அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
ஏயுமாறு பல் உயிர்களுக்கு
எல்லையில் கருணைத்
தாய் அனாள் தனி
ஆயின தலைவரைத் தழுவ
ஆயு நான்மறை போற்ற நின்று
அரும் தவம் புரியத்
தூய மாதவம் செய்தது
தொண்டை நன்னாடு. 1
நன்மை நீடிய நடுநிலை
ஒழுக்கத்து நயந்த
தன்மை மேவிய தலைமை
சால் பெருங்குடி தழைப்ப
வன்மை ஓங்கு எயில் வளம்
பதி பயின்றது வரம்பின்
தொன்மை மேன்மையில் நிகழ்
பெரும் தொண்டை நன்னாடு. 2
நற்றிறம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர்
நவை வந்து
உற்ற போது தம் உயிரையும்
வணிகனுக்கு ஒரு கால்
சொற்ற மெய்ம்மையும் தூக்கி
அச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையில் நிகழ்ந்தது
பெரும் தொண்டை நாடு. 3
ஆணையாம் என நீறு
கண்டு அடிச்சேரன் என்னும்
சேண் உலாவு சீர்ச்
சேரனார் திருமலை நாட்டு
வாண் நிலாவு பூண்
வயவர்கள் மைத்துனக் கேண்மை
பேண நீடிய முறையது
பெரும் தொண்டை நாடு. 4
கறை விளங்கிய கண்டர் பாற்
காதல் செய் முறைமை
நிறை புரிந்திட நேர் இழை
அறம் புரிந்த அதனால்
பிறை உரிஞ்சு எயில் பதிபயில்
பெரும் தொண்டை நாட்டு
முறைமையாம் என உலகினில்
மிகு மொழி உடைத்தால். 5
தாவில் செம்மணி அருவியாறு
இழிவன சாரல்
பூவில் வண்டு இனம் புது
நறவு அருந்துவ புறவம்
வாவி நீள் கயல் வரம்பு
இற உகைப்பன மருதம்
நீவி நித்திலம் பரத்தியர்
உணக்குவ நெய்தல். 6
குறவர் பல் மணி அரித்து
இதை விதைப்பன குறிஞ்சி
கறவை ஆன் நிரை மான்
உடன் பயில்வன கானம்
பறவை தாமரை இருந்து
இற வருந்துவ பழனம்
சுறவ முள் மருப்பு அணங்கு
அயர்வன கழிச் சூழல். 7
கொண்டல் வானத்தின் மணி
சொரிவன குல வரைப்பால்
தண்டு உணர்க் கொன்றை பொன்
சொரிவன தள வயற்பால்
வண்டல் முத்த நீர் மண்டு
கால் சொரிவன வயற்பால்
கண்டல் முன் துறைக் கரி
சொரி வனகலங் கடற்பால். 8
தேன் நிறைந்த செந்தினை இடி
தரு மலைச் சீறூர்
பால் நிறைந்த புல் பதத்தன
முல்லை நீள் பாடி
தூ நெல் அன்னம் நெய்
கன்னலின் கனிய தண் துறையூர்
மீன் நிறைந்த பேர் உணவின
வேலை வைப்பு இடங்கள். 9
குழல் செய் வண்டு இனம்
குறிஞ்சி யாழ் முரல்வன குறிஞ்சி
முழவு கார் கொள
முல்லைகள் முகைப்பன முல்லை
மழலை மென் கிளி
மருதமர் சேக்கைய மருதம்
நிழல் செய் கைதை சூழ்
நெய்தலங் கழியன நெய்தல். 10
மல்கும் அப்பெரு நிலங்களில்
வரை புணர் குறிஞ்சி
எல்லை எங்கணும் இறவுளர்
ஏனல் முன் விளைக்கும்
பல் பெரும் புனம் பயில்வன
படர் சிறைத் தோகை
சொல்லும் அப்புனங் காப்பவும்
சுரி குழல் தோகை. 11
அங்கண் வான்மிசை அரம்பையர்
கரும் குழல் சுரும்பு
பொங்கு பூண்முலைக் கொடிச்சியர்
குழல் மூழ்கிப் போகாச்
செம் கண் மால்
விடையார் திருக்காளத்தி என்னும்
மங்குல் சூழ் வரை
நிலவிய வாழ்வினால் மல்கும். 12
பேறு வேறுசூழ் இமையவர்
அரம்பையர் பிறந்து
மாறில் வேடரும் மாதரும்
ஆகவே வணங்கும்
ஆறுசூழ் சடை அண்ணலார்
திரு விடைச் சுரமும்
கூறு மேன்மையின் மிக்க தம்
நாட்டு வண் குறிஞ்சி. 13
அம்பொன் வார் குழல் கொடிச்சியர்
உடன் அர மகளிர்
வம்புலா மலர்ச் சுனை படிந்து
ஆடு நீள் வரைப்பின்
உம்பர் நாயகர் திருக்
கழுக் குன்றமும் உடைத்தால்
கொம்பர் வண்டு சூழ் குறிஞ்சி
செய் தவங்குறை உளதோ. 14
கோல முல்லையும் குறிஞ்சியும்
அடுத்த சில்லிடங்கள்
நீல வாள் படை
நீலி கோட்டங்களும் நிரந்து
கால வேனிலில் கடும்
பகல் பொழுதினைப் பற்றிப்
பாலையும் சொலல் ஆவன
உள பரல் முரம்பு. 15
சொல்லும் எல்லையின் புறத்தன
துணர்ச் சுரும்பு அலைக்கும்
பல் பெரும் புனல்
கானியாறிடை இடை பரந்து
கொல்லை மெல் இணர்க் குருந்தின்
மேற் படர்ந்த பூம்பந்தர்
முல்லை மென் புதல் முயல்
உகைத் தடங்கு நீள் முல்லை. 16
பிளவு கொண்ட தண் மதி
நுதல் பேதையர் எயிற்றைக்
களவு கொண்டது அளவு
எனக் களவலர் தூற்றும்
அளவு கண்டவர் குழல் நிறம்
கனியும் அக் களவைத்
தளவு கண்டு எதிர் சிரிப்பன
தமக்கும் உண்டு என்று. 17
மங்கையர்க்கு வாள் விழியிணை
தோற்ற மான் குலங்கள்
எங்கும் மற்றவர் இடைக்கு இடை
மலர்க் கொடி எங்கும்
அங்கண் முல்லையின் தெய்வம் என்று
அருந் தமிழ் உரைக்கும்
செங்கண் மால் தொழும் சிவன் மகிழ்
திரு முல்லை வாயில். 18
நீறு சேர் திரு மேனியர்
நிலாத் திகழ் முடிமேல்
மாறில் கங்கை தான்
அவர்க்கு மஞ்சனந்தர அணைந்தே
ஊறு நீர் தரும் ஒளி
மலர்க் கலிகை மா நகரை
வேறு தன் பெரு வைப்பு
என விளங்கு மாமுல்லை. 19
வாச மென் மலர் மல்கிய
முல்லை சூழ் மருதம்
வீசு தெண்டிரை நதி பல
