அ௫ளியவர் : சேக்கிழார்
திருமுறை : பன்னிரண்டாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்;
நிலவு லாவிய நீர்மலி வேணியன்,
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம். 1
ஊன் அடைந்த உடம்பின் பிறவியே
தான் அடைந்த உறுதியைச் சாருமால்
தேன் அடைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாநடஞ் செய்வரதர் பொற்றாள் தொழ. 2
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நீள்முடிக்
கடக் களிற்றைக் கருத்துள் இருத்துவாம். 3
மதிவளர் சடைமுடி மன்று ளாரைமுன்
துதிசெயும் நாயன்மார் தூய சொல்மலர்ப்
பொதிநலன் நுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே. 4
அளவி லாத பெருமை யராகிய
அளவிலா அடியார் புகழ் கூறுகேன்
அளவுகூட உரைப்பது அரிது ஆயினும்
அளவி லாசை துரப்ப அறைகுவேன். 5
தெரிவரும் பெருமைத் திருத்தொண் டர்தம்
பொருவரும் சீர்புகல லுற்றேன் முற்றப்
பெருகு தெண்கடல் ஊற்றுண் பெருநசை
ஒருசு ணங்கனை ஒக்கும் தகைமையேன். 6
செப்ப லுற்ற பொருளின் சிறப்பினால்
அப்பொ ருட்குஉரை யாவரும் கொள்வரால்
இப்பொ ருட்குஎன் உரைசிறிது ஆயினும்
மெய்ப்பொ ருட்குஉரியார் கொள்வர் மேன்மையால். 7
மேயஇவ் உரை கொண்டு விரும்புமாம்
சேயவன் திருப் பேரம்பலம் செய்ய
தூயபொன் னணிசோழன் நீடூ ழிபார்
ஆயசீர் அநபா யன்அர சவை. 8
அருளின் நீர்மைத் திருத்தொண் டறிவரும்
தெருளில் நீரிதுசெப்பு தற்காம் எனின்
வெருளில் மெய்ம்மொழி வான்நிழல் கூறிய
பொருளின் ஆகும்எனப் புகல்வாம் அன்றே. 9
இங்கிதன் நாமம்கூறின் இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டின்மாக்கள் சிந்தையுள் சார்ந்துநின்ற
பொங்கிய இருளைஏனைப் புறஇருள் போக்குகின்ற
செங்கதிர வன்போல்நீக்கும் திருத்தொண்டர் புராணம்என்பாம். 10
திருச்சிற்றம்பலம்