 

  நெல்வேலிச் செருக் களத்துப்

பாய படைக் கடல் முடுகும் 

  பரிமாவின் பெரு வெள்ளம்

காயும் மதக் களிற்றின் நிரை 

  பரப்பி அமர் நடக்கின்றார்.  3 

 

 

எடுத்துடன்ற முனைஞாட்பின் இருபடையில் 

  பொரு படைஞர்

படுத்த நெடுங் கரித்துணியும் பாய் 

  மாவின் அறு குறையும்

அடுத்து அமர் செய் வயவர் கருந் 

  தலையும் மலையும் அலை செந்நீர்

மடுத்த கடல் மீளவும் தாம் 

  வடிவேல் வாங்கிடப் பெருக.  4 

 

 

வயப்பரியின் களிப்பு ஒலியும் 

  மறவர் படைக்கல ஒலியும்

கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் 

  கலந்து எழு பல்லிய ஒலியும்

வியக்குமுகக் கடை நாளின் மேக 

  முழக்கு என மீளச்

சயத்தொடர் வல்லியும் இன்று தாம் 

  விடுக்கும் படி தயங்க.  5 

 

 

தீயுமிழும் படை வழங்கும் 

  செருக்களத்து முருக்கும் உடல்

தோயும் நெடும் குறுதி மடுக் 

  குளித்து நிணம் துய்த்து ஆடி

போய பருவம் பணிகொள் 

  பூதங்களே அன்றிப்

பேயும் அரும் பணி செய்ய 

  உணவு அளித்தது எனப் பிறங்க.  6 

 

 

இனைய கடுஞ் சமர் 

  விளைய இகலுழந்த பறந்தலையில்

பனை நெடுங்கை மதயானைப் 

  பஞ்சவனார் படைக் குடைந்து

முனை அழிந்த வடபுலத்து 

  முதல் மன்னர் படைசரியப்

புனையும் நறும் தொடை வாகை 

  பூழியர் வேம்புடன் புனைந்து.  7 

 

 

வளவர் பிரான் திருமகளார் 

  மங்கையருக்கு அரசியார்

களப மணி முலை 

  திளைக்கும் தடமார்பில் கவுரியனார்

இளவள வெண் பிறை அணிந்தார்க்கு 

  ஏற்ற திருத்தொண்டு எல்லாம்

அளவில் புகழ் பெற விளங்கி 

  அருள் பெருக அரசு அளித்தார்.  8 

 

 

திரை செய் கடல் உலகின் 

  கண் திருநீற்றின் நெறி விளங்க

உரைசெய் பெரும்புகழ் விளக்கி 

  ஓங்கு நெடு மாறனார்

அரசு உரிமை நெடும் காலம் 

  அளித்து இறைவர் அருளாலே

பரசு பெரும் சிவலோகத்தில் இன் 

  புற்று பணிந்து இருந்தார்.  9 

 

 

பொன் மதில் சூழ் புகலி 

  காவலர் அடிக்கீழ்ப் புனிதராந்

தென்மதுரை மாறனார் செங் 

  கமலக் கழல் வணங்கிப்

பன்மணிகள் திரை ஓதம் பரப்பு 

  நெடும் கடல் படப்பைத்

தொல் மயிலை வாயிலார் 

  திருத்தொண்டின் நிலைதொழுவாம்.  10 

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

சீரியா சிலம்பாக்கினி சித்தர்
View Details
அமர்நீதி நாயனார்
View Details
ஸ்ரீ சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவுலு சித்தர்
View Details