பன்னிரண்டாம்-திருமுறை-பெரியபுராணம்

012 விறன்மிண்ட நாயனார் புராணம்

அ௫ளியவர் : சேக்கிழார்

  திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

விரை செய் நறும் பூந் தொடை இதழி 

  வேணியார் தம் கழல் பரவிப்

பரசுபெறு மா தவ முனிவன் 

  பரசு ராமன் பெறு நாடு

திரை செய் கடலின் பெருவளவனும் 

  திருந்து நிலனின் செழு வளனும்

வரையின் வளனும் உடன் பெருகி 

  மல்கு நாடு மலை நாடு.  1 

 

 

வாரி சொரியும் கதிர் முத்தும் 

  வயல்மென் கரும்பில் படு முத்தும்

வேரல் விளையும் குளிர் முத்தும் 

  வேழ மருப்பின் ஒளிர் முத்தும்

மூரல் எனச் சொல் வெண் முத்த 

  நகையார் தெரிந்து முறை கோக்கும்

சேரர் திரு நாட்டு ஊர்களின் 

  முன் சிறந்த மூதூர் செங்குன்றூர்.  2 

 

 

என்னும் பெயரின் விளங்கி உலகேறும் 

  பெருமை உடையது தான்

அன்னம் பயிலும் வயல் உழவின் 

  அமைந்த வளத்தால் ஆய்ந்த மறை

சொன்ன நெறியின் வழி ஒழுகும் 

  தூய குடிமைத் தலை நின்றார்

மன்னும் குலத்தின் மா மறை நூல் 

  மரபிற் பெரியோர் வாழ் பதியாம்.  3 

 

 

அப் பொற்  பதியினிடை வேளாண் 

  குலத்தை விளக்க அவதரித்தார்

செப்பற்கு அரிய பெரும் சீர்த்திச் 

  சிவனார் செய்ய கழல் பற்றி

எப் பற்றினையும் அற எறிவார் 

  எல்லை தெரிய ஒண்ணாதார்

மெய்ப் பத்தர்கள் பால் பரிவுடையார் 

  எம்பிரானார் விறன் மிண்டர்.  4 

 

 

நதியும் மதியும் புனைந்த சடை 

  நம்பர் விரும்பி நலம் சிறந்த

பதிகள் எங்கும் கும்பிட்டுப் படரும் 

  காதல் வழிச் செல்வார்

முதிரும் அன்பில் பெரும் தொண்டர் 

  முறைமை நீடு திருக் கூட்டத்து

எதிர் முன் பரவும் அருள் பெற்றே

   இறைவர் பாதம் தொழப் பெற்றார்.  5 

 

 

பொன் தாழ் அருவி மலைநாடு கடந்து 

  கடல் சூழ் புவி எங்கும்

சென்று ஆள் உடையார் அடியவர் தம் 

  திண்மை ஒழுக்க நடை செலுத்தி

வன் தாள் மேருச் சிலை வளைத்துப் 

  புரங்கள் செற்ற வைதிகத் தேர்

நின்றார் இருந்த திருவாரூர் பணிந்தார் 

  நிகர் ஒன்று இல்லாதார்.  6 

 

 

திருவார் பெருமை திகழ்கின்ற 

  தேவாசிரிய னிடைப் பொலிந்து

மருவா நின்ற சிவனடியார் தம்மைத் 

  தொழுது வந்து அணையாது

ஒருவாறு ஒதுங்கும் வன் தொண்டன் புறகென்று 

  உரைப்பச் சிவன் அருளால்

பெருகா நின்ற பெரும் பேறு பெற்றார் 

  மற்றும் பெற நின்றார்.  7 

 

 

சேண் ஆர் மேருச் சிலை வளைத்த 

  சிவனார் அடியார் திருக்கூட்டம்

பேணாது ஏகும் ஊரனுக்கும் பிரானாம் 

  தன்மைப் பிறை சூடிப்

பூணார் அரவம் புனைந்தார்க்கும் புறகு என்று 

  உரைக்க மற்றவர் பால்

கோணா அருளைப் பெற்றார் மற்று 

  இனியார் பெருமை கூறுவார்.  8 

 

 

ஞாலம் உய்ய நாம் உய்ய நம்பி 

  சைவ நன் னெறியின்

சீலம் உய்யத் திருத் தொண்டத் தொகை முன் 

  பாடச் செழு மறைகள்

ஓலம் இடவும் உணர்வு அரியார் 

  அடியா ருடனாம் உளது என்றால் 

ஆலம் அமுது செய்த பிரான் 

  அடியார் பெருமை அறிந்தாரார்.  9 

 

 

ஒக்க நெடு நாள் இவ் உலகில் 

  உயர்ந்த சைவப் பெருந் தன்மை

தொக்க நிலைமை நெறி போற்றித் 

  தொண்டு பெற்ற விறன் மிண்டர்

தக்க வகையால் தம் பெருமான் 

  அருளினாலே தாள் நிழற்கீழ்

மிக்க கண நாயகர் ஆகும் 

  தன்மை பெற்று விளங்கினார்.  10 

 

 

வேறு பிறிதென் திருத் தொண்டத் 

  தொகையால் உலகு விளங்க வரும்

பேறு தனக்குக் காரணராம் பிரானார் 

  விறன் மிண்டரின் பெருமை

கூறும் அளவு என் அளவிற்றே அவர் 

  தாள் சென்னி மேற் கொண்டே

ஆறை வணிகர் அமர் நீதி 

  அன்பர் திருத் தொண்டு அறைகுவாம்.  11 

திருச்சிற்றம்பலம்

மேலும்

மானக்கஞ்சாற நாயனார்
View Details
சீரியா சிலம்பாக்கினி சித்தர்
View Details
குலச்சிறை நாயனார்
View Details