அ௫ளியவர் : திருஆலவாய் உடையார்
திருமுறை : பதினொன்றாம் திருமுறை
திருச்சிற்றம்பலம்
பூவார் திருநுதல்மேல்
பொற்சுட்டி இட்டொளிரக்
கோவாக் குதலை
சிலம்புரற்ற - ஓவா
தழுவான் பசித்தானென்
றாங்கிறைவன் காட்டத்
தொழுவான் துயர்தீர்க்குந்
தோகை - வழுவாமே
முப்பத் திரண்டறமுஞ்
செய்தாள் முதிராத. 1
செப்பொத்த கொங்கைத்
திருநுதலி - அப்பன்
அருளாலே ஊட்டுதலும்
அப்பொழுதே ஞானத்
திரளாகி முன்னின்ற
செம்மல் - இருள்தீர்ந்த
காழி முதல்வன்
கவுணியர்தம் போரேறு
ஊழி முதல்வன்
உவனென்று காட்டவலான். 2
வீழி மிழலைப்
படிக்காசு கொண்டபிரான்
பாழி அமணைக்
கழுவேற்றி னான்பாணர்
யாழை முரித்தான்
எரிவாய் இடும்பதிகம்
ஆழி உலகத்
தழியாமற் காட்டினான்
ஏழிசை வித்தகன்வந்
தேனோரும் வானோரும். 3
தாழுஞ் சரணச்
சதங்கைப் பருவத்தே
பாலையும் நெய்தலும்
பாடவலான் - சோலைத்
திருவா வடுதுறையிற்
செம்பொற் கிழியொன்
றருளாலே பெற்றருளும்
ஐயன் - தெருளாத
தென்னவன்நா டெல்லாம்
திருநீறு பாலித்த . 4
மன்னன் மருகல்விடம்
தீர்த்தபிரான் பின்னைத்தென்
கோலக்கா வில்தாளம்
பெற்றிக் குவலயத்தில்
மாலக்கா லத்தே... ...
மாற்றினான் - ஞாலத்து
முத்தின் சிவிகை
அரன்கொடுப்ப முன்னின்று
தித்தித்த பாடல்
செவிக்களித்தான் -நித்திலங்கள். 5
மாடத் தொளிரும்
மறைக்காட் டிறைக்கதவைப்
பாடி அடைப்பித்த
பண்புடையான் - நீடும்
திருவோத்தூர் ஆண்பனையைப்
பெண்பனையா கென்னும்
பெருவார்த்தை தானுடைய
பிள்ளை - மருவினிய
கொள்ளம்பூ தூர்க்குழகன்
நாவா யதுகொடுப்ப. 6
உள்ளமே கோலாக
ஊன்றினான் - வள்ளல்
மழவன் சிறுமதலை
வான்பெருநோய் தீர்த்த
குழகன் குலமறையோர்
கோமான் - நிலவிய
வைகையாற் றேடிட்டு
வானீர் எதிரோட்டும்
செய்கையால் மிக்க
செயலுடையான் - வெய்யவிடம். 7
மேவி இறந்தஅயில்
வேற்கண் மடமகளை
வாவென் றழைப்பித்திம்
மண்ணுலகில் வாழ்வித்த
சீர்நின்ற செம்மைச்
செயலுடையான் நேர்வந்த
புத்தன் தலையைப்
புவிமேற் புரள்வித்த
வித்தகப் பாடல்
விளம்பினான் - மொய்த்தொளிசேர் . 8
கொச்சைச் சதுரன்றன்
கோமானைத் தான்செய்த
பச்சைப் பதிகத்
துடன்பதினா றாயிரம்பா
வித்துப் பொருளை
விளைக்க வலபெருமான்
முத்திப் பகவ
முதல்வன் திருவடியை
அத்திக்கும் பத்தரெதிர்
ஆணைநம தென்னவலான். 9
கத்தித் திரிபிறவிச்
சாகரத்துள் ஆழாமே
பத்தித் தனித்தெப்பம்
பார்வாழத் தந்தபிரான்
பத்திச் சிவமென்று
பாண்டிமா தேவியொடும்
கொற்றக் கதிர்வேல்
குலச்சிறையுங் கொண்டாடும்
அற்றைப் பொழுதத்
தமணரிடு வெந்தீயைப். 10
பற்றிச் சுடுகபோய்ப்
பாண்டியனை என்னவல்லான்
வர்த்தமா னீசர்
கழல்வணங்கி வாழ்முருகன்
பத்தியை ஈசன்
பதிகத்தே காட்டினான்
அத்தன் திருநீல
நக்கற்கும் அன்புடையான்
துத்த மொழிக்குதலைத்
தூயவாய் நன்னுதலி. 11
நித்திலப் பூண்முலைக்கும்
நீண்டதடங் கண்ணினுக்கும்
கொத்தார் கருங்குழற்கும்
கோலச்செங் கைம்மலர்க்கும்
அத்தா மரையடிக்கும்
அம்மென் குறங்கினுக்கும்
சித்திரப்பொற் காஞ்சி
செறிந்தபேர் அல்குலுக்கும்
முத்தமிழ்நூல் எல்லாம்
முழுதுணர்ந்த பிள்ளையார்க். 12
கொத்த மணமிதுவென்
றோதித் தமர்கள்எல்லாம்
சித்தங் களிப்பத்
திருமணஞ்செய் காவணத்தே
அற்றைப் பொழுதத்துக்
கண்டுட னேநிற்கப்
பெற்றவர்க ளோடும்
பெருமணம்போய்ப் புக்குத்தன்
அத்தன் அடியே
அடைந்தான் அழகிதே. 13
திருச்சிற்றம்பலம்