முதல்-திருமுறை

111 அருத்தனை அறவனை

அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்

  திருமுறை : முதல் திருமுறை

  தலம் :  கடைமுடி

திருச்சிற்றம்பலம்

 

அருத்தனை அறவனை அமுதனைநீர்

விருத்தனைப் பாலனை வினவுதிரேல்

ஒருத்தனை யல்லதிங் குலகமேத்துங்

கருத்தவன் வளநகர் கடைமுடியே.  1 

 

திரைபொரு திருமுடி திங்கள்விம்மும்

அரைபொரு புலியதள் அடிகளிடந்

திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர்

கரைபொரு வளநகர் கடைமுடியே.  2 

 

ஆலிள மதியினொ டரவுகங்கை

கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி

ஏலநன் மலரொடு விரைகமழுங்

காலன வளநகர் கடைமுடியே.  3 

 

கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்

மையணி மிடறுடை மறையவனூர்

பையணி யரவொடு மான்மழுவாள்

கையணி பவனிடங் கடைமுடியே.  4 

 

மறையவன் உலகவன் மாயமவன்

பிறையவன் புனலவன் அனலுமவன்

இறையவன் எனவுல கேத்துங்கண்டங்

கறையவன் வளநகர் கடைமுடியே.  5 

 

படவர வேரல்குற் பல்வளைக்கை

மடவர லாளையொர் பாகம்வைத்துக்

குடதிசை மதியது சூடுசென்னிக்

கடவுள்தன் வளநகர் கடைமுடியே.  6 

 

பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்

அடிபுல்கு பைங்கழல் அடிகளிடங்

கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்

கடிபுல்கு வளநகர் கடைமுடியே.  7 

 

நோதல்செய் தரக்கனை நோக்கழியச்

சாதல்செய் தவனடி சரணெனலும்

ஆதர வருள்செய்த அடிகளவர்

காதல்செய் வளநகர் கடைமுடியே.  8 

 

அடிமுடி காண்கிலர் ஓரிருவர்

புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்

சடையிடைப் புனல்வைத்த சதுரனிடங்

கடைமுடி யதனயல் காவிரியே.  9 

 

மண்ணுதல் பறித்தலு மாயமிவை

எண்ணிய காலவை யின்பமல்ல

ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த

கண்ணுதல் வளநகர் கடைமுடியே.  10 

 

பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்

சென்றடை கடைமுடிச் சிவனடியை

நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன

இன்றமி ழிவைசொல இன்பமாமே. 11

 

திருச்சிற்றம்பலம்

மேலும்

அனாயா நாயனார்
View Details
சமணர் ஏவிய யானை வதம்
View Details
மெய்ப்பொருள் நாயனார்
View Details