மிக்கு உயர்ந்து ஓடிப்
பாசடைத் தடந் தாமரைப்
பழனங்கள் மருங்கும்
பூசல் வன் கரைக்
குளங்களும் ஏரியும் புகுவ. 20
துங்க மாதவன் சுரபியின்
திருமுலை சொரி பால்
பொங்கும் தீர்த்தமாய் நந்தி மால்
வரை மிசைப் போந்தே
அங்கண் நித்திலம் சந்தனம்
அகிலொடு மணிகள்
பங்கயத் தடம் நிறைப்ப
வந்து இழிவது பாலி. 21
பிள்ளை தைவரப் பெருகுபால்
சொரிமுலைத் தாய் போல்
மள்ளர் வேனிலின் மணல் திடர்
பிசைந்து கை வருட
வெள்ள நீர் இரு மருங்கு
கால் வழி மிதந்து ஏறிப்
பள்ள நீள் வயல்
பருமடை உடைப்பது பாலி. 22
அனையவாகிய நதி பரந்து
அகன் பணை மருங்கில்
கனை நெடும் புனல் நிறைந்து
திண் கரைப் பெருங்குளங்கள்
புனை இருங்கடி மதகுவாய்
திறந்திடப் புறம் போய்
வினைஞர் ஆர்ப்பொலி எடுப்ப
நீர் வழங்குவ வியன்கால். 23
மாறில் வண் பகட்டேர்
பல நெருங்கிட வயல்கள்
சேறு செய்பவர் செந்நெலின்
வெண் முளை சிதறி
நாறு வார்ப்பவர் பறிப்பவர்
நடுபவர் ஆன
வேறு பல் வினை உடைப்
பெரும் கம்பலை மிகுமால். 24
வரும் புனல் பெரும்
கால்களை மறித்திட வாளை
பெருங்குலைப்பட விலங்குவ பிறங்கு
நீர்ப் பழனம்
நெருங்கு சேற்குலம் உயர்த்துவ
நீள் கரைப் படுத்துச்
சுருங்கை நீர் வழக்கு அறுப்பன
பரு வரால் தொகுதி. 25
தளைத்த தடம் பணை
எழுந்த செந்தாமரைத் தவிசின்
இளைத்த சூல் வளை கண்
படுப்பன இடை எங்கும்
விளைத்த பாசொளி விளங்கு நீள்
விசும்படை ஊர் கோள்
வளைத்த மா மதி போன்று
உள மருத நீர் வைப்பு. 26
ஓங்கு செந்நெலின் புடையன
உயர் கழைக் கரும்பு
பூங்கரும்பு அயல் மிடைவன
பூகம் அப்பூகப்
பாங்கு நீள் குலைத் தெங்கு
பைங்கதலி வண் பலவு
தூங்கு தீங்கனிச் சூத
நீள் வேலிய சோலை. 27
நீடு தண் பணை உடுத்த
நீள் மருங்கின நெல்லின்
கூடு துன்றிய இருக்கைய
விருந்து எதிர் கொள்ளும்
பீடு தங்கிய பெருங் குடி
மனை அறம் பிறங்கும்
மாடம் ஓங்கிய மறுகின
மல்லல் மூதூர்கள். 28
தொல்லை நான்மறை முதல்
பெரும் கலையொலி துவன்றி
இல்லறம் புரிந்து ஆகுதி
வேள்வியில் எழுந்த
மல்கு தண் புகை மழை
தரும் முகில் குலம் பரப்பும்
செல்வம் ஓங்கிய திருமறையவர்
செழும் பதிகள். 29
தீது நீங்கிடத் தீக்
கலியாம் அவுணற்கு
நாதர் தாம் அருள் புரிந்தது
நல்வினைப் பயன் செய்
மாதர் தோன்றிய மரபுடை
மறையவர் வல்லம்
பூதி சாதனம் போற்றிய
பொற்பினால் விளங்கும். 30
அருவி தந்த செம் மணிகளும்
புறவில் ஆய் மலரும்
பருவி ஓடைகள் நிறைந்திழி
பாலியின் கரையின்
மருவு கங்கை வாழ் சடையவர்
மகிழ்ந்த மாற் பேறாம்
பொருவில் கோயிலும் சூழ்ந்ததப்
புறம்பணை மருதம். 31
விரும்பு மேன்மையென் பகர்வது
விரி திரை நதிகள்
அருங்கரைப் பயில் சிவாலயம்
அனேகமும் அணைந்து
பருங்கை யானையை உரித்தவர்
இருந்த அப் பாசூர்
மருங்கு சூழ் தவம் புரிந்தது
அன்றோ மற்ற மருதம். 32
பூமரும் புனல் வயல்
களம் பாடிய பொருநர்
தாமருங் கிளையுடன் தட
மென் மலர் மிலைந்து
மா மருங்கு தண்ணீழலின்
மருத யாழ் முரலும்
காமர் தண் பணைப்
புறத்தது கருங்கழி நெய்தல். 33
தூய வெண் துறைப்
பரதவர் தொடுப்பன வலைகள்
சேய நீள் விழிப்
பரத்தியர் தொடுப்பன செருந்தி
ஆய பேர் அளத்
தளவர்கள் அளப்பன உப்பு
சாயன் மெல்லிடை
அளத்தியர் அளப்பன தரளம். 34
கொடு வினைத் தொழில்
நுளையர்கள் கொடுப்பன கொழுமீன்
படு மணற் கரை
நுளைச்சியர் கொடுப்பன பவளம்
தொடு கடல் சங்கு துறையவர்
குளிப்பன அவர் தம்
வடு வகிர்க் கண்மங்கையர்
குளிப்பன மணற்கேணி. 35
சுழிப் புனல் கடல் ஓதமுன்
சூழ்ந்து கொண்டு அணிய
வழிக் கரைப் பொதி
பொன்னவிழ்ப்பன மலர்ப் புன்னை
விழிக்கு நெய்தலின் விரை
மலர்க் கட்சுரும்பு உண்ணக்
கழிக்கரைப் பொதி சோறு
அவிழ்ப்பன மடற்கைதை. 36
காயல் வண் கரைப் புரை
நெறி அடைப்பன கனி முட்
சேய தண்ணறுஞ் செழுமுகை
செறியும் முண்டகங்கள்
ஆய நுண் மணல்
வெண்மையை மறைப்பன அன்னம்
தாய முன்றுறைச் சூழல்
சூழ் ஞாழலின் தாது. 37
வாம் பெருந் திரைவளாக முன்
குடி பயில் வரைப்பில்
தாம் பரப்பிய கயல்களின்
விழிக் கயல் தவிரக்
காம்பி நேர் வருந் தோளியர்
கழிக் கயல் விலை செய்
தேம் பொதிந்த சின் மழலை
மென் மொழிய செவ்வழி யாழ். 38
மருட்கொடுந் தொழில் மன்னவன்
இறக்கிய வரியை
நெருக்கி முன் திருவொற்றியூர்
நீங்க என்று எழுதும்
ஒருத்தர் தம் பெரும் கோயிலின்
ஒரு புறம் சூழ்ந்த
திருப் பரப்பையும் உடைய அத்
திரைக் கடல் வரைப்பு. 39
மெய் தரும் புகழ்த் திரு
மயிலா புரி விரை சூழ்
மொய் தயங்கு தண்
பொழில் திருவான்மியூர் முதலாப்
பை தரும் பணி அணிந்தவர்
பதி எனைப் பலவால்
நெய்தல் எய்த முன் செய்த
அந்நிறை தவம் சிறிதோ. 40
கோடு கொண்டு எழும் திரைக்
கடல் பவள மென் கொழுந்து
மாடு மொய் வரைச் சந்தனச்
சினை மிசை வளரும்
நீடு நெய்தலும் குறிஞ்சியும்
புணர்நிலம் பலவால்
ஆடு நீள் கொடி மாட
மா மல்லையே அனைய. 41
மலை விழிப்பன என வயல்
சேல் வரைப் பாறைத்
தலையுகைப்பவும் தளைச் செறு
விடை நெடுங் கருமான்
கலை குதிப்பன கரும்
பகட்டேர் நிகர்ப்பவுமாய்
அலை புனல் பணை
குறிஞ்சியோடு அணைவன அனேகம். 42
புணர்ந்த ஆனிரை புற விடைக்
குறு முயல் பொருப்பின்
அணைந்த வான் மதி முயலினை
இனம் என அணைந்து
மணங்கொள் கொல்லையில் வரகு
போர் மஞ்சனம் வரைக்கார்
இணைந்து முல்லையும் குறிஞ்சியும்
கலப்பன எங்கும். 43
கவரும் மீன் குவை
கழியவர் கானவர்க்கு அளித்து
சிவலும் சேவலும் மாறியும்
சிறு கழிச்சியர்கள்
அவரை ஏனலுக்கு எயிற்றியர்
பவள முத்து அளந்தும்
உவரி நெய்தலும் கானமும்
கலந்துள ஒழுக்கம். 44
அயல் நறும் புறவினில்
இடைச்சியர் அணி நடையும்
வியன் நெடும் பணை
உழத்தியர் சாயலும் விரும்பி
இயலும் அன்னமும் தோகையும்
எதிர் எதிர் பயில
வயலும் முல்லையும் இயைவன
பலவுள மருங்கு. 45
மீளும் ஓதமுன் கொழித்த
வெண் தரளமும் கமுகின்
பாளை உக்கவும் விரவலில்
பரத்தியர் பணை மென்
தோளும் உழத்தியர் மகளிர்
மாறாடி முன் தொகுக்கும்
நீளும் நெய்தலும் மருதமும்
கலந்துள நிலங்கள். 46
ஆய நானிலத்து அமைதியில்
தத்தமக்கு அடுத்த
மேய செய் தொழில் வேறு
பல் குலங்களின் விளங்கித்
தீய என்பன கனவிலும்
நினைவு இலாச் சிந்தைத்
தூய மாந்தர் வாழ் தொண்டை
நாட்டு இயல்பு சொல் வரைத்தோ. 47
இவ் வளம் தரு
பெரும் திருநாட்டிடை என்றும்
மெய் வளந் தரு
சிறப்பினால் உலகெலாம் வியப்ப
எவ்வுகங்களும் உள்ளது என்று
யாவரும் ஏத்தும்
கை விளங்கிய நிலையது
காஞ்சி மா நகரம். 48
ஆன தொல் நகர்
அம்பிகை தம் பெருமானை
மான அர்ச்சனை யால்
ஒரு காலத்து வழிபட்டு
ஊனமில் அறம் அனேகமும்
உலகுய்ய வைத்த
மேன்மை பூண்ட அப்
பெருமையை அறிந்தவா விளம்பில். 49
வெள்ளி மால்வரைக் கயிலையில்
வீற்று இருந்து அருளித்
துள்ளு வார் புனல் வேணியார்
அருள் செயத் தொழுது
தெள்ளு வாய்மையின் ஆகமத்
திறன் எலாம் தெரிய
உள்ளவாறு கேட்டு அருளினாள்
உலகை ஆளுடையாள். 50
எண்ணில் ஆகமம் இயம்பிய
இறைவர் தாம் விரும்பும்
உண்மை ஆவது பூசனை
என உரைத்து அருள
அண்ணலார் தமை அர்ச்சனை
புரிய ஆதரித்தாள்
பெண்ணின் நல்லவள் ஆயின
பெருந் தவக் கொழுந்து. 51
நங்கை உள் நிறை காதலை நோக்கி
நாயகன் திரு உள்ளத்து மகிழ்ந்தே
அங்கண் எய்திய முறுவலும் தோன்ற அடுத்தது
என் கொல் நின் பால் என வினவ
இங்கு நாத நீ மொழிந்த ஆகமத்தின்
இயல்பினால் உனை அர்ச்சனை புரியப்
பொங்குகின்றது என் ஆசை என்று இறைஞ்சி
போகமார்த்த பூண் முலையினாள் போற்ற. 52
தேவ தேவனும் அது திருவுள்ளஞ் செய்து
தென் திசை மிக்க செய் தவத்தால்
யாவரும் தனை அடைவது மண் மேல்
என்றும் உள்ளது காஞ்சி மற்று அதனுள்
மா அமர்ந்த நம் இருக்கையில் அணைந்து
மன்னு பூசனை மகிழ்ந்து செய்வாய் என்று
ஏவ எம் பெருமாட்டியும் பிரியா இசைவு
கொண்டு எழுந்து அருளுதற்கு இசைந்தாள். 53
ஏதமில் பலயோனி எண் பத்து
நான்கு நூறு ஆயிரந்தனுள் வைத்த
பேதமும் புரந்து அருளும் அக் கருணைப்
பிரான் மொழிந்த ஆகம வழி பேணிப்
போது நீர்மையில் தொழுதனள் போதப் பொருப்பில்
வேந்தனும் விருப்பில் வந்து எய்தி
மா தவம் புரிந்து அருளுதற்கு
அமைந்த வளத்தொடும் பரிசனங்களை விடுத்தான். 54
துன்னு பல்லுயிர் வானவர் முதலாச் சூழ்ந்து
உடன் செலக் காஞ்சியில் அணையத்
தன்னை நேர் வரும் பதும மா நாகம்
தம்பிராட்டி தாள் தலைமிசை வைத்தே
அன்னையாய் உலகு அனைத்தையும் ஈன்றாய்
அடியனேன் உறை பிலம் அதனிடையே
மன்னு கோயில் கொண்டு அருளுவாய் என்ன
மலை மடந்தை மற்று அதற்கு அருள் புரிந்து. 55
அங்கு மண் உலகத்து உயிர் தழைப்ப
அளவில் இன்பத்தின் அருட் கரு விருத்தித்
திங்கள் தங்கிய புரி சடையார்க்குத் திருந்து
பூசனை விரும்பினள் செய்ய
எங்கும் நாடவும் திரு விளையாட்டால் ஏக
மா முதல் எதிர்ப்படாது ஒழியப்
பொங்கு மா தவம் செய்து காண்பதற்கே
புரிவு செய்தனள் பொன் மலை வல்லி. 56
நெஞ்சம் ஈசனைக் காண்பதே விரும்பி
நிரந்தரம் திரு வாக்கினில் நிகழ்வது
அஞ்செழுத்துமே ஆக ஆளுடைய அம்மை
செம்மலர்க் கை குவித்தருளித்
தஞ்சம் ஆகிய அரும் தவம் புரியத்
தரிப்பரே அவள் தனிப் பெருங் கணவர்
வஞ்சம் நீக்கிய மாவின் மூலத்தில் வந்து
தோன்றினார் மலை மகள் காண. 57
கண்ட போதில் அப்பெரும் தவப் பயனாம்
கம்பம் மேவிய தம் பெருமானை
வண்டு உலாங் குழல் கற்றை முன் தாழ
வணங்கி வந்து எழும் ஆசை முன் பொங்கக்
கொண்ட காதலின் விருப்பளவு இன்றிக்
குறித்த பூசனை கொள்கை மேற் கொண்டு
தொண்டையங்கனி வாய் உமை நங்கை
தூய அர்ச்சனை தொடங்குதல் புரிவாள். 58
உம்பர் நாயகர் பூசனைக்கு அவர் தாம்
உரைத்த ஆகமத்து உண்மையே தலை நின்று
எம் பிராட்டி அர்ச்சனை புரிவதனுக்கு
இயல்பில் வாழ் திருச் சேடியரான
கொம்பனார்கள் பூம் பிடகை கொண்டு அணையக்
குலவு மென் தளிர் அடி இணை ஒதுங்கி
அம்பிகாவன மாந்திருவனத்தில் ஆன தூ
நறும் புது மலர் கொய்தாள். 59
கொய்த பன்மலர் கம்பை மா நதியில்
குலவு மஞ்சனம் நிலவு மெய்ப் பூச்சு
நெய் தரும் கொழும் தூப தீபங்கள்
நிறைந்த சிந்தையில் நீடிய அன்பின்
மெய் தரும்படி வேண்டின எல்லாம் வேண்டும்
போதினில் உதவ மெய்ப் பூசை
எய்த ஆகம விதி எலாம் செய்தாள்
உயிர்கள் யாவையும் ஈன்ற எம் பிராட்டி. 60
கரந்தரும் பயன் இது என உணர்ந்து
கம்பம் மேவிய உம்பர் நாயகர்பால்
நிரந்த காதல் செய் உள்ளத்தளாகி
நீடு நன்மைகள் யாவையும் பெருக
வரம் தரும் பொருளாம் மலை வல்லி
மாறிலா வகை மலர்ந்த பேரன்பால்
சிரம் பணிந்து எழு பூசை நாள்
தோறும் திரு உளம் கொளப் பெருகியது அன்றே. 61
நாதரும் பெரு விருப்பொடு நயந்து
நங்கை அர்ச்சனை செய்யும் அப்பொழுதில்
காதல் மிக்கதோர் திரு விளையாட்டில்
கனங்குழைக்கு அருள் புரிந்திட வேண்டி
ஓத மார் கடல் ஏழும் ஒன்று
ஆகி ஓங்கி வானமும் உட்படப் பரந்து
மீது செல்வது போல் வரக் கம்பை
வெள்ளம் ஆம் திரு உள்ளமும் செய்தார். 62
அண்ணலார் அருள் வெள்ளத்தை நோக்கி அம்
கயல் கண்ணி தம் பெருமான் மேல்
விண் எலாம் கொள வரும் பெரு வெள்ளம்
மீது வந்துறும் என வெருக் கொண்டே
உண்ணிலாவிய பதைப்புறு காதலுடன் திருக்
கையால் தடுத்தும் நில்லாமை
தண்ணிலா மலர் வேணியினாரைத் தழுவி
கொண்டனள் தன்னையே ஒப்பாள். 63
மலைக் குலக் கொடி பரிவுறு பயத்தால்
மாவின் மேவிய தேவ நாயகரை
முலைக்குவட்டொடு வளைக் கையால் நெருக்கி
முறுகு காதலால் இறுகிடத் தழுவச்
சிலைத் தனித் திருநுதல் திரு முலைக்கும்
செந் தளிர்க் கரங்களுக்கும் மெத்தெனவே
கொலைக் களிற்றுரி புனைந்த தம் மேனி
குழைந்து காட்டினார் விழைந்த கொள்கையினார். 64
கம்பர் காதலி தழுவ மெய் குழையக்
கண்டு நிற்பவும் சரிப்பவும் ஆன
உம்பரே முதல் யோனிகள் எல்லாம்
உயிரும் யாக்கையும் உருகி ஒன்றாகி
எம் பிராட்டிக்கு மெல்லியர் ஆனார் என்றும்
ஏகம்பர் என்று எடுத்து ஏத்த
வம்புலா மலர் நிறைய விண் பொழியக்
கம்பையாறு முன் வணங்கியது அன்றே. 65
பூதியாகிய புனித நீர் ஆடிப் பொங்கு
கங்கை தோய் முடிச் சடை புனைந்து
காதில் வெண் குழை கண்டிகை தாழக்
கலந்த யோகத்தின் மருவிய கருத்தால்
ஆதி தேவனாராயுமாதவஞ் செய் அவ்
வரங்கொலோ அகிலம் ஈன்று அளித்த
மாது மெய்ப் பயன் கொடுப்பவே கொண்டு
வளைத் தழும்புடன் முலைச் சுவடு அணிந்தார். 66
கோதிலா அமுது அனையவள் முலைக் குழைந்த
தம் மணவாள நல் கோலம்
மாது வாழவே காட்டி முன் நின்று
வரங்கள் வேண்டுவ கொள்க என்று அருள
வேத காரணராய ஏகம்பர் விரை மலர்ச்
செய்ய தாமரைக் கழல் கீழ்
ஏதம் நீங்கிய பூசனை முடிந்த
தின்மை தான் அறிவிப்பதற்கு இறைஞ்சி. 67
அண்டர் நாயகர் எதிர் நின்று கூறும்
அளவினால் அஞ்சி அஞ்சலி கூப்பிக்
கொண்ட இற்றை என் பூசனை இன்னும்
குறை நிரம்பிடக் கொள்க என்று அருள
வண்டு வார் குழல் மலை மகள் கமல
வதனம் நோக்கி அம்மலர்க் கண் நெற்றியின் மேல்
முண்ட நீற்றர் நின் பூசனை என்றும்
முடிவதில்லை நம் பால் என மொழிய. 68
மாறிலாத இப் பூசனை என்றும் மன்ன
எம்பிரான் மகிழ்ந்து கொண்டு அருளி
ஈறிலாத இப்பதியினுள் எல்லா அறமும் யான்
செய அருள் செய வேண்டும்
வேறு செய் வினை திருவடிப் பிழைத்தல்
ஒழிய இங்கு உளார் வேண்டின செயினும்
பேறு மாதவப் பயன் கொடுத்து அருளப்
பெறவும் வேண்டும் என்றனள் பிறப்பு ஒழிப்பாள். 69
விடையின் மேலவர் மலைமகள் வேண்ட
விரும்பு பூசனை மேவி வீற்றிருந்தே
இடையறா அறம் வளர்க்கும் வித்தாக இக
பரத் திரு நாழி நெல் அளித்துக்
கடையர் ஆகியும் உயர்ந்தவராயும் காஞ்சி
வாழ்பவர் தாம் செய் தீவினையும்
தடைபடாது மெய்ந் நெறி அடைவதற்காம்
தவங்களாகவும் உவந்து அருள் செய்தார். 70
எண்ண அரும் பெரும் வரங்கள் முன் பெற்ற
அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருள
மண்ணின் மேல் வழிபாடு செய்து அருளி
மனை அறம் பெருக்கும் கருணையினால்
நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்க்கைப்
புண்ணிய திருக் காம கோட்டத்துப் பொலிய
முப்பதோடு இரண்டு அறம் புரக்கும். 71
அலகில் நீள் தவத்து அறப் பெரும் செல்வி
அண்டமாம் திரு மனைக்கு இடும் தீபம்
உலகில் வந்து உறு பயன் அறிவிக்க
ஓங்கும் நாள் மலர் மூன்றுடன் ஒன்று
நிலவ ஆண்டினுக்கு ஒரு முறை செய்யும்
நீடு தொன்மையால் நிறைந்த பேருலக
மலர் பெரும் திருக் காம கோட்டத்து
வைத்த நல்லறம் மன்னவே மன்னும். 72
தீங்கு தீர்க்கும் நல் தீர்த்தங்கள் போற்றும்
சிறப்பினால் திருக் காமக் கோட்டத்தின்
பாங்கு மூன்றுலகத்தில் உள்ளோரும் பரவு
தீர்த்தமாம் பைம் புனற்கேணி
வாங்கு தெண் திரை வேலை மேகலை
சூழ் வையகம் தனக்கு எய்திய படியாய்
ஓங்கு தன் வடிவாய் நிகழ்ந்து என்றும்
உள்ளது ஒன்று உலகாணி என்று உளதால். 73
அந்தம் இன்றி நல் அறம் புரிந்து அளிக்கும்
அன்னை தன் திருக் காமக் கோட்டத்தில்
வந்து சந்திர சூரியர் மீது வழிக்
கொள்ளாத தன் மருங்கு போதலினால்
சந்த மாதிர மயங்கி எம் மருங்கும்
சாயை மாறிய தன் திசை மயக்கம்
இந்த மாநிலத்தவர் எலாம் காண என்றும்
உள்ளது ஒன்று இன்றும் அங்கு உளதால். 74
கன்னி நன்னெடுங் காப்புடை வரைப்பில்
காஞ்சியாம் திரு நதிக் கரை மருங்கு
சென்னியிற் பிறை அணிந்தவர் விரும்பும் திருப்
பெரும் பெயர் இருக்கையில் திகழ்ந்து
மன்னு வெங் கதிர் மீது எழும் போதும்
மறித்து மேற் கடல் தலை விழும் போதும்
தன்னிழல் பிரியாத வண் காஞ்சித்
தானம் மேவிய மேன்மையும் உடைத்தால். 75
மறைகளால் துதித்து அரும் தவம் புரிந்து
மாறிலா நியமம் தலை நின்று
முறைமையால் வரும் பூசனை செய்ய முனிவர்
வானவர் முதல் உயிர் எல்லாம்
நிறையும் அன்பினால் அர்ச்சனை செய்ய நீடு
காமங்கள் அவர் அவர்க்கு அருளி
இறைவர் தாம் மகிழ்ந்து அருளிய பதிகள்
எண்ணிறந்த அத் திரு நகர் எல்லை. 76
மன்னு கின்ற அத் திருநகர் வரைப் பின்
மண்ணில் மிக்கதோர் நன்மை யினாலே
துன்னும் யானையைத் தூற்றில் வாழ் முயல் முன்
துரக்க எய்திய தொலைவு இல் ஊக்கத்தால்
தன்னிலத்து நின்று அகற்றுதல் செய்யும்
தானம் அன்றியும் தனு எழும் தரணி
எந் நிலத்தினும் காண்பரும் இறவாத் தானம்
என்று இவை இயல்பினில் உடைத்தால். 77
ஈண்டு தீவினை யாவையும் நீக்கி
இன்பமே தரும் புண்ணிய தீர்த்தம்
வேண்டினார் தமக்கு இட்ட சித்தியதாய் விளங்கு
தீர்த்தம் நன் மங்கல தீர்த்தம்
நீண்ட காப்புடைத் தீர்த்தம் மூன்று உலகில்
நிகழ்ந்த சாருவ தீர்த்தமு முதலா
ஆண்டு நீடிய தீர்த்தம் எண்ணிலவும்
அமரர் நாட்டவர் ஆடுதல் ஒழியார். 78
தாளது ஒன்றினில் மூன்று பூ மலரும்
தமனியச் செழும் தாமரைத் தடமும்
நீள வார் புனல் குடதிசை ஓடி
நீர் கரக்கு மா நதியுடன் நீடு
நாள் அலர்ந்து செங்குவளை பைங் கமலம்
நண்பகல் தரும் பாடலம் அன்றிக்
காள மேகம் ஒப்பாள் உறை வரைப்பில்
கண் படாத காயாப் புளி உளதால். 79
சாயை முன் பிணிக்கும் கிணறு ஒன்று
தஞ்சம் உண்ணின் நஞ்சாந்தடம் ஒன்று
மாயை இன்றி வந்துள்ளடைந்தார்கள் வானரத்து
உருவாம் பிலம் ஒன்று
மேய அவ்வுரு நீங்கிடக் குளிக்கும்
விளங்கு பொய்கையும் ஒன்று விண்ணவரோடு
ஆய இன்பம் உய்க்கும் பிலம் ஒன்றோடு
அனைய ஆகிய அதிசயம் பலவால். 80
அஞ்சு வான் கரத்தாறு இழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரை இருள் திரியும்
மஞ்சு நீள்வது போலும் மா மேனி
மலர்ப் பதங்களில் வண் சிலம்பு ஒலிப்ப
நஞ்சு பில்கு எயிற்று அரவ வெற்றரையின்
நாம மூன்றிலைப் படை உடைப் பிள்ளை
எஞ்சல் இன்றி முன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும். 81
சத்தி தற் பரசித்தி யோகிகளும்
சாதகத் தனித் தலைவரும் முதலா
நித்தம் எய்திய ஆயுள் மெய்த் தவர்கள்
நீடுவாழ் திருப் பாடியும் அனேகம்
சித்தர் விஞ்சையர் இயக்கர் கந்தருவர்
திகழ்ந்து மன்னுவார் செண்டுகை ஏந்தி
வித்தகக் கரி மேற் கொளும் காரி மேவும்
செண்டு அணை வெளியும் ஒன்று உளதால். 82
வந்து அடைந்தவர் தம் உரு மாய
மற்று உளாரைத் தாம் காண்பிடம் உளது
சிந்தை யோகத்து முனிவர் யோகினிகள் சேரும்
யோக பீடமும் உளது என்றும்
அந்தமில் அறம் புரப்பவள் கோயில்
ஆன போக பீடமும் உளதாகும்
எந்தையார் மகிழ் காஞ்சி நீடு எல்லை
எல்லை இல்லன உள்ள ஆர் அறிவார். 83
தூண்டு சோதி ஒன்று எழுந்து இருள் துரக்கும்
சுரர்கள் வந்து சூழ் உருத்திர சோலை
வேண்டினார்கள் தம் பிறப்பினை ஒழிக்கும்
மெய்ந் நெறிக் கணின்றார்கள் தாம் விரும்பித்
தீண்டில் யாவையும் செம் பொன் ஆக்குவது
ஓர் சிலையும் உண்டு உரை செய்வதற்கு அரிதால்
ஆண்ட நாயகி சமயங்கள் ஆறும் அகில
யோனியும் அளிக்கும் அந் நகரம். 84
என்றும் உள்ள இந் நகர் கலியுகத்தில்
இலங்கு வேற்கரிகால் பெருவளத்தோன்
வன் திறற்புலி இமயமால் வரை மேல்
வைக்க ஏகுவோன் தனக்கு இதன் வளமை
சென்று வேடன் முன் கண்டு உரை செய்யத்
திருந்து காத நான்கு உட்பட வகுத்துக்
குன்று போலும் மா மதில் புடை போக்கிக்
குடி இருத்தின கொள்கையின் விளங்கும். 85
தண் காஞ்சி மென் சினைப் பூம் கொம்பர் ஆடல் சார்ந்து
அசைய அதன் மருங்கு சுரும்பு தாழ்ந்து
பண் காஞ்சி இசை பாடும் பழன வேலிப்
பணை மருதம் புடை உடைத்தாய்ப் பாரில் நீடும்
திண் காஞ்சி நகர் நொச்சி இஞ்சி சூழ்ந்த
செழும் கிடங்கு திரு மறைகள் ஒலிக்கும் தெய்வ
வண் காஞ்சி அல்குல் மலை வல்லி காக்க
வளர் கருணைக் கடல் உலகம் சூழ்ந்தால் மானும். 86
கொந்தலர் பூங் குழல் இமயக் கொம்பு கம்பர்
கொள்ளும் பூசனை குறித்த தானம் காக்க
மந்திர மா மதில் அகழி அவர் தாம் தந்த
வாய்மை ஆகம விதியின் வகுப்புப் போலும்
அந்தமில் சீர்க் காஞ்சியை வந்து அடைந்தார்க்கு
அன்றி அடைகளங்கம் அறுப்பர் என்றுஅறிந்து சூழ
வந்து அணைந்து தன் கறுப்பும் உவர்ப்பும் நீக்கும்
மா கடலும் போலும் மலர்க் கிடங்கு மாதோ. 87
ஆங்கு வளர் எயிலினுடன் விளங்கும் வாயில்
அப்பதியில் வாழ் பெரியோர் உள்ளம் போல
ஓங்கு நிலைத் தன்மையவாய் அகிலம் உய்ய
உமைபாகர் அருள் செய்த ஒழுக்கம் அல்லால்
தீங்கு நெறி அடையாத தடையும் ஆகிச்செந்
நெறிக்கண் நிகழ் வாய்மை திருந்து மார்க்கம்
தாங்குலவ நிலவி வளர் ஒளியால் என்றும்
தட நெடுவான் அளப்பன வாம் தகைய வாகும். 88
மாறு பெறல் அரும் கனக மாடம் நீடு மணி
மறுகும் நெடும் தெருவும் வளத்தில் வந்த
ஆறு பயில் ஆவண வீதிகளும் மற்றும் அமைந்த
நகர் அணி வரைகள் நடுவு போக்கிக்
கூறுபடு நவ கண்டம் அன்றி மல்கக்
கொண்ட அனேகம் கண்டம் ஆகி அன்ன
வேறு ஒரு மண் உலகு தனில் உளதாம் என்ன
விளங்கியு மா லோக நிலை மேவிற்று அன்றே. 89
பாகம் மருங்கு இரு புடையும் உயர்ந்து நீண்ட
படர் ஒளி மாளிகை நிரைகள் பயில் மென் கூந்தல்
தோகையர் தம் குழாம் அலையத் தூக்கு முத்தின்
சுடர்க் கோவைக் குளிர் நீர்மை துதைந்த வீதி
மாகமிடை ஒளி தழைப்ப மன்னி நீடு
மருங்கு தாரகை அலைய வரம்பில் வண்ண
மேகமிடை கிழித்து ஒழுகும் தெய்வக் கங்கை மேல்
நதிகள் பல மண் மேல் விளங்கி ஒக்கும். 90
கிளர் ஒளிச் செங்கனக மயந்தானாய் மாடு
கீழ் நிலையோர் நீலச் சோபானம் பூணக்
கொள அமைத்து மீது ஒருபால் கன்ன
சாலை குல வயிரத்தால் அமைத்த கொள்கையாலே
அளவில் சுடர்ப் பிழம்பு ஆனார் தம்மைத் தேடி
அகழ்ந்து ஏனம் ஆனானும் அன்னம் ஆகி
வளர் விசும்பில் எழுந்தானும் போல நீடு
மாளிகையும் உள மற்று மறுகு தோறும். 91
மின் பொலி பன் மணி மிடைந்த தவள மாடம்
மிசைப் பயில் சந்திர காந்தம் விசும்பின் மீது
பொன் புரையும் செக்கர் நிறப் பொழுது தோன்றும்
புனிற்றி மதி கண்டு உருகிப் பொழிந்த நீரால்
வன் புலியின் உரியாடைத் திரு ஏகம்பர்
வளர்சடையும் இளம் பிறையும் கண்டு கும்பிட்டு
அன்பு உருகி மெய் பொழியக் கண்ணீர்
வாரும் அடியவரும் அனையவுள அலகிலாத. 92
முகில் உரிஞ்சும் கொடி தொடுத்த முடிய
ஆகும் முழுப் பளிங்கின் மாளிகைக்கண்முற்றும் சுற்றும்
நிகரில் சரா சரங்கள் எல்லாம் நிழலினாலே
நிறைதலினால் நிறை தவஞ்செய் இமயப் பாவை
நகில் உழுத சுவடும் வளைத் தழும்பும்
பூண்ட நாயகனார் நான்கு முகற்குப் படைக்க நல்கும்
அகிலயோனிகள் எல்லாம் அமைத்து வைத்த அரும்
பெரும் பண்டார நிலை அனைய ஆகும். 93
பொன் களப மாளிகை மேல் முன்றில் நின்று
பூம் கழங்கு மணிப் பந்தும் போற்றி ஆடும்
வில் புருவக் கொடி மடவார் கலன்கள் சிந்தி
விழுவனவும் கெழுவு துணை மேவு மாதர்
அற்பு முதிர் கலவியினில் பரிந்து சிந்தும்
அணிமணி சேடியர் தொகுக்கும் அவையும் ஆகி
நற்கனக மழை அன்றிக் காஞ்சி எல்லை
நவமணி மாரியும் பொழியும் நாளும் நாளும். 94
பூ மகளுக்கு உறையுள் எனும் தகைய ஆன
பொன் மாடத் தரமியங்கள் பொலிய நின்று
மா மகரக் குழை மகளிர் மைந்தர் அங்கண்
வந்து ஏறுமுன் நறு நீர் வண்டல் ஆடத்
தூமணிப் பொன் புனை நாளத்துருத்தி வீசும்
சுடர்விடு செங்குங்கும நீர்த் துவலை தோய்ந்த
காமர் மணி நாசிகையின் மருங்கு தங்கும்
கருமுகில்கள் செம்முகில் களாகிக் காட்டும். 95
இமம் மலிய எடுத்த நெடு வரைகள் போல
இலங்கு சுதைத் தவள மாளிகை நீள் கோட்டுச்
சிமை அடையும் சோபான நிரையும் விண்ணும்
தெரிவு அரிய தூய்மையினால் அவற்றுள் சேர்ந்து
தமர் களுடன் இழிந்து ஏறும் மைந்தர் மாதர்
தங்களையும் விசும்பிடை நின்று இழியா நிற்கும்
அமரரையும் அரமகளிர் தமையும் வெவ்வேறு
அறிவரிதாம் தகைமையன அனேகம் அங்கண். 96
அரவ நெடுந் தேர் வீதி அருகு மாடத்து
அணிமணிக் கோபுரத்து அயலே வியல் வாய் நீண்ட
விரவு மரகதச் சோதி வேதித் திண்ணை விளிம்பின்
ஒளி துளும்பு முறைப் படி மீது ஏறும்
குரவலரும் குழல் மடவார் அடியில் ஊட்டும்
குழம்பு அடுத்த செம்பஞ்சின் சுவட்டுக் கோலம்
பரவை நெடும் தரங்கம் மிசை விளங்கித் தோன்றும்
பவள நறும் தளிர் அனைய பலவும் பாங்கர். 97
வேம்பு சினக் களிற்று அதிர்வும் மாவின் ஆர்ப்பும்
வியன் நெடுந் தேர்க் கால் இசைப்பும் விழவுஅறாத
அம் பொன் மணி வீதிகளில் அரங்கில் ஆடும்
அரிவையர் நூபுர ஒலியோடு அமையும் இம்பர்
உம்பரின் இந்திரன் களிற்றின் முழக்குந் தெய்வ உயர்
இரவி மாக் கலிப்பும் அயன் ஊர்தித் தேர்
பம்பிசையும் விமானத்துள் ஆடுந் தெய்வப்
பாவையர் நூபுர அரவத்துடனே பல்கும். 98
அருமறை அந்தணர் மன்னும் இருக்கையான
ஆகுதியின் புகை அடுத்த அம் பொன் மாடப்
பெரு மறுகு தொறும் வேள்விச் சாலை எங்கும்
பெறும் அவிப் பாகம் கொடுக்கும் பெற்றி மேலோர்
வருமுறைமை அழைக்க விடு மந்திரம் எம்மருங்கும்
வானவர் நாயகர் திரு ஏகம்பர் முன்றில்
திருமலி பொன் கோபுரத்து நெருங்கும் எல்லாத்
தேவரையும் அணித்தாகக் கொண்டு செல்லும். 99
அரசர் குலப் பெரும் தெருவும் தெற்றி முற்றத்து
ஆயுதங்கள் பயிலும் வியல் இடமும் அங்கண்
புரசை மதக் கரிகளொடு புரவி ஏறும்
பொற்புடைய வீதிகளும் பொலிய எங்கும்
விரை செய் நறுந்தொடை அலங்கல் குமரர் செய்யும்
வியப்புறு செய் தொழில் கண்டு விஞ்சை விண்ணோர்
நிரை செறியும் விமான ஊர்திகளின் மேலும்
நிலமிசையும் பல முறையும் நிரந்து நீங்கார். 100
வெயில் உமிழும் பன்மணிப் பூண் வணிக மாக்கள்
விரவு நிதி வளம் பெருக்கும் வெறுக்கை மிக்க
வயின் நிலவு மணிக் கடை மா நகர்கள்
எல்லாம் வனப்பு உடைய பொருட்குலங்கள் மலிதலாலே
கயிலை மலையார் கச்சி ஆலயங்கள் பலவும்
கம்பமுமேவிய தன்மை கண்டு போற்றப்
பயிலும் உருப்பல கொண்டு நிதிக் கோன்தங்கப்
பயில் அளகாபுரி வகுத்த பரிசு காட்டும். 101
விழவு மலி திருக் காஞ்சி வரைப்பின் வேளாண்
விழுக் குடிமை பெரும் செல்வர் விளங்கும் வேணி
மழ இள வெண் திங்கள் புனை கம்பர் செம்பொன்
மலைவல்லிக் களித் தவளர் உணவின் மூலம்
தொழ உலகு பெறும் அவள் தான் அருள
பெற்றுத் தொன்னிலத்து மன்னு பயிர் வேத வாய்மை
உழவுத் தொழிலால் பெருக்கி உயிர்கள் எல்லாம்
ஓங்க வரும் தரும வினைக்கு உளரால் என்றும். 102
ஓங்கிய நால் குலத்து ஒவ்வாப் புணர்வில்
தம்மில் உயர்ந்தனவும் இழிந்தனவும் ஆன சாதி
தாம் குழுமிப் பிறந்த குலபேதம் எல்லாம்தம்
தகைமைக்கு ஏற்ற தனி இடங்கள் மேவி
ஆங்கு நிறை கிளை பயின்று மரபின் ஆற்ற
அடுத்த வினைத் தொழிலின் முறைமை வழாமை நீடு
பாங்கு வளர் இருக்கை நிலை பலவும் எல்லாம்
பண்பு நீடிய உரிமைப் பால அன்றே. 103
ஆதி மூதெயில் அந் நகர் மன்னிய
சோதி நீள் மணித் தூபமும் தீபமும்
கோதில் பல்லியமும் கொடியும் பயில்
வீதி நாளும் ஒழியா விழா வணி. 104
வாயில் எங்கணும் தோரணம் மாமதில்
ஞாயில் எங்கணுஞ் சூழ் முகில் நாள்மதி
தோயில் எங்கணும் மங்கலம் தொண்டர் சூழ்
கோயில் எங்கணும் உம்பர் குலக் குழாம். 105
வேத வேதியர் வேள்வியே தீயன
மாதர் ஓதி மலரே பிணியன
காதல் வீதி விலக்கே கவலைய
சூத மாதவியே புறம் சூழ்வன. 106
சாயலார்கள் நுசுப்பே தளர்வன
ஆய மாடக் கொடியே அசைவன
சேய ஓடைக் களிறே திகைப்பன
பாய சோலைத் தருவே பயத்தன. 107
அண்ணலார் அன்பர் அன்பே முன் ஆர்த்தன
தண்ணறுஞ் செழுந்தாதே துகள்வன
வண்ண நீள் மணி மாலையே தாழ்வன
எண்ணில் குங்குமச் சேறே இழுக்கின. 108
வென்றி வானவர் தாம் விளையாடலும்
என்றும் உள்ளவர் வாழும் இயற்கையும்
நன்றும் உள்ளத்து நண்ணினர் வேட்கைகள்
ஒன்றும் அங்கு ஒழியா வகை உய்ப்பது. 109
புரம் கடந்தவர் காஞ்சி புரம் புகழ்
பரம்பு நீள் புவனம் பதி நான்கினும்
வரம்பில் போக வனப்பின் வளமெல்லாம்
நிரம்பு கொள்கலம் என்ன நிறைந்தலால். 110
அவ்வகைய திருநகரம் அதன் கண்
ஒரு மருங்குறைவார்
இவ்வுலகில் பிறப்பினால் ஏகாலிக்
குலத்துள்ளார்
செவ்விய அன்புடை மனத்தார்
சீலத்தின் நெறி நின்றார்
மை விரவு கண்டரடி வழித்
தொண்டர் உளர் ஆனார். 111
மண்ணின் மிசை வந்த அதற்பின்
மனம் முதல் ஆயின மூன்றும்
அண்ணலார் சேவடியின் சார்வாக
அணைவிப்பார்
புண்ணிய மெய்த் தொண்டர் திருக்
குறிப்பு அறிந்து போற்று நிலைத்
திண்மையினால் திருக் குறிப்புத்
தொண்டர் எனும் சிறப்பினார். 112
தேர் ஒலிக்க மா ஒலிக்கத்
திசை ஒலிக்கும் புகழ்க் காஞ்சி
ஊரொலிக்கும் பெரு வண்ணார்
எனவொண்ணா உண்மையினார்
நீரொலிக்க அரா இரைக்க
நிலா முகிழ்க்கும் திருமுடியார்
பேரொலிக்க உருகும் அவர்க்கு ஒலிப்பர்
பெரு விருப்பி னொடும். 113
தேசுடைய மலர்க் கமலச்
சேவடியார் அடியார்தம்
தூசுடைய துகள் மாசு கழிப்பார்
போல் தொல்லை வினை
ஆசுடைய மல மூன்றும் அணைய
வரும் பெரும் பிறவி
மாசு தனை விடக் கழித்து வரும்
நாளில் அங்கு ஒரு நாள். 114
பொன் இமயப் பொருப் பரையன்
பயந்து அருளும் பூங்கொடிதன்
நன்னிலைமை அன்று அளக்க எழுந்து
அருளும் நம் பெருமான்
தன்னுடைய அடியவர் தம்
தனித் தொண்டர் தம்முடைய
அந்நிலைமை கண்டு அன்பர்க்கு அருள்
புரிவான் வந்து அணைவார். 115
சீதமலி காலத்துத் திருக்
குறிப்புத் தொண்டர்பால்
ஆதுலராய் மெலிந்து மிக
அழுக்கு அடைந்த கந்தையுடன்
மாதவ வேடம் தாங்கி மால்
அறியா மலர் அடிகள்
கோதடையா மனத்தவர் முன் குறு
நடைகள் கொளக் குறுகி. 116
திருமேனி வெண்ணீறு திகழ்ந்து
ஒளிரும் கோலத்துக்
கரு மேகம் என அழுக்குக்
கந்தையுடன் எழுந்து அருளி
வருமேனி அருந் தவரைக் கண்டு
மனம் மகிழ்ந்து எதிர் கொண்டு
உருமேவும் மயிர்ப் புளகம்
உளவாகப் பணிந்து எழுந்தார். 117
எய்தும் அவர் குறிப்பு அறிந்தே
இன் மொழிகள் பல மொழிந்து
செய் தவத்தீர் திருமேனி இளைத்து
இருந்தது என் என்று
கை தொழுது கந்தையினைத் தந்து
அருளும் கழுவ என
மை திகழ் கண்டம் கரந்த
மாதவத்தோர் அருள் செய்வார். 118
இக் கந்தை அழுக்கு ஏறி
எடுக்க ஒணாது எனினும் யான்
மெய்க் கொண்ட குளிர்க் குடைந்து விட
மாட்டேன் மேல் கடல் பால்
அக் குன்றம் வெங்கதிரோன்
அணைவதன் முன் தருவீரேல்
கைக் கொண்டு போய் ஒலித்துக்
கொடுவாரும் கடிது என்றார். 119
தந்து அருளும் இக் கந்தை
தாழாதே ஒலித்து உமக்கு இன்று
அந்தி படுவதன் முன்னம்
தருகின்றேன் என அவரும்
கந்தை இது ஒலித்து உணக்கிக்
கடிது இன்றே தாரீரேல்
இந்த உடற்கு இடர் செய்தீர்
என்று கொடுத்து ஏகினார். 120
குறித்த பொழுதே ஒலித்துக்
கொடுப்பதற்குக் கொடு போந்து
வெறித் தடநீர்த் துறையின் கண்
மா செறிந்து மிகப் புழுக்கிப்
பிறித்து ஒலிக்கப் புகும் அளவில்
பெரும் பகல் போய்ப் பின்பகலாய்
மறிக்கரத்தார் திரு அருளால்
மழை எழுந்து பொழிந்திடுமால். 121
திசை மயங்க வெளியடைத்த செறி
முகிலின் குழாம் மிடைந்து
மிசை சொரியும் புனல் தாரை
விழி நுழையா வகை மிடைய
அசையுடைய மனத்து அன்பர் அறிவு
மறந்து அருந்தவர் பால்
இசைவு நினைந்து அழிந்து இனி யான்
என் செய்கேன் என நின்றார். 122
ஓவாதே பொழியு மழை ஒரு
கால் விட்டு ஒழியும் எனக்
காவாலி திருத் தொண்டர் தனி
நின்றார் விடக் காணார்
மேவார் போல் கங்குல் வர
மெய் குளிரும் விழுத்தவர் பால்
ஆ! ஆ! என் குற்றேவல்
அழிந்த வா என விழுந்தார். 123
விழுந்த மழை ஒழியாது
மெய்த்தவர் சொல்லிய எல்லை
கழிந்தது முன்பு ஒலித்து மனைக்கு
ஆற்று ஏற்க அறிந்திலேன்
செழும் தவர் தம் திருமேனி
குளிர் காணும் தீங்கு இழைத்த
தொழும்பனேற்கு இனி இதுவே செயல்
என்று துணிந்து எழுவார். 124
கந்தை புடைத்திட எற்றும்
கல்பாறை மிசைத் தலையைச்
சிந்த எடுத்து எற்றுவான் என்று
அணைந்து செழும் பாறை மிசைத்
தந்தலையைப் புடைத்து எற்ற
அப்பாறை தன் மருங்கு
வந்து எழுந்து பிடித்தது அணி
வளைத் தழும்பர் மலர்ச் செங்கை. 125
வான் நிறைந்த புனல் மழை போய்
மலர் மழையாய் இட மருங்கு
தேன் நிறைந்த மலர்
இதழித் திருமுடியார் பொருவிடையின்
மேல் நிறைந்த துணைவி யொடும்
வெளி நின்றார் மெய்த் தொண்டர்
தான் நிறைந்த அன்பு உருகக்
கை தொழுது தனி நின்றார். 126
முன் அவரை நேர் நோக்கி
முக் கண்ணர் மூவுலகும்
நின் நிலைமை அறிவித்தோம் நீயும்
இனி நீடிய நம்
மன்னுலகு பிரியாது வைகுவாய்
என அருளி
அந் நிலையே எழுந்து அருளி
அணி ஏகாம்பரம் அணைந்தார். 127
சீர் நிலவு திருக் குறிப்புத்
தொண்டர் திருத்தொழில் போற்றிப்
பார் குலவத் தந்தை தாள் அற
எறிந்தார் பரிசு உரைக்கேன்
பேர் அருளின் மெய்த் தொண்டர்
பித்தன் எனப் பிதற்றுதலால்
ஆருலகில் இதன் உண்மை அறிந்து
உரைக்க இசைந்து எழுவார். 128
திருச்சிற்றம்பலம்