பத்தாம்-திருமுறை

9ம் தந்திரம் - 08.4 பொற்பதிக் கூத்து

அ௫ளியவர் : திருமூலர்

  திருமுறை : பத்தாம் திருமுறை

திருச்சிற்றம்பலம்

 

தெற்கு வடக்குக் கிழக்குமேற்கு உச்சியில்

அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்

ஒப்பில்பே ரின்பத்து உபய உபயத்துள்

தற்பரன் நின்று தனிநடம் செய்யுமே.  1 

 

 

அடியார் அரனடி ஆனந்தம் கண்டோர்

அடியார் ஆனவர் அத்தருள் உற்றோர்

அடி ஆர்பவரே அடியவர் ஆமால்

அடியார்பொன் அம்பலத்து ஆடல்கண்டாரே.  2 

 

 

அடங்காத என்னை அடக்கி அடிவைத்து

இடம்காண் பரானந்தத் தேஎன்னை இட்டு

நடந்தான் செயும்நந்தி நன்ஞானக் கூத்தன்

படம்தான்செய்து உள்ளுள் படிந்திருந் தானே.  3 

 

 

உம்பரில் கூத்தனை உத்தமக் கூத்தனைச்

செம்பொன் திருமன்றுள் சேவகக் கூத்தனைச்

சம்பந்தக் கூத்தனைத் தற்பரக் கூத்தனை

இன்புற நாடிஎன் அன்பில்வைத் தேனே.  4 

 

 

மாணிக்கக் கூத்தனை வண்தில்லைக் கூத்தனைப்

பூணுற்ற மன்றுள் புரிசடைக் கூத்தனைச்

சேணுற்ற சோதிச் சிவானந்தக் கூத்தனை

ஆணிப்பொற் கூத்தனை யாருரைப் பாரே.  5 

 

 

விம்மும் வெருவும் விழும்எழும் மெய்சோரும்

தம்மையும் தாமறி யார்கள் சதுர்கெடும்

செம்மை சிறந்த திருஅம் பலக்கூத்துள்

அம்மலர்ப் பொற்பாதத்து அன்புவைப் பார்கட்கே.  6 

 

 

தேட்டறும் சிந்தை திகைப்பறும் பிண்டத்துள்

வாட்டறும் கால்புந்தி யாகி வரும்புலன்

ஓட்டறும் ஆசை அறும்உளத்து ஆனந்த

நாட்ட முறுக்குறும் நாடகங் காணவே.  7 

 

 

காளியோடு ஆடிக் கனகா சலத்துஆடிக்

கூளியோடு ஆடிக் குவலயத் தேஆடி

நீடிய நீர்தீகால் நீள்வான் இடையாடி

நாளுற அம்பலத் தேயாடும் நாதனே.  8 

 

 

மேரு நடுநாடி மிக்கிடை பிங்கலை

கூரும்இவ் வானின் இலங்கைக் குறியுறும்

சாரும் திலைவனத் தண்மா மலயத்தூடு

ஏறும் சுழுனை இவைசிவ பூமியே.  9 

 

 

பூதல மேருப் புறத்தான தெக்கணம்

ஓதும் இடைபிங் கலைஒண் சுழுனையாம்

பாதி மதியோன் பயில்திரு அம்பலம்

ஏதமில் பூதாண்டத்து எல்லையின் ஈறே.  10 

 

திருச்சிற்றம்பலம